முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.052.திருநாகேச்சரம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.052.திருநாகேச்சரம்
5.052.திருநாகேச்சரம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
1590 | நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி செல்வர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.1 |
திருநாகேச்சரத்திறைவர், நல்லவர்; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு ஆட்டுவர்; வல்வினைகளைத் தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர்; பல்லில்லாத ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருடசெல்வர் ஆவர்.
1591 | நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி வினையொடு பாவ மாயின பற்றறு வித்திடும் தேவர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.2 |
திருநாகேச்சரத்திறைவர் நாவலம் பெருந் தீவாகிய (ஜம்புத்வீபம்) காட்டிலுள்ளவர். அனைவரும் மேவிவந்து வணங்கி, வினையொடு பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர்.
1592 | ஓத மார்கட லின்விட முண்டவர் ஆதி யாரய னோடம ரர்க்கெலாம் மாதொர் கூறர் மழுவல னேந்திய நாதர்போல் திரு நாகேச் சரவரே. |
5.052.3 |
திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர்; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர்; உடையொரு பாகர்; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர்.
1593 | சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் வந்து சீர்வழி பாடுகள் செய்தபின் ஐந்த லையர வின்பணி கொண்டருள் மைந்தர் போல்மணி நாகேச் சரவரே. |
5.052.4 |
திருநாகேச்சரத்திறைவர் சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின் பணியையும் கொண்டருளும் மைந்தர்(பெருவீரர்)ஆவர்.
1594 | பண்டொர்நாளிகழ் வான்பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் தண்டமாவிதா தாவின் தலைகொண்ட செண்டர்போல்திரு நாகேச் சரவரே. |
5.052.5 |
திருநாகேச்சரத்திறைவர், முன்னோர் நாளில் குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச் செய்தவரும், தண்டையாகப் பிரம தேவனின் தலையைக் கொண்ட செண்டு உடையவரும் ஆவர்.
1595 | வம்பு பூங்குழல் மாது மறுகவோர் கம்ப யானை யுரித்த கரத்தினர் செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை நம்பர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.6 |
திருநாகேச்சரத்திறைவர் புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல, ஒப்பற்றதாய் நினைப்பாரை நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர்; செம்பொன்னைப் போன்ற கொன்றை மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர்.
1596 | மானை யேந்திய கையினர் மையறு ஞானச் சோதிய ராதியர் நாமந்தான் ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்கும் தேனர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.7 |
திருநாகேச்சரத்திறைவர் மானை ஏந்திய கையை உடையவர்; குற்றமற்ற அறிவொளியாயவர்; உலகிற்கெல்லாம் ஆதி யாயவர்; தம் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர்.
1597 | கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி அழக ரால்நிழற் கீழற மோதிய குழகர் போல்குளிர் நாகேச் சரவரே. |
5.052.8 |
திருநாகேச்சரத்திறைவர் கழல்கொண்ட சேவடியினர்; காலனைக் காய்ந்தருளியவர்; தழல் வண்ணம் கொண்ட செம்மேனியர்; வெண்ணீற்றுப்பொடியணிந்த அழகர்; கல்லால நிழற்கீழ் இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர்.
1598 | வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண் சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.9 |
திருநாகேச்சரத்திறைவர் வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர்; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின் திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிசெய்யும் உயர்ந்தோர் ஆவர்.
1599 | தூர்த்தன் தோண்முடி தாளுந் தொலையவே சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல் ஆர்த்து வந்துல கத்தவ ராடிடும் தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே. |
5.052.10 |
திருநாகேச்சரத்திறைவர் மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும், முடிகளும், தாள்களும் தொலையுமாறு திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர்; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகேச்சரம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாகேச், திருநாகேச்சரத்திறைவர், போல்திரு, நம்பர், செய்தபின், மைந்தர், காலனைக், தீர்த்துக், மூன்றுடன், குழகர், ஏந்திய, வணங்கி, தீர்க்கும், வல்வினை, நல்லதோர், மருந்துகள், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருநாகேச்சரம், வினையொடு