முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.028.திருவையாறு
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.028.திருவையாறு
5.028.திருவையாறு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1345 | சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம் முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர் அந்தி வண்ணமு மாவரை யாறரே. |
5.028.1 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், அடியவர்களின் சிந்தை வண்ணமும்; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும், முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும், தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர்.
1346 | மூல வண்ணத்த ராய்முத லாகிய கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர் நீல வண்ணத்த ராகி நெடும்பளிங் கால வண்ணத்த ராவரை யாறரே. |
5.028.2 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும், முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும், வளமையான சுடர்விடுகின்ற நீலநிறமும நீண்ட பளிங்கனைய தம் திருவுருத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர்.
1347 | சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும் அந்திப் போதழ காகிய வண்ணமும் பந்திக் காலனைப் பாய்ந்த தொர் வண்ணமும் அந்தி வண்ணமு மாவரை யாறரே. |
5.028.3 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும், தீயின் வண்ணமும், அழகாகிய அந்திப்போதின் வண்ணமும், தானும், கடாவும், பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர்.
1348 | இருளின் வண்ணமு மேழிசை வண்ணமும் சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும் மருளு நான்முகன் மாலொடு வண்ணமும் அருளும் வண்ணமு மாவரை யாறரே. |
5.028.4 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர். இருளின் வண்ணமும், ஏழிசைகளின் வண்ணவேற்றுமைகளும், சுருண்ட சடையின் வண்ணமும், ஒளியின் வண்ணமும். நான்முகனும் திருமாலும் விண்பறந்தும் மண் புகுந்தும் காண்டற்கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர்.
1349 | இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல் குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும் மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும் அழைக்கும் வண்ணமு மாவரை யாறரே. |
5.028.5 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணைவண்ணமும், மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும், தம்மடியார்களை அழைத்து அருள் வழங்கும் வண்ணமும் உடையவர்.
1350 | இண்டை வண்ணமு மேழிசை வண்ணமும் தொண்டர் வண்ணமுஞ்சோதியின் வண்ணமும் கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி அண்ட வண்ணமு மாவரை யாறரே. |
5.028.6 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும், ஏழிசை வடிவாகிய இயல்பும், தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும், ஒளி-இயல்பும், கண்ட வண்ணங்கள் அனைத்தும், கனல்போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்கவண்ணமும், அண்டங்களின் வண்ணமும் ஆகியவர்.
1351 | விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும் விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும் அரும்பின் வண்ணமு மாவரை யாறரே. |
5.028.7 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் வேதத்தின் இயல்பும், கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும், தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும், அரும்பின் இயல்பும் உடையராவர்.
1352 | ஊழி வண்ணமு மொண்சுடர் வண்ணமும் வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும் வாழித் தீயுரு வாகிய வண்ணமும் ஆழி வண்ணமு மாவரை யாறரே. |
5.028.8 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஓளிரும் இயல்பும், ஓளிச்சுடர் இயல்பும், யானையின் பச்சைத்தோலைப் போர்த்தருளிய இயல்பும், ஊழித்தீ உருவாகிய இயல்பும், கடல்வண்ணமும் உடையவராவர்.
1353 | செய்த வன்திரு நீறணி வண்ணமும் எய்த நோக்கரி தாகிய வண்ணமும் கைது காட்சி யரியதோர் வண்ணமும் ஐது வண்ணமு மாவரை யாறரே. |
5.028.9 |
ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன், ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன். காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன், மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன். மென்மை தழுவிய அழகினன்.
1354 | எடுத்த வாளரக் கன்திறல் வண்ணமும் இடர்கள் போர்பெரி தாகிய வண்ணமும் கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும் அடுத்த வண்ணமு மாவரை யாறரே. |
5.028.10 |
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல், துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும், மிகுந்த தன் கைநரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வண்ணமும், இயல்பும், வண்ணமு, தலத்தின்கண், இறைவர், ஐயாற்றுத், எழுந்தருளியுள்ள, வண்ணத்த, சிந்தை, விரும்பும், உடையவர், வண்ணங்க, போன்று, வழங்கும், அடுத்த, அரும்பின், தீர்த்திடும், வேதத்தின், காலனைப், தோன்றிய, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவையாறு, இருளின், அருளும், மேழிசை, உடையவராவர்