முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.014.திருவிடைமருதூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.014.திருவிடைமருதூர்

5.014.திருவிடைமருதூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1205 | பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மானிடை மருதினில் பூச நாம்புகு தும்புன லாடவே. |
5.014.1 |
பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு, புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம்.
1206 | மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் முறையி னால்முனி கள்வழி பாடுசெய் இறைவ னெம்பெரு மானிடை மருதினில் உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே. |
5.014.2 |
வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும், எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும்.
1207 | கொன்றை மாலையுங் கூவிள மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன் என்று மெந்தை பிரானிடை மருதினை நன்று கைதொழு வார்வினை நாசமே. |
5.014.3 |
கொன்றை மாலையும், கூவிளமும், ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக்கைதொழுவார் வினைகள் நாசமாகும்.
1208 | இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளு மிடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. |
5.014.4 |
எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும். அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும்; அப்பிறப்பில் பிறவித்துயர் இல்லாவகையில் நீங்கும்.
1209 | வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையும் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார் எண்டி சைக்கு மிடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. |
5.014.5 |
வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க்கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும்.
1210 | ஏற தேறு மிடைமரு தீசனார் கூறு வார்வினை தீர்க்குங் குழகனார் ஆறு செஞ்சடை வைத்த அழகனார் ஊறி யூறி யுருகுமெ னுள்ளமே. |
5.014.6 |
விடையினை உகந்தேறும் இறைவரும், தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும், ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது.
1211 | விண்ணு ளாரும் விரும்பப் படுபவர் மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர் எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை நண்ணி னாரைநண் ணாவினை நாசமே. |
5.014.7 |
விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும், மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா.
1212 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார் கந்த மாலைகள் சூடுங் கருத்தனார் எந்தை யென்னிடை மருதினி லீசனைச் சிந்தை யால்நினை வார்வினை தேயுமே. |
5.014.8 |
திருநீறு பூசும் விகிர்தரும், நறுமண மாலைகள் சூடும் தலைவரும், என் தந்தை போல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும்.
1213 | வேத மோதும் விரிசடை யண்ணலார் பூதம் பாடநின் றாடும் புனிதனார் ஏதந் தீர்க்கு மிடைமரு தாவென்று பாத மேத்தப் பறையும்நம் பாவமே. |
5.014.9 |
தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.
1214 | கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும் தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே. |
5.014.10 |
இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன், தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி, கட்டிபட்ட கரும்பு, குளிர்மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள், தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன். தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செவ்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம்.
1215 | முற்றி லாமதி சூடும் முதல்வனார் ஒற்ற னார்மலை யாலரக் கன்முடி எற்றி னார்கொடி யாரிடை மருதினைப் பற்றி னாரைப் பற்றாவினை பாவமே. |
5.014.11 |
இளம்பிறை சூடும் முதல்வரும், மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும், இடபக்கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடைமருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருதூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிடைமரு, வார்வினை, கொண்டு, வினைகள், வானவர், திருவிடைமருதூர், இடைமருதூர், சூடும், இடைமருதூரில், நீங்கும், செல்வம், விளைத்திடும், கூத்தனார், விரிசடை, எழுந்தருளியிருக்கும், மாலைகள், பூசும், ளாரும், படுபவர், கொன்றையும், மருதினை, கொண்டடி, னெம்பெரு, நாண்மலர், திருச்சிற்றம்பலம், திருமுறை, மானிடை, மருதினில், கொன்றை, சென்று, உள்ளம், னுள்ளமே, மறையின், உறையும்