வடமலை நிகண்டு
வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும் அருச்சனன் பெயரு மாகு மென்ப. | 501 |
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும் பூதமும் பொய்யும் புகலப் பெறுமே. | 502 |
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும் களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர். | 503 |
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும் இருநிதிப் பெயரு மெழுது படமுமாம். | 504 |
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும் ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே. | 505 |
ககர இகர வருக்கம் முற்றும்.
ககர ஈகார வருக்கம்
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம். | 506 |
கீச கமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம். | 507 |
கீத மெனும்பெயர் இசையுடன் வண்டுமாம். | 508 |
கீலால மெனும்பெயர் நீருங் காடியும் உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. | 509 |
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும் கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர். | 510 |
ககர ஈகார வருக்கம் முற்றும்.
ககர உகர வருக்கம்
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும் உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. | 511 |
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும் வருண விகற்பமு மனையுங் கோயிலும். | 512 |
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும் வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். | 513 |
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும் நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. | 514 |
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும் அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். | 515 |
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும் ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. | 516 |
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும் உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். | 517 |
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். | 518 |
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும் உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும் சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும் கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். | 519 |
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும் கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும் நாரை பெயரோடு மூல நாளும் புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். | 520 |
குன்றெனும் பெயரே வருண னாளும் சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் | 521 |
குருவெனும் பெயரே குரவனு நிறமும் அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும் தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். | 522 |
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும் குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். | 523 |
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும் அந்நில யாழுமோர் மரமு மாமே. | 524 |
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும் மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. | 525 |
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும் காடு மெனவே கருதுவர் புலவர். | 526 |
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும் புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. | 527 |
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும் சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். | 528 |
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும் தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். | 529 |
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும் கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும் நகர மக்காரமு நவிலப் பெறுமே. | 530 |
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன் புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். | 531 |
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும் நாழியுங் குறளு நவிலப் பெறுமே. | 532 |
குரலெனும் பெயரே வாசிக் கோவையும் கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும் கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும் புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். | 533 |
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங் கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. | 534 |
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும் குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங் கவணு மழுவுங் கருதப் பெறுமே. | 535 |
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும் ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. | 536 |
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும் அம்பின் குதையும் விற்குதையு மாமே. | 537 |
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன் கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். | 538 |
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். | 539 |
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும் பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். | 540 |
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும் இசையின் குழலும் இருபான் மயிருமாம். | 541 |
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும் துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். | 542 |
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும் வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். | 543 |
குயமெனும் பெயரே யிளமையு முலையுங் கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. | 544 |
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந் தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். | 545 |
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங் கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். | 546 |
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும் கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். | 547 |
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . | 548 |
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. | 549 |
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும் பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். | 550 |
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். | 551 |
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். | 552 |
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும் கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். | 553 |
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும் செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. | 554 |
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும் பெருமையு மெனவே பேசப் பெறுமே. | 555 |
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். | 556 |
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும் மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். | 557 |
நகர உகர வருக்கம் முற்றும்.
ககர ஊகார வருக்கம்
கூற்றெனும் பெயரே கூற்றனும் வார்த்தையும். | 558 |
கூனியெனும்பெயர் குடும்பமுங் கூட்டமும் பேயுஞ் சேனைத் தலைவனும் பேசுவர். | 559 |
கூட மெனும்பெயர் மலையின் குவடும் கூட்டமு மறைவு மனவஞ் சனையும் கொல்லன் சம்மட் டியையுங் கூறுவர். | 560 |
கூல மெனும்பெயர் பாகலும் பகவும் வரம்பும் விலங்கின் வாலு நீர்க்கரையும் தெருவும் பலபண்ட முமங்கா டியுமாம். | 561 |
கூளிய ரெனும்பெயர் பூதகண வீரரும் கொலைத்திற லோருநட் பாளருங் கூறுவர். | 562 |
கூந்தலெனும் பெயர் மயிலின் றோகையும் கோதையர் குழலுங் கூறப் பெறுமே. | 563 |
கூவிர மெனும்பெயர் தேரின் கொடிஞ்சியுந் தேரு மெனவே செப்புவர் புலவர். | 564 |
கூத்த னெனும்பெய ருயிரின் பெயரும் நடிப்போன் பெயரு நவிலப் பெறுமே. | 565 |
கூழெனும் பெயரே பலவகை யுணவும் நெற்பயிர் முதலவுங் கனகமு நிகழ்த்துவர். | 566 |
கூரெனும் பெயரே கூர்மையு மிகுதியும். | 567 |
கூர லெனும்பெயர் மாதர்தம் மயிரும் புள்ளின் சிறகும் புகலப் பெறுமே. | 568 |
கூழை யெனும் பெயர் கொடும்படை யுறுப்பும் புட்சிறகு பெண்பான் மயிரும் புகலுவர். | 569 |
நகர ஊகார வருக்கம் முற்றும்.
ககர எகர வருக்கம்
கெழுவுத லெனும்பெயர் மயக்கமும் பற்றுமாம் | 570 |
கெதியெனும் பெயர்பர கெதிநடை விரைவுமாம். | 571 |
ககர எகர வருக்கம் முற்றும்.
ககர ஏகார வருக்கம்
கேடக மெனும்பெயர் ஊர்பொதுப் பெயரும் பரிசையும் பலகையும் பகர்ந்தனர் புலவர். | 572 |
கேச மெனும்பெயர் பெண்பான் மயிரும் ஆண்பான் மயிரு மஃறிணை மயிருமாம். | 573 |
கேழெனும் பெயரே நிறமும் ஒளியும் உவமையு மெனவே யுரைத்தனர் புலவர். | 574 |
கேசர மெனும்பெயர் மகிழமரப் பெயரும் பூந்தாது மெனவே புகலப் பெறுமே. | 575 |
கேது வெனும் பெயர் ஒன்பான் கிரகமும் துவசமு நெருப்புஞ் சொல்லுவர் புலவர். | 576 |
கேவல மெனும்பெயர் தனிமையு முத்தியும். | 577 |
கேட்டை யெனும்பெயர் புரந்தர னாளும் அசைச்சொற் பெயரு மூதேவியு மாமே. | 578 |
கேள்வி யெனும்பெயர் கல்வியும் செவியுமாம். | 579 |
கேகய மெனும்பெயர் மயிலுமோர் பண்ணும் அகண மாவின் பெயரு மாமே. | 580 |
ககர ஏகார வருக்கம் முற்றும்.
ககர ஐகார வருக்கம்
கையெனும் பெயரலங் கரித்தலுஞ் சிறுமையும் தானையி னுறுப்பும் தங்கையும் செங்கையும் ஒழுக்கமு மிடமுங் குற்றமுஞ் சார்புமாம். | 581 |
கைத்த லெனும்பெயர் கைப்புஞ் சினமுமாம். | 582 |
கைக்கிளை யெனும்பெய ரொருதலைக் காமமும் இசையின் விகற்பமு மியம்பப் பெறுமே. | 583 |
ககர ஐகார வருக்கம் முற்றும்.
ககர ஒகர வருக்கம்
கொடிறெனும் பெயரசுரர் குருவி னாளுங் கவுளியின் பெயருங் கருவிப் பற்றுமாம். | 584 |
கொக்கெனும் பெயரே குதிரையு மூலமும் பேகமுஞ் செந்நாயு மாமரமும் பேசுவர். | 585 |
கொன்னெனும் பெயரே ஓரசைச் சொல்லும் பெருமையுங் காலமும் வறிது மச்சமும் பயனி லாததும் பகருவர் புலவர். | 586 |
கொற்றி யெனும்பெயர் கோவிளங் கன்றும் துர்க்கையுங் கொத்தியுஞ் சொல்லப் பெறுமே. | 587 |
கொண்மூ வெனும்பெயர் மேகமா காயமுமாம். | 588 |
கொந்தள மெனும்பெயர் கோதையர் மயிரும் குருளையுங் கருங்குழற் கொத்து மாமே. | 589 |
கொடிய னெனும்பெயர் கொடியவன் பெயரும் கேதுவின் பெயருங் கிளர்த்தப் பெருமே. | 590 |
கொம்மை யெனும்பெயர் கொங்கையும் பெலமும் இளமையும் அங்கை குவித்துக் கொட்டலும் வட்ட வடிவுந் திடரும் வழங்குவர். | 591 |
கொண்டை யெனும்பெயர் இரந்தையின் கனியும் மயிர்முடிப் பெயரும் வழங்கப் பெறுமே. | 592 |
கொற்ற மெனும்பெயர் அரசியற் பெயரும் வெற்றியின் பெயரும் விளம்புவர் புலவர். | 593 |
கொல்லெனும் பெயர்கொலை யேவலு மசைச்சொல்லும் ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும். | 594 |
கொடியெனும் பெயரே யொழுங்கும் வல்லியும் துவசமுங் காக்கையின் பெயருஞ் சொல்லுவர். | 595 |
ககர ஒகர வருக்கம் முற்றும்.
ககர ஓகார வருக்கம்
கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும் குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். | 596 |
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும் அம்பும் பூமியும் அறலுங் கிரணமும் சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும் மலையும் பதவும் வானமு மிரக்கமும் குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். | 597 |
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும் வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும் குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. | 598 |
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும் பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும் இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். | 599 |
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும் கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும் குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். | 600 |
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும் புவனியு மெனவே புகன்றனர் புலவர். | 601 |
கோடெனும் பெயரே மலையின் குவடும் வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும் மரத்தின் பணையு மூதுங் கொம்பும் சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. | 602 |
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும் பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும் ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. | 603 |
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும் ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. | 604 |
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ் சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும் மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். | 604 |
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். | 606 |
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும் குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. | 607 |
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும் சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. | 608 |
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும் சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். | 609 |
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும் பூவின் றட்டும் புகலப் பெறுமே. | 610 |
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும் மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். | 611 |
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும் பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். | 612 |
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும் அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். | 613 |
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும் ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். | 614 |
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும் அங்குச முங்கூன் வாளு மாமே. | 615 |
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும் ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. | 616 |
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும் மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். | 617 |
கோலெனும் பெயரே யாழி னரம்பும் அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும் அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும் குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும் இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். | 618 |
ககர ஓகார வருக்கம் முற்றும்.
ககர ஒளகார வருக்கம்
கெளசிக மெனும்பெய ரோரி சையுடன் கூகையும் சுடர்நிலைத் தண்டும் பட்டுமாம். | 619 |
கொளவை யெனும்பெயர் கள்ளும் துன்பமும் எள்ளிலங் காயும் பழிச்சொலு மோசையும். | 620 |
கெளந்தி யெனும்பெயர் பாண்டவ ரன்னையும் அருந்த வப்பெண் பெயரு மாமே. | 621 |
கெளட மெனும்பெய ரொருதே சத்துடன் ஓருகொடிப் பெயரு முரைக்கப் பெறுமே. | 622 |
ககர ஔகார வருக்கம் முற்றும்.
ககர வருக்கம் முற்றும்.
3 வது சகர வருக்கத் தொகுதி
சகர வருக்கம்
சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால் நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ் சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. | 623 |
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும் உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். | 624 |
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். | 625 |
சதியெனும் பெயரே தாள வொத்துடன் உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். | 626 |
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. | 627 |
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். | 628 |
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ் சார்பு மெனவே சாற்றுவர் புலவர். | 629 |
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். | 630 |
சவியெனும் பெயரே யழகும் பெலமும் மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். | 631 |
சரமெனும் பெயரே தனிமணி வடமும் அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். | 632 |
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு நாரா சமுநன் மணியு நவின்றனர். | 633 |
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும் பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. | 634 |
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும் கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும் குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். | 635 |
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும் கொடுமையு மெனவே கூறப் பெறுமே. | 636 |
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும் கழுகு மெனவே கருதுவர் புலவர். | 637 |
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும் நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. | 638 |
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் | 639 |
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன் மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். | 640 |
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும் இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். | 641 |
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும் வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும் கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். | 642 |
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன் நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. | 643 |
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும் சக்கர யூகமும் சகதலப் பெயரும் தேரி னுருளும் பெருமையும் பிறப்பும் நேமிப் புள்ளுங் கடலும் சகடமும் வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். | 644 |
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். | 645 |
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ் சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். | 646 |
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும் புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். | 647 |
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். | 648 |
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். | 649 |
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும் சலாகையு மெனவே சாற்றினர் புலவர். | 650 |
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் | 651 |
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும் இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். | 652 |
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும் இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. | 653 |
சகர அகர வருக்கம் முற்றும்.
சகர ஆகார வருக்கம்
சான்றா ரெனும்பெயர் சார்புளெனும் பெயரும் அருக்கனு மிருக சீரிடமு மானே. | 654 |
சாதக மெனும்பெயர் பூதமுஞ் சனனமும் வானம் பாடிப் புள்ளும் வழங்குவர். | 655 |
சாமி யெனும்பெயர் தலைவனு மரசனும் குரவனும் வியாழமுங் கூறுவர் புலவர். | 656 |
சாம மெனும்பெயர் பச்சை நிறமும் யாமமு மிரவுமோர் வேதமு மியம்புவர். | 657 |
சானு வெனும்பெயர் மலையின் பக்கமும் மலையு முழந்தாட் பெயரும் வழங்கும். | 658 |
சார லெனும்பெயர் மலையின் பக்கமும் மருத யாழ்த்திறத் தோரோசையும் வழங்கும். | 659 |
சானகி யெனும்பெயர் சீதையு மூங்கிலும். | 660 |
சாம்ப லெனப்பெயர் பழம்பூவும் சாம்பரும் முற்றுத லெனவு மொழியப்பெறுமே. | 661 |
சால மெனும்பெயர் ஆச்சார மரமும் மதிலுஞ் சாளரப் பெயரும் வலையுமாம். | 662 |
சாலேக மென்னும் பெயர்பூ வரும்பும் வாதா யனமும் வகுக்கப் பெறுமே. | 663 |
சாதி யெனும்பெயர் பிரம்புந் தேறலும் தேனும் தேக்குஞ் சிறுசண் பகமும் சாதியின் விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. | 664 |
சாறெனும் பெயரே தாழமரக் குலையும் வேரியு முயர்திரு விழாவுமாமே. | 665 |
சாலி யெனும்பெயர் நெற்பொதுப் பெயரும் வேரியு மருந்ததிப் பெயரும் விளம்புவர். | 666 |
சார்ங்க மெனும்பெயர் விற்பொதுப் பெயரும் மாயோன் சிலையும் வகுத்து ரைத்தனரே. | 667 |
சாப மெனும்பெயர் சபித்தலும் சிலையுமாம். | 668 |
சாக மெனும்பெயர் சாகினி விகற்பமும் தேனீப் பெயரும் வெள்ளாடுந் தேக்குமாம். | 669 |
சாகினி யெனும்பெயர் தழைத்திடு சேம்பொடு கீரையின் விகற்பமும் கிளத்தப் பெறுமே. | 670 |
சாரங்க மெனும்பெயர் மானும் வண்டுமாம். | 671 |
சாரிகை யெனும்பெயர் சூறையும் சுங்கமும் நாகண வாய்ப்புட் பெயரு நவிலுவர். | 672 |
சாய லெனப்பெயர் மெய்ப்பாட் டினழகும் மேன்மையு மெனவே விளம்பப் பெறுமே. | 673 |
சாகர மெனும்பெயர் துயிலொழிந் திடுதலும் ஏழ்கடற் பெயரும் இயம்புவர் புலவர். | 674 |
சாலை யெனும்பெயர் குதிரைப் பந்தியும் அறப்புற மடமும் அரசர்தங் கோயிலும் வழிநடைச் சாலையும் வழங்கப் பெறுமே. | 675 |
சால்பெனும் பெயர்சான் றாண்மையு மியல்புமாம். | 676 |
சாந்த மெனும்பெயர் சந்தனமும் பொறுமையும் | 677 |
சாம்பு வெனும்பெயர் பறையொடு பொன்னுமாம். | 678 |
சார்பெனும் பெயரே சார்தலு மிடமுமாம். | 679 |
சாத்த னெனும்பெயர் அய்யனும் அருகனும் புத்தனு மெனவே புகலுவர் புலவர். | 680 |
சாத மெனும்பெயர் மெய்மையும் பூதமும். | 681 |
சாலெனும் பெயரே யுழவின் சாலும் நீர்பெய் பசானமு நிகழ்த்துவர் புலவர். | 682 |
சகர ஆகார வருக்கம் முற்றும்.
சகர இகர வருக்கம்
சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன் கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். | 683 |
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும் ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். | 684 |
சிந்தெனும் பெயரே நீருங் கடலும் நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும் ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். | 685 |
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந் துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். | 686 |
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். | 687 |
சிலையெனும் பெயரே மலையும் பாறையும் வில்லு மெனவே விளம்புவர் புலவர். | 688 |
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங் கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். | 689 |
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும் முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. | 690 |
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும் குடுமியு மெனவே கூறுவர் புலவர். | 691 |
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும் உறியு மெனவே யுரைத்தனர் புலவர். | 692 |
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும் செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும் மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். | 693 |
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ் சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. | 694 |
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். | 695 |
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின் ஓசையும் அலியு மயிலு மாமே. | 696 |
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும் தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். | 697 |
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும் காவலு மோர்பா லிடமும் கரையுமாம். | 698 |
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும் சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். | 699 |
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும் சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். | 700 |
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும் கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். | 701 |
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். | 702 |
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந் தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. | 703 |
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும் நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. | 704 |
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும் மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும் துணித்த பலபொரு ளுமதி சயமுஞ் செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். | 705 |
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ் சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். | 706 |
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும் பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். | 707 |
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு மலையி னுச்சியும் சென்னியுங் கவரி மாவின் பெயருங் கருதுவர். | 708 |
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும் மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. | 709 |
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். | 710 |
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். | 711 |
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும் குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. | 712 |
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். | 713 |
சகர இகர வருக்கம் முற்றும்.
சகர ஈகார வருக்கம்
சீதம் எனும்பெயர் மேகமும் பாலும் குளிர்ச்சியும் புனலுங் கூறுவர் புலவர். | 714 |
சீவ னெனும்பெயர் வியாழமு முயிரும். | 715 |
சீரு ளெனும்பெயர் செல்வமுஞ் செம்பும் ஈயமு மெனவே இயம்பப் பெறுமே. | 716 |
சீவனி யெனும்பெயர் செவ்வழி யாழ்த்திறத் தோரிசைப் பெயரு முயிர்தரு மருந்துமாம். | 717 |
சீரெனும் பெயரே செல்வமுங் கீர்த்தியும் பாரமு மழகும் பகர்ந்திடு சீர்மையும் தாள வொத்துந் தடியுங் காத்தண்டுஞ் சொற்சீர் எனவுஞ் சொல்லுவர் புலவர். | 718 |
சீப்பெனும் பெயரே கதவின் றாழும் மயிர்வார் சீப்பும் வழங்கப் பெறுமே. | 719 |
சீகர மெனும்பெயர் திரையுந் திவலையும் கவரி மாவுங் கருதுவர் புலவர். | 720 |
சீல மெனும்பெய ரொழுக்கமுங் குணமும் தருமமு மெனவே சாற்றுவர் புலவர். | 721 |
சீதை யெனும்பெயர் உழுபடைச் சாலும் இராமன் றேவியு மியம்பப் பெறுமே. | 722 |
சகர ஈகார வருக்கம் முற்றும்.
சகர உகர வருக்கம்
சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும் சூரனு மெனவே சொல்லுவர் புலவர். | 723 |
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு மாலையு மெனவே வகுத்தனர் புலவர். | 724 |
சுசியெனும் பெயரே கோடைக் காலமும் சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். | 725 |
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும் மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். | 726 |
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல் விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. | 727 |
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும் புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். | 728 |
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். | 729 |
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும் நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ் சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். | 730 |
சுவலெனும் பெயரே தோளின் மேலும் மேடுங் குரகதக் குசையின் மயிரும் பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. | 731 |
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும் நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. | 732 |
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும் பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். | 733 |
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும் ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். | 734 |
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும் உச்சியு மெனவே மொழியப் பெறுமே. | 735 |
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். | 736 |
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். | 737 |
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும் இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. | 738 |
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். | 739 |
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும் குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். | 740 |
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். | 741 |
சுரமெனும் பெயரே வழியுங் காடும் அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். | 742 |
சகர உகர வருக்கம் முற்றும்.
சகர ஊகார வருக்கம்
சூர னெனும்பெயர் சூரியன் பெயரும் தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். | 743 |
சூரெனும் பெயரே தெய்வமு நோயும் வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். | 744 |
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும் வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. | 745 |
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும் ஆசூ சப்பெயர் தானு மாமே. | 746 |
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும் நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். | 747 |
சூத னெனும்பெயர் சூதாடு பவனும் சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். | 748 |
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு மாமர மெனவும் வழங்குவர் புலவர். | 749 |
சூழ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். | 750 |
சகா ஊகார வருக்கம் முற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்