திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
2. திருச்சீர் அலைவாய்
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக். |
80 |
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு |
கூற்றம் போல் முருகனின் யானை விரைந்து நடக்கும். அப்போது இருமருங்கிலும் தொங்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த வேழம் வலிமையில் புயல் காற்று கிளர்ந்து வீசுவது போன்றது. அம்பின் நுனி குத்தி ஆறிய வடுக்களைப் புள்ளிகளாகக் கொண்ட நெற்றியை உடையது. நெற்றியில் வாடா மாலையும், ஓடை என்னும் அணிகலனும் அதற்கு உண்டு. இத்தகைய யானைமேல் முருகன் காட்சி தந்தான்.
ஆறு முகங்களின் இயல்புகள்
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப |
முருகன் தன் தலையில் முடி சூடிக்கொண்டிருந்தான். அந்த முடியில் ஐந்து முகப் பட்டை தீட்டிய திருமணி பதிக்கப்பட்டிருந்தது. பொன்முடியில் நீலநிற மணியின் ஒளி முரணியிருந்தது. (பொன்னிறத்தில் நீலநிறம் முரண்) இது அவன் தலைக்குப் பொலிவைத் தந்தது. (அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். என்று இப்பாடலின் இறுதியில் வரும் வெண்பாவுக்குப் பொருள் கொள்ளும்போது அஞ்சுமுகம் என்பதற்கு இந்த ஐந்து பட்டை மணியையும் கொள்ளலாம்.)
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் |
வகைப்படுத்திப் பொன்னால் செய்த குழைகளை அவன் தன் காதுகளில் அணிந்திருந்தான். அவை சிரித்த வண்ணம் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன. அவனது முக வான மதியத்தைச் சூழ்ந்து அகலாதிருக்கும் விண்மீன் கூட்டம் போல் குழைமணிகளும் முடிமணிகளும் ஒளியுடன் விளங்கின.
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே. |
90 |
ஒளி பொருந்திய அவன் முகம் நம் மனவயலை உழுது தன் அழகைக் காட்டி எழுச்சி ஊட்டிக்கொண்டிருக்கிறது. யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்னும் தன் கொள்கைக்கு ஏற்பத் தொழிற்பட்டு நம் எண்ணத்தை முடித்துத் தர அவன் முகம் மலர்ந்துகொண்டிருக்கிறது.
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம், ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ |
95 |
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம். |
100 |
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே. ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின் |
பேருலகம் களங்கம் இல்லாமல் விளங்குவதற்காக ஒருமுகம் கதிரொளிகள் பலவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. (வெப்பொளி) ஆர்வம் கொண்டவர்கள் புகழ்வதால் விருப்பத்தோடு மழைபோல் ஒஉகி அவர்களுக்குத் தன்மீது உள்ள காதலாலும் மகிழ்ந்து அவர்களுக்கு ஒருமுகம் வரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. (வரம்) மரபிலிருந்து வழுவாத அந்தணர் மந்திரம் சொல்லிச் செய்யும் வேள்வியை ஒருமுகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. (உதவி) இருளில் ஒளிதரும் திங்களைப் போல ஒருமுகம் பிறவற்றை யெல்லாம் விளங்கும்படி செய்து கொண்டிருக்கிறது. (தண்ணொளி) எதிர்ப்போரைப் போரிட்டு வென்று ஒருமுகம் களவேள்வி செய்து கொண்டிருக்கிறது. (வீரம்) களவு மனைவி வள்ளியைப் பார்த்து ஒருமுகம் சிரித்துப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறது. (காதல்) இது முருகனின் அறுகோணப் பார்வை
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, ஒருமுகம், கொண்டிருக்கிறது, அவன், இலக்கியங்கள், பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முகம், அஞ்சுமுகம், கும்மே, செய்து, வரம், அந்தணர், தன்றே, ஐந்து, போல், வாடா, சங்க, முருகனின், அந்த, திருமணி, முருகன், என்னும், பட்டை