இது என்ன சொர்க்கம்
2
மந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக்
கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும்
சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து 'குக்கூ' 'குக்கூ'
என்று இனிய குரலில் பாடின.
மரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது.
சாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார்.
"என்ன, வியாக்ரபாத சாஸ்திரிகளே! புல்லைத் தின்கிறீர்களோ? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று?" என்று முதலியார் சொல்லி, 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.
"அதெல்லாம் பூலோகத்துப் பழமொழி! இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே?" என்று சாஸ்திரிகள் சொல்லி, 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தார்.
"பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்?"
"என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு? அமிர்தத்தைத் தவிர - வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது!"
"அமிர்தம் அலுத்துப் போய்விட்டதா? அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள்! பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் 'அமிர்தமாயிருக்கு' என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ? இனிமேல் சொல்ல மாட்டீரே."
"என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்! இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்...அமிர்தமாம்! அமிர்தம்!"
"பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை!"
"அடடா! நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா?"
"அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது?"
"வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும்! காப்பியைச் சொல்லும்! காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்."
இந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து 'குக்கூ' 'குக்கூ' என்று கத்திற்று.
"முதலியார்வாள்! இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா? இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா? கேட்கச் சகிக்கவில்லை."
"சாஸ்திரிகளே! பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது 'குயில்தான்' என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்?"
"அட சனியனே! அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே? அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்."
"இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன்! மகாமட்டம்!"
"அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை! எவ்வளவு ஜோராக நடத்தினோம்!"
"இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா? நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார்? நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும்? அது சங்கீதமா? இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா?"
"ஆமான்னா, ஆமாம்! இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்."
"சரியாய்ப் போச்சு, போங்கள்! அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா! அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு! நான் ரொம்பக் கர்நாடகமாம்! நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ? அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம்! ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்."
"சாஸ்திரிகளே! உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை?"
"வாஸ்தவந்தான்! இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள். எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா! நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது."
"இருக்கட்டும், முதலியார்! இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது! பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே! தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்..."
"சாஸ்திரிகளே! நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்" என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, "வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்" என்றார்.
"வேறு எதைப் பற்றி பேசலாம்?" என்று சாஸ்திரிகள் கேட்டார்.
"எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன?"
"சுத்த மோசம் என்பதுதான்?"
"எந்த விஷயத்தில் மோசம்?"
"எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது? பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன?"
"எப்படி?"
"எது?"
"யாரு?"
"அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்..."
"அப்படிச் சொல்லுங்கோ சாஸ்திரிகளே."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இது என்ன சொர்க்கம் - Ithu Enna Sorgam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், இங்கே, பகவத், என்ன, சாஸ்திரிகளே, வேறு, கிடையாது, நாலு, குக்கூ, உம்முடைய, பூலோகத்தில், சொர்க்கத்தில், தான், சொல்லி, முதலியார், சாஸ்திரிகள், பிரசங்கம், கீதை, மோசம், சொர்க்கத்திலே, அமிர்தம், புல்லைத், இந்தச், அந்த, அவள்