வடமலை நிகண்டு
வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
பாயிரம்
காப்புப் பாயிரம்
கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்கணிதப் மல்கியசீர் விக்கிரம வருடத்தா னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப் பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினையீ |
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற் சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற பிடிவடி வுடைய பெண்கொடி பாகத் தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும் ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும் பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும் சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென நாட்டினன் மடசை நன்னகர் வாழும் சிதம்பர பாரதி சேய்தின முமையாள் பதம்பணி யீசுர பாரதி தானே. |
காப்புப் பாயிரம் முற்றும்.
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக் கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே. திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த நக்கன் புகழ்நெல்லை நாயக-முக்கண்ணிறை சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர் பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம். |
1 வது உயிர் வருக்கத் தொகுதி
அகர வருக்கம்
அருளெரும் பெயர்சிவ சத்தியி னுடனே கருணையின் பெயருங் கருதப்பெறுமே. | 1 |
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும் சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும் சேடனும் எனவே செப்புவர் புலவர். | 2 |
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும் வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே. | 3 |
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும் பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும் பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும் செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும் தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும் கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும் வேயும் பன்றியும் விசியும் புகையும் பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும் கண்ணில் வரியும் கடலும் உரகமும் எண்ணிய திகிரியும் இகலியர் வாளும் தகரும் வலியும் அரிசியும் குரங்கும் புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும் எறிதரு முரசமும் எண்படைக் கலமும் குறிதரு பச்சையும் கூறிய மதுவும் அரிதலும் நாற்பா னெழு பெயராமே. | 4 |
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும் இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர். | 5 |
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும் இரவியு மலருமோர் மரமு நீராவியுந் தேனீயும் அழகும் செப்பப் பெறுமே. | 6 |
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப் பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர். | 7 |
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும் கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம். | 8 |
அந்த மெனும்பெய ரருநெறி யுடனே ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும் காடும் கனகமும் கையும் பாதியும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். | 9 |
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும் வருத்தமும் கொலையும் மையனோயும் தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம். | 10 |
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும் வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே. | 11 |
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு சிலம்பும் எனவே செப்புவர் புலவர். | 12 |
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம். | 13 |
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும் கடலு மெனவே கருதப்பெறுமே. | 14 |
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும் ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம். | 15 |
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும். | 16 |
அயமெனும் பெயரே அறலும் குதிரையும் குளமும் இரும்பும் தகருங் கூறுவர். | 17 |
அளக மெனுபெயர் புனலு மயிரும் மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலார். | 18 |
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம். | 19 |
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம். | 20 |
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும் கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர். | 21 |
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர் ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம். | 22 |
அடுப்பெனும் பெயரே யியம னாளும் அச்சப் பெயருமுத் தானமு மாமே. | 23 |
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும் தூசும் எனவே சொல்லப் பெறுமே. | 24 |
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர் புள்ளும் எனவே புகன்றனர் புலவர். | 25 |
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம். | 26 |
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும் மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே. | 27 |
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும் பரப்பும் எனவே பகரப் பெறுமே. | 28 |
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும் உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர். | 29 |
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும் சோலையின் பெயரும் நோயும் காடுமாம். | 30 |
அடையெனும் பெயரே இலையின் பெயரும் அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம். | 31 |
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந் தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே. | 32 |
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர். | 33 |
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும் செய்கரைப் பெயரும் செப்பப் பெருமே. | 34 |
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும் இல்லமு மனமும் இடமும் பாவமும் ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே. | 35 |
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர். | 36 |
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும். | 37 |
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந் தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே. | 38 |
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும் யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே. | 39 |
அணியெனும் பெயரே அழகும் பெருமையும் படையின துறுப்பும் இலக்கண அணியும் பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர். | 40 |
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும் அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம். | 41 |
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங் கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம். | 42 |
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும் மாலும் கழலையின் பெயரும் வழங்குவர். | 43 |
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம். | 44 |
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும் புடவையும் எனவே புகன்றனர் புலவர். | 45 |
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம். | 46 |
அணியெ னும்பெய ரன்பும் நறவமும் கொடையும் வண்டின் பெயரும் கூறுவர். | 47 |
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும் கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே. | 48 |
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும் இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம். | 49 |
அக்கெனும் பெயரே சங்கின் மணியும் ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர். | 50 |
அராகம் எனும்பெயர் பாழையாழ்த் திறமும் செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும் ஆசையின் பெயரு மாமென வழங்குவர். | 51 |
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும் அளவின் மைப்பொருட் பெயரு மாமே. | 52 |
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும் இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர். | 53 |
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும் துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர். | 54 |
அடலெனும் பெயரே சமரும் பெலமும் வென்றியும் எனவே விளம்பப் பெறுமே. | 55 |
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும் ஆர்தலின் பெயரு மாகு மென்ப. | 56 |
அரணம் எனும்பெயர் காவற் காடும் வேலுங் காவலும் மதிலும் கவசமும். | 57 |
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும் கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும் ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர். | 58 |
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும் செறிவும் எனவே செப்புவர் புலவர். | 59 |
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம். | 60 |
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும் மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக. | 61 |
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம். | 62 |
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர். | 63 |
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும் பலரரிந் தலர்தூற் றுதலும் பகருவர். | 64 |
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும். | 65 |
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும் வாவற் பறவையும் வகுத்தனர் புலவர். | 66 |
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும் நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும் மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். | 67 |
அல்லி யெனும் பெயர் காசை மரமும் வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர். | 68 |
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும் இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். | 69 |
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின் அருகும் அராவும் கருவியு மாமே. | 70 |
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும் ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே. | 71 |
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும் வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம். | 72 |
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும் தேவரும் எனவே செப்புவர் புலவர். | 73 |
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும் பூசுரர் பெயரும் புகலுவர் புலவர். | 74 |
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும் வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம். | 75 |
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும். | 76 |
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும் நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர். | 77 |
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும் நண்டு முதலையு மாமையு மீனும் உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும் பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர். | 78 |
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு முடிவும் எனவே மொழியப் பெறுமே. | 79 |
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் | 80 |
அத்தி யெனும்பெய ரதவு மியானையும் உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே. | 81 |
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம். | 82 |
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும் புனலின் பெயரும் புகலப் பெறுமே. | 83 |
அம்பெனும் பெயரே மேகமும் புனலும் கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே. | 84 |
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம். | 85 |
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும் நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர். | 86 |
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும் துக்கமும் எனவே சொல்லுவர் புலவர். | 87 |
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம். | 88 |
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும் சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர். | 89 |
அகவல் எனும்பெயர் கூத்துமாசி ரியப்பாவும். | 90 |
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும் போரிடம் வட்டா டிடமும் சபையும் கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர். | 91 |
அன்னல் எனும்பெயர் நாகமும் சேறுமாம். | 92 |
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும் இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே. | 93 |
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும் விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர். | 94 |
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகவும் உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம். | 95 |
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும் ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே. | 96 |
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும் நாடும் எனவே நவின்றனர் புலவர். | 97 |
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும் புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம். | 98 |
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும் கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர். | 99 |
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும் சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே. | 100 |
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும் குற்றமும் பரலும் கூறுவர் புலவர். | 101 |
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும் முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர். | 102 |
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும் பேயின் பெயரும் பேசப் பெறுமே. | 103 |
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப் பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர். | 104 |
அசமெ னும்பெயர் புருவை யாடும் மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர். | 105 |
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும் இடியின் பெயரும் இயம்பப் பெறுமே. | 106 |
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம். | 107 |
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும் பசும்புற் றரையும் பகரப் பெறுமே. | 108 |
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம். | 109 |
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம். | 110 |
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும். | 111 |
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும் பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம். | 112 |
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம். | 113 |
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும் நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர். | 114 |
அந்தர மெனும்பெயர் பேத முடிவும் விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே. | 115 |
அங்கா ரகனெனும் பெயருதா சனனும் செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே. | 116 |
அடரெனும் பெயரே ஐமை வடிவும் நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே. | 117 |
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும் சபையும் வட்டா டிடமும்ஓ ரிடமுமாம். | 118 |
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும் வழியும் எனவே வகுத்தனர் புலவர். | 119 |
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும் ஆர வார மும்சபைப் பெயருமாம். | 120 |
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும் நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர். | 121 |
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும் ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே. | 122 |
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும் பற்று வித்தலின் பெயரும் பகருவர். | 123 |
அதரெனும் பெயரே புழுதியும் வழியும் நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே. | 124 |
அருந்த வெனும்பெயர் அருமையும் பொசித்தலும். | 125 |
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும் தந்தையும் எனவே சாற்றினர் புலவர். | 126 |
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம். | 127 |
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும். | 128 |
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங் கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம். | 129 |
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம். | 130 |
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும் புனலும் பயசும் புலவ ருணவுடன் மேகமும் எனவே விளம்புவர் புலவர். | 131 |
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற் பிறகா லுமெனப் பேசுவர் புலவர். | 132 |
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப் பெயரும் எனவே பேசப் பெறுமே. | 133 |
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும். | 134 |
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும் கவசமு மதிலும் கருதப் பெறுமே. | 135 |
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம். | 136 |
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும் மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர். | 137 |
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும் இருவாட் சியுமென இயம்புவர் புலவர். | 138 |
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும். | 139 |
அமுதெனும் பெயரே பாலும் இன்கதையும் தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர். | 140 |
அசோக மெனும்பெய ரசோகின் தருவும் இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. | 141 |
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும் கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர். | 142 |
அகர வருக்கம் முற்றும்.
ஆகார வருக்கம்
ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும் அருகனு முதலு நேரோடலு மாமே. | 143 |
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும் கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும் ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். | 144 |
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும் அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். | 145 |
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும் நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். | 146 |
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும் பொன்னும் எனவே புகன்றனர் புலவர். | 147 |
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும் கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும் சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். | 148 |
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும் ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். | 149 |
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும் தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். | 150 |
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். | 151 |
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர் எண்ணும் எனவே இயம்புவர் புலவர். | 152 |
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும் நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். | 153 |
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம் நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். | 154 |
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும் இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. | 155 |
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும் கணவனும் எனவே கருதுவர் புலவர். | 156 |
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். | 157 |
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந் தேகமும் எனவே செப்பப் பெறுமே. | 158 |
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும் இசையின் குழலும் கள்ளு மூங்கிலும் ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். | 159 |
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும் அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும் சந்தன முமணி வடமும் பதக்கமும். | 160 |
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும் உரையா டலுமென வுரைத்தனர் புலவர். | 161 |
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும் அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. | 162 |
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும் தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். | 163 |
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும் மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். | 164 |
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும் பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும் ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். | 165 |
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும் மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். | 166 |
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன் வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. | 167 |
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும் அணிதலின் பெயரு மாகு மென்ப. | 168 |
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும் சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். | 169 |
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். | 170 |
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம் பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். | 171 |
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். | 172 |
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். | 173 |
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும் மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. | 174 |
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும் சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். | 175 |
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும் சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். | 176 |
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும் சீவனும் எனவே செப்பப் பெறுமே. | 177 |
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும் அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. | 178 |
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும் ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். | 179 |
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். | 180 |
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். | 181 |
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். | 182 |
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும் பழமரப் பெயரும் பகருவர் புலவர். | 183 |
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும் மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். | 184 |
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும் படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். | 185 |
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். | 186 |
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். | 187 |
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும் புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். | 188 |
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும் உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. | 189 |
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். | 190 |
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும் புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். | 191 |
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும் ஆரிய தேசத் தவரு மாமே. | 192 |
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும் ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. | 193 |
ஆகார வருக்கம் முற்றும்.
இகர வருக்கம்
இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன் மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். | 194 |
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும் நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். | 195 |
இரலை யெனும்பெயர் மானி னேறும் அசுபதியு மூதுங் கொம்பு மாமே. | 196 |
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும் தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும் புள்ளிற குங்கை வரையும் சிறுமையும் குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். | 197 |
இடியெனும் பெயரே நென்மா முதலும் உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். | 198 |
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும் தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். | 199 |
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும் மலையும் காடும் வழங்கப் பெறுமே. | 200 |
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும் கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். | 201 |
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும் நடுவும் எனவே நவிலப் பெறுமே. | 202 |
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். | 203 |
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும் அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். | 204 |
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும் நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். | 205 |
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும் நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். | 206 |
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும் இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். | 207 |
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும் கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். | 208 |
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். | 209 |
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். | 210 |
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும் நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். | 211 |
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும் கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். | 212 |
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும் செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். | 213 |
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும் இராசியு மனைவியு மனையும் இடமுமாம். | 214 |
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். | 215 |
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். | 216 |
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும் யானையின் பெயரும் இயம்புவர் புலவர். | 217 |
இகலெனும் பெயரே பெலமும் சமரமும் பகையும் எனவே பகரப் பெறுமே. | 218 |
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும் இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். | 219 |
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும் மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. | 220 |
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும் பனைமடல் போலவும் பகரப் பெறுமே. | 221 |
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும் வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. | 222 |
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும் பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். | 223 |
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும் செவ்வையும் எனவே செப்புவர் புலவர். | 224 |
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். | 225 |
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். | 226 |
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். | 227 |
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும் மரணமும் எனவே வழங்கப் பெறுமே. | 228 |
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும் ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். | 229 |
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும் இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. | 230 |
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும் பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். | 231 |
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். | 232 |
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும் சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். | 233 |
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும் முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். | 234 |
இகர வருக்கம் முற்றும்.
ஈகார வருக்கம்
ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும் சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர். | 235 |
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் எனவே புகன்றனர் புலவர். | 236 |
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும் பெருமையு முவமையும் பேசுவர் புலவர். | 237 |
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும் மயானமும் விறகும் வழங்கப் பெறுமே. | 238 |
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும் ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர். | 239 |
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும் பகுத்தலும் எனவே பகரப் பெறுமே. | 240 |
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம். | 241 |
ஈகார வருக்கம் முற்றும்.
உகர வருக்கம்
உடுவெனும் பெயரே யொளிவான் மீனும் பகழியும் அம்புத் தலையொடு நாவாய் நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். | 242 |
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. | 243 |
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன் திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். | 244 |
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும் மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. | 245 |
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும் விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். | 246 |
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும் தேரின் றட்டும் நாபியும் கடலும் பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். | 247 |
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும் கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். | 248 |
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந் துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும் பெருமையும் பாலும் பிரையும் விழுமமும் வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும் ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும் படையுறை யுடனே நன்னில வூரும் எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். | 249 |
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும் திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். | 250 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்