முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.043.திருமுதுகுன்றம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.043.திருமுதுகுன்றம்
7.043.திருமுதுகுன்றம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
435 |
நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை ந்சுவார் துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே. |
7.043.1 |
முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர், 'நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும்' என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? விரைந்து அருள்புரியீர்.
436 |
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. |
7.043.2 |
பெரிய களிற்றியானை, வெள்ளத்தினிடத்திற்சென்று அதனால் வளைத்துக்கொள்ளப்பட்டு மீளமாட்டாது வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, உமது, அழகு பொருந்திய, பொற்றாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள், இத்தனை ஊரிலும் திரிந்தால், அவை வருந்துமோ! வருந்தாவோ!
437 |
தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர் பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. |
7.043.3 |
கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படுகின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ?
438 |
இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென் விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர் அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே. |
7.043.4 |
தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய இயமனை உயிர்போக்கியவரே, புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளைய பிறையையுடைய, தலைக்கண் உள்ள சடைமுடியையுடைய, திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர்; வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது?
439 |
ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே. |
7.043.5 |
மாடங்கள்மேலும், மதில்மேலும், அழகிய கோபுரங்கள் மேலும், மணிமண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில்தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?
440 |
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள் முழைவள ராளி முழக்க றாமுது குன்றரே. |
7.043.6 |
மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தையுடைய யானைகளும், குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், நூல் தங்கியுள்ளதுபோலும், நுட்பமான இடையினையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண், குழை பொருந்திய காதுகள் பக்கங்களில் மோதும்படி முற்பட்டு நின்று நடனமாடுவதோ?
441 |
சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழக்கையே குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே. |
7.043.7 |
குன்றில் களிற்றியானையைச் சிங்கம் உண்டுவிட, அதன் பிடியானையையும், கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின் முன் கட்டிவைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி யிருப்பவரே, நீர், பல இல்லங்களிலும் சென்று, அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க, தொழுத்திகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது, மேற்கொள்ளத் தக்க வாழ்க்கையோ?
442 |
அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. |
7.043.8 |
பெண் குரங்கிற்கும், ஆண் குரங்கிற்கும் உண்ணுதற் குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?
443 |
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய அட்டுமின் சில்பலிக் கென்ற கங்கடை நிற்பதே பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. |
7.043.9 |
யாவரும் எதிர்வந்து அடிவணங்க நிற்கின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள்தோறும், அறம் வளர்க்க, நீர், இல்லங்களின் வாயில் தோறும் சென்று `இடுமின்` என்று இரந்து, சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மைதான் என்னோ?
444 |
எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிறர் என்சொலார் பத்தியி னால்இடு வாரி டைப்பலி கொள்மினோ எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே. |
7.043.10 |
எப் பக்கங்களிலும் அலைபுரண்டு செல்லும்படி இரு கரைகளின்மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற முத்தாறு வலம்சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே, ஒன்றையும் நீக்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்லமாட்டார்கள்? ஆகையால், அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்.
445 |
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப் பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார் எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே. |
7.043.11 |
முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுதுகுன்றம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குன்றரே, திருமுதுகுன்றத்தில், எழுந்தருளியிருப்பவரே, சென்று, தோறும், நீங்காத, புகழையுடைய, திருமுதுகுன்றத்து, பொருந்திய, செல்வது, ஏந்தியவர், நின்று, இறைவரே, றாமுது, முழக்க, சீர்முது, குரங்கிற்கும், முத்தாறு, அடிதொழ, குறத்திகள், பிச்சை, அவைகள், தருகின்ற, முத்திமுத், யும்முது, முத்தியைத், காதுகள், எத்திசை, காக்கின்ற, செய்வது, இருக்கின்றது, வாய்க்கும், செய்வதென், திருமுறை, திருச்சிற்றம்பலம், போலும், பலிக்குச், அகந்தொறும், மேகங்கள், நீரும், பிச்சைக்குச், திருமுதுகுன்றம், இல்லந்தோறும்