பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்
நாற்று நடுதல்
நாற்று நடுதல்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தா ளலவ னளற்றளை சிதையப் பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற் காரேறு பொருத கண்ணகன் செறுவி |
210 |
னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற் |
நெல் விளைதற் சிறப்பு
களைஞர் தந்த கணைக்கா னெய்தற் கட்கனழ் புதுப்பூ முனையின் முட்சினை முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் |
215 |
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப் புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி யீருடை யிருந்தலை யாரச் சூடிப் பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் |
220 |
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பி னிரும்புவடித் தன்ன மடியா மென்றோற் கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅற் பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற் |
அடுத்து கொல்லர் குடியிருப்புகளுடன் கூடிய நன்செய் உழவர் வாழும் இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அந்த உழவர் வீட்டில் பழைய சோறு அருந்தலாம். நீர்நிலம் சண்டையிட்டுக்கொள்ளும் எருமை மிதித்துச் சேறாகும். அங்கு உழவு செய்யாமல் உழவர் பயிரிடுவர். காலால் மிதிக்கும் துருத்தியால் ஊதும் உலைக்களம் கொண்டவன் கொல்லன். அவன் கொடிறு (கொரடு) போல் கைகளை உடைய நண்டு. அதன் வளை சிதையும்படி காரேறு என்று சொல்லக்கூடிய எருமை சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும். அப்போது அங்கு வளர்ந்துள்ள பைஞ்சாய் (பாய் நெய்ய உதவும் கோரை) என்னும் கோரைகளும் மிதிபட்டு மடியும். எருமை கொம்பாலும் சேற்றைக் கிண்டும். உழாமலேயே இப்படிச் சேறுபட்ட வயலை நிரவி உழவுத் தொழிலாளர்கள் நாற்று முடியைப் பிரித்துப் பயிர் நடுவார்கள். உழவர் பின்னர் களை பறிப்பார்கள். அப்போது பூத்திருக்கும் நெய்தல் கொடிகளைக் களைந்து எறிவார்கள். அதிலுள்ள பூக்களைப் பறித்து உழவர்களின் சிறுவர்களும் சிறுமியர்களும் தலையில் சூடிக் கொள்வார்கள். இந்தப் பூக்கள் வேண்டாமென்றால் முள்ளிப் பூக்களைப் பறித்துச் சூடிக் கொள்வர். (முள்ளி என்பது ரோஜா போன்றதொரு செடி) முள்ளிச் செடியின் சிறு கிளையில் முள் இருக்கும். அதன் இதழ்கள் தகடுபோல் சூழ்ந்திருக்கும். இதழானது பிறண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். காம்பு வளைந்திருக்கும். பூ சற்றே பெரிதாக இருக்கும். இவற்றைக் கொய்துகொண்டு விளையாடுவர். விரும்பினால் நாரில் பூக்களைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். நீரில் விளையாடி ஈரம் பட்டிருக்கும் தலையில் சூடிக்கொள்வர். முள்ளிப் பூக்களைப் பறிக்கும்போது அங்கே இருக்கும் பைஞ்சாய் என்னும் ஒருவகைக் கோரைப் புல்லைப் பிடுங்கி வாய் மணக்க மென்றுகொண்டிருப்பர். (இக்காலத்தில் சுவிங்கம் செல்லுவது போல் மெல்லுவர்) வண்ணப் பொடிகள் தூவப்பட்டிருக்கும் அவர்களின் மார்பானது தங்கம் உரசிய கட்டளைக் கல்லைப் போலக் காணப்படும். அவர்களின் மேனியிலுள்ள தோல் மென்மையாக இருக்கும். இவர்களின் பெற்றோர் வினைஞர். (உழவுத் தொழிலாளிகள்) இவர்களது கைகள் இரும்பால் வடித்தது போல் வலிமையாக இருக்கும். இவர்களின் அன்புச் செல்வர்கள் தாம் இப்படி விளையாடுவர். தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றை உண்பதில் இவர்கள் முனைந்து நிற்பர். அவர்கள் பழஞ்சோற்றை உங்களுக்கு வழங்குவர்.
புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி | 225 |
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் |
கவிந்திருக்கும் குடைபோன்ற உழவரின் குடில்கள் புதிய வைக்கோலால் வேயப்பட்டிருக்கும். அக் குடில் முற்றத்தில் உழத்தியர் அவல் இடிப்பர். அந்த ஒலியைக் கேட்டுப் பக்கத்தில் மேயும் கிளிகள் பறந்தோடும்.
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனிக் |
நெல் அரிந்து கடா விடுதல்
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் |
230 |
தூம்புடைத் திரடா டுமித்த வினைஞர் பாம்புறை மருதி னோங்குசினை நீழற் பலிபெறு வியன்கள மலிய வேற்றிக் |
வளம் குன்றாத வயல்களில் நெல் விளைந்திருக்கும். பறவைச் சாதி தன் சுற்றத்துடன் நீண்டு வளைந்த வரிசையில் வானில் பறப்பது போல் நெல்லின் கதிர்மணிகள் விளைந்திருக்கும். நெல்லந்தாள் உள்ளே துளையை உடையது. நெல்லைத் தாளோடு உழவர்கள் அறுப்பார்கள். (கட்டுகளாகக் கட்டி) அவற்றைக் களத்திற்குக் கொண்டு செல்வர். களத்தின் ஓரத்தில் மருதமரம் இருக்கும். அதன் நிழலில் பாம்பு இருக்கும். (நாகச்சிலை போலும்) அதற்குப் பலியூட்டிய பின்னர்தான் நெற்கட்டுக்களைக் களத்தில் அடுக்குவர்.
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடுந் துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற் |
235 |
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற் குழுமுநிலைப் போரின் முழுமுத றொலைச்சிப் பகடூர் பிழிந்த பின்றைத் துகடப வையுந் துரும்பு நீக்கிப் பைதறக் குடகாற் றெறிந்த குப்பை வடபாற் |
240 |
செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றுந் தண்பணை தழீஇய தளரா விருக்கைப் |
களத்தில் சேர்த்துள்ள நெற்கட்டுகளில் சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டியிருக்கும். (அந்த அளவுக்கு நெல்மணிகளை அரிந்த தாளிலேயே முதிர விடுவார்கள்.) அரிகளைப் பிரித்து நெல் அடிப்பார்கள். மாடுகளைப் பூட்டி அடித்த தாள்மீது போரடிப்பார்கள். அது பூதம் தன் உறவுக் கூட்டத்தோடு கை கோத்துக்கொண்டு துணங்கை நடனம் ஆடுவது போல இருக்கும். பின் வைக்கோல் , துரும்பு ஆகியவற்றை நீக்கி நெல்லைத் தனியே பிரித்து எடுப்பார்கள். அந்த நெல்லிலும் முதிராத பச்சை நெல் (கருக்காய்) போகும் வண்ணம் மேலைக் காற்றிலே தூற்றுவார்கள். நல்ல நெல்லை களத்தின் வடக்குப் பக்கத்தில் குவித்து வைப்பார்கள். அது செம்பொன் குவித்த மலைபோல் தோன்றும். இதுதான் தண்பணை தழீஇய தளரா இருக்கை. அதாவது ஈர வயல்கள் நிரம்பிய, செல்வ வளத்தில் தளர்ச்சியே காணாத குடியிருப்புப் பகுதிகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, இருக்கும், நெல், போல், அந்த, இலக்கியங்கள், உழவர், வினைஞர், பொரும்பாணாற்றுப்படை, தலையில், எருமை, பூக்களைப், பைஞ்சாய், பத்துப்பாட்டு, விளைந்திருக்கும், நெல்லைத், நெல்லின், பக்கத்தில், களத்தின், பறவைச், களத்தில், தளரா, பிரித்து, தழீஇய, தண்பணை, துரும்பு, இவர்களின், சூடிக்கொள்வர், அப்போது, என்னும், அங்கு, காரேறு, சண்டையிட்டுக்கொள்ளும், உழவுத், நாற்று, விளையாடுவர், பழைய, முள்ளிப், சூடிக், சங்க, அவர்களின்