பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு
தனிப் பாடல்கள்
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின், அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும் கரிகாலன் காவிரி சூழ் நாடு. |
1 |
ஏரிநீர் பாய்வதாலும், ஏற்றம் இறைக்கும் கிணற்றுநீர் பாய்வதாலும் பிறர் நாடுகளில் நீர்வளம் பெருகி நெல் விளையும். நினைத்துப் பார்த்தால் இந்த நெல்வளம் எல்லாமே கரிகாலனின் காவிரி பாயும் நாட்டில் நெல் அறுவடை செய்த பின்னர் அந்த நிலத்தில் உதிர்ந்து முளைத்து விளைந்த அரிகால்-நெல்லே ஈடாக அமையும்.
அரிமா சுமந்த அமளி மேலானைத் திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின் மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப் போனவா பெய்த வளை! |
2 |
இந்தப் பாடலானது பாடலில் கரிகால்வளவன் என்று கூறப்படும் இந்த மன்னனைத் திருமாவளவன் என்று குறிப்பிடுகிறது. அரியணையில் திருமாவளவன் அமர்ந்துகொண்டு ஆட்சிசெய்தான். அவனைத் தொழுதவள் நிலை என்னவாயிற்று எனக் கூறும் அகப்பொருள் பாடலாக இது அமைந்துள்ளது. இந்தப் பாடலின் முன்பகுதி கரிகாலனையும் திருமாலையும் ‘திருமாவளவன்’ என்னும் பெயரால் பொதுமைப்படுத்திச் சிலேடையாகப் பேசுகிறது. திருமால் அரிமா வடிவெடுத்து (நரசிம்ம அவதாரம்) போர் (அமளி) மேற்கொண்டான். கரிகாலன் அரிமா உருவம் தாங்கிய அமளி(இருக்கை)மேல் அமர்ந்திருப்பவன். திருமகளாகிய மா என்று போற்றப்படும் பெண்ணால் வளம் பெற்றுத் திகழ்பவன் திருமால். கரிகாலன் திரு என்னும் செல்வம் மிகுதியாகப் பெற்று மாவளவனாக, திருமாவளவனாகத் திகழ்பவன். இதனால் இருவரும் திருமாவளவன். அதனால் கரிகாலனைத் திருமகளை மார்பிலே கொண்ட ‘மானமால்’ என்று என்றுதான் எண்ணிக்கொண்டு தொழுதேன். கடவுளைத் தொழுதால் கைவளையல் கழலுமா? என் உடல் மெலிந்து என் கையிலுள்ள வளையல்கள் கழறுகின்றனவே! இது ஏன்? கரிகாலன் மேல் எழுந்த காதல்!
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய் அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப்பு உற்று. |
3 |
மூன்று ஆணைச் சக்கரங்களாகத் திகழும் மூவுலகையும் அளப்பதற்குத் திருமால் தன் இரண்டு கால்களையும் பயன்படுத்தினான். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் சக்கரங்களைக் கரிகாலன் தன் கரிந்துபோன ஒரே காலால் அளந்துவிட்டான். அதனால் கரிகாலன் திருமாலைக் காட்டிலும் மேம்பட்டவன். கரிகாலன் புனல்நீர் நாடன். (திருமால் மாபலி மன்னனிடம் புனல்நீர் பெற்றான்). கரிகாலனின் புனல்நீர்நாடு அறுவடை செய்த நெல்வயலில் உதிர்ந்த நெல் முளைத்து வளரும் அரிகால் நெல்லானது தேன் கூடு கட்டும் அளவுக்குச் சிறப்புற்று வளரும். கரிகாலன் இளம்பிள்ளையாக இருந்த காலத்தில் அவனது தாயாதியர் (அரசுத்தாயம் பெறுவதற்குரிய பங்காளிகள்) அவனது மனைக்குத் தீயிட்டனர். அப்போது அவனது கால் கருகிப்போயிற்று. கரிகாலனானவன் இரும்பிடர்த்தலையார் என்னும் தன் தாய்மாமனால் காப்பாற்றப்பட்டுக் கருவூரில் வாழ்ந்துவந்தான். சோழநாட்டுப் பட்டத்து யானை அவனுக்கு மாலை சூட்டி அழைத்துவர உறையூரில் அரியணை ஏறினான். – இப்படி ஒரு கதை. இந்தக் கதையின் அடிப்படையில் இந்தப் பாடல் புனையப்பட்டுள்ளது.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, கரிகாலன், திருமாவளவன், என்னும், திருமால், இலக்கியங்கள், அமளி, அவனது, கால், பொருநராற்றுப்படை, இந்தப், அரிமா, நெல், பத்துப்பாட்டு, அதனால், மேல், சங்க, திகழ்பவன், தேன், வளரும், புனல்நீர், பிறர், காவிரி, அரிகால், முளைத்து, செய்த, கரிகாலனின், பாய்வதாலும், அறுவடை, தொழுதேன், திரு, நெல்லே