முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 6.நீத்தல் விண்ணப்பம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 6.நீத்தல் விண்ணப்பம்
6.நீத்தல் விண்ணப்பம்
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. | 122 |
மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும் விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர் ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. | 123 |
கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. | 124 |
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண் டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. | 125 |
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. | 126 |
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. | 127 |
உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப் பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. | 128 |
எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. | 129 |
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. | 130 |
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. | 131 |
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. | 132 |
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. | 133 |
மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக் கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. | 134 |
சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம் விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக் கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. | 135 |
அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால் தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. | 136 |
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள் பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. | 137 |
குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. | 138 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
6.நீத்தல் விண்ணப்பம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டாய், விடுதிகண்டாய், விடுதி, உம்பர், மங்கைக்கு, விட்டிடுதி, ஒண்மையனே, அடியேன், சச்சையனே, உத்தரகோச, மன்னும், ஆண்டுகொள், எனப்புலனால்