பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்
பகட்டுஆ ஈன்ற கொடுநடைக் குழவிக் கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு லேணி யெய்தா நீணெடு மார்பின் |
245 |
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற் குமரி மூத்த கூடோங்கு நல்லிற் றச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த வூரா நற்றே ருருட்டிய புதல்வர் |
வீடுகளில் நெல்லை சேமிக்கும் ஓங்கி உயர்ந்த கூடுகள் இருக்கும். அவை குமரி மூத்த கூடுகள். அதாவது அழியாத் தன்மை வாய்ந்த பழமையான கூடுகள். அவற்றில் பழங்கால நெல்லின் சேமிப்பு உண்டு. ( புது நெல்லை விடப் பழைய நெல்லேசிறந்தது. விலையும் அதிகம். ) ஓங்கி உயர்ந்த அந்தக் கூடுகளின் மார்புப் பகுதியில் ஏணியைச் சார்த்தி நெல் எடுக்கும் பழக்கம் இல்லை. அதன் மேல் முகட்டை உடைத்துவிட்டு நெல்லை எடுப்பது வழக்கம். இந்தக் கூடுகளின் அல்குல் பகுதியில் ( குருகிய இடைவெளிப் பகுதியில் ) பசு ஈன்றெடுத்த கன்றுக் குட்டி நீண்ட கயிற்றில் தும்பு மாட்டிக் கட்டப் பட்டிருக்கும். ( கவைத்தாம்பு = தும்பு ) உழவரின் புதல்வர்கள் - தச்சர்களின் சிறுவர்கள் நடை வண்டிகளைச் செய்து தருவார்கள். அவை ஊர்ந்து செல்ல முடியாத வண்டிகள். உழவர்களின் புதல்வர்கள் அதனை உருட்டிச் செல்வர்.
தளர்நடை வருத்தம் வீட வலர்முலைச் | 250 |
செவிவிஅம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந் தமளித் துஞ்சு மழகுடை நல்லிற் |
தக்கா புக்கா என்று தளர்நடை போட்டு வண்டி உருட்டிச் சென்ற குழந்தைகளின் வருத்தம் தீரும்படிச் செவிலியர் பாலூட்டுவர். செவிலியர் அலர்முலைப் பெண்டிர். மலர்ந்தமுலை உடையவர் எனக் கூறப்படுவதால் இவர்கள் வயது முதிர்ந்த பெண்டிர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தம் மார்போடு தழுவிக்கொண்டு பாலூட்டுவர். பாடூட்டித் தூங்கவைப்பர். வீட்டுக் கட்டில் மெத்தையில் தூங்கவைப்பர்.
றொல்பசி யறியாத் துளங்கா விருக்கை மல்லற் பேரூர் மடியின் மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி |
255 |
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர் |
அங்குள்ள மக்களுக்கு வேளை தவறி உண்ணும் பழம்பசி இல்லை. வளம் மிக்க அப் பேரூரில் செல்வ வளம் தளர்வதுகூட இல்லை. ஊரே தூங்கி விட்டாலும் வினைஞர் என்னும் தொழிலாளர் இல்லங்களில் விருந்து உண்டு. சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்ணெல் (சம்பா) அரிசிச் சோறு பெறலாம். கோழிக்கறி வறுவலுடன் பெறலாம்.
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத் தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன் கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங் கெந்திரஞ் சிலைக்குந் துங்சாக் கம்பல |
260 |
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங் கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் |
நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்ல நேரும். கரும்பாலையின் ஓசையைக் கேட்டுக் கரும்பின் அறுவடைக் காலம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் காடுகள் நிறைந்த மலையடுக்கப் பகுதியில் அச்சம் தரும் யாளிகள் யானையைத் தாக்கும். அப்போது யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் கம்பலை (ஓசை) கேட்கும். அங்கே விசயம் அடுவார்கள். (கரும்புப் பால் காய்ச்சுவார்கள்) அவ்விடம் சென்று கரும்புப்சாறு பருகுங்கள்.
வலைஞர் குடியிருப்பு
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத் தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற் |
265 |
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப் புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் |
270 |
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக் கோடை நீடினுங் குறைபட லறியாத் தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங் கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி |
குளத்தில் மீன்பிடித்து வாழ்பவர்களைக் கொடுமுடி வலைஞர் என்பர். இவர்களது குரம்பை வீடுகள் தருப்பைப் புல்லால் தாழைநார் முடித்து வேயப்பட்டிருக்கும். வேழம் என்பது கொறுக்கை அல்லது பேய்க்கரும்பு. இதனை நாணாத்தட்டை (நாணல்தட்டை) என்றும் கூறுவர். இந்த வேயம் குறுக்குக் கழிகளாகவும் வெண்கரும்பு என்னும் மூங்கில் நெடுக்குக் கழிகளாகவும் வீட்டுக் கூரைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டையும் தாழைமட்டை நாரால் முடிந்து கட்டியிருப்பார்கள். தருப்பைப் புல் போட்டுக் கூரை வேய்ந்திருப்பர். குறுகிய தாழ்வாரமும் [இறை] அந்த வீட்டுக்கு உண்டு. முற்றங்கள் செப்பனிடப்படாமல் பறிந்து போயிருக்கும். மணல் பரப்பப்பட்ட அந்த முற்றத்தில் புன்னை மரத்தைப் பச்சையாக வெட்டி அதன் காய்கள் தொங்கும்படிப் பந்தல் போட்டிருப்பார்கள். இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்தாருடன் ஒன்றுகூடிக் குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வர். வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடி அவர்கள் மீன் பிடிப்பார்கள். அம்பின் நுனி புலவு நாற்றம் அடிக்கும். அந்த வில்லம்புகளைப் போலவே குளத்தில் சிவந்த கோடுகளையுடைய கயல் மீன்களும், இளைய இறால் மீன்களும் குளத்தில் பிறழும். குளங்கள் ஆழமானதால் கருமை நிறத்துடன் காணப்படும். கோடைக்காலம் நீண்டுகொண்டே போனாலும் மீன்கள் தம் குஞ்சு குட்டிகளுடன் எப்போதும் வலைஞர்களுக்கு குறைவின்றித் தம்மை வழங்கிக் கொண்டேயிருக்கும். தோடுகள் நிறைந்த தாமரைப் பூக்கள் வேரோடிக் கிடக்கும் அந்தக் குளத்தின் கரையில் கொடுமுடி வலைஞர்கள் தனித்தனியாக மீன் பிடிக்காமல் ஒன்றாகக் கூடிமீன் பிடிப்பதற்காக காத்திருப்பார்கள். அங்குச் சென்றால் விருந்துணவு பெறலாம்.
வலைஞர் குடியில் பெறும் உணவு
னவையா வரிசி யங்களித் துழவை | 275 |
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப் பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த |
280 |
வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் |
பொங்கல், அடை, அரியல்கள், மீன்சூட்டு வறுவல் போன்றவை குளக்கரை மீனவர் தரும் விருந்து. அரிசியை சுவைத்து மெல்ல வேண்டிய நிலை இல்லாமல் களி போல் கிண்டப்பட்ட பொங்கல் சோறு கிடைக்கும். மலர்ந்த வாயினைக் கொண்ட பிழா என்னும் வட்டிலில் புலரும்படி ஆற்றிப் படைப்பார்கள். அத்துடன் அடை என்னும் பலகார வகைகளையும் படைப்பார்கள். அந்த அடை பாம்பு வாழும் புற்றில் மலர்ந்திருக்கும் கறையான் அடை போல் மொது மொதுவென உப்பியிருக்கும். அடையில் தேன் போன்ற இனிப்புப் பொருள்களை ஊற்றித் தருவார்கள். காலை வேளையிலும் இரவு வரும் வேளையிலும் இரண்டு முறை அந்த விருந்து படைக்கப்படும். அதன்பின் அரியல் பிழியைச் சுடச்சுடத் தருவார்கள். விரல் விட்டு நன்றாகக் கலக்கி நாவில் சுடாத பதம் பார்த்துத் தருவார்கள். அரியலானது வலிமையான சாடியில் வழவழப்பு இல்லாமல் நன்றாக விளையும் வரையில் காய்ச்சப்பட்டது. (இதனை இக்காலத்தில் தரப்படும் சூப் போன்றது எனலாம்.) இதனைப் பருகும்போது துணை உணவாகக் கொள்வதற்காக வறுவல் மீனை ஆற வைத்துத் தருவார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, அந்த, தருவார்கள், பகுதியில், இலக்கியங்கள், வலைஞர், என்னும், குளத்தில், பொரும்பாணாற்றுப்படை, விருந்து, பெறலாம், உண்டு, போல், இல்லை, நெல்லை, கூடுகள், மீன், பத்துப்பாட்டு, விளையும், மூங்கில், நிறைந்த, கரும்பின், இல்லாமல், வேளையிலும், சோறு, படைப்பார்கள், தரும், பொங்கல், வளம், இதனை, கழிகளாகவும், தருப்பைப், கொடுமுடி, பிறழும், வழங்கிக், மீன்களும், வறுவல், தூங்கவைப்பர், அந்தக், உயர்ந்த, கூடுகளின், தும்பு, பட்டிருக்கும், ஓங்கி, நல்லிற், பெறும், சங்க, கவைத்தாம்பு, குமரி, மூத்த, புதல்வர்கள், செல்ல, வீட்டுக், இவர்கள், வினைஞர், தந்த, வெண்ணெல், பெண்டிர், பாலூட்டுவர், செல்வர், உருட்டிச், தளர்நடை, வருத்தம், செவிலியர், பெறுகுவிர்