முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.027.திருச்சக்கரப்பள்ளி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.027.திருச்சக்கரப்பள்ளி
3.027.திருச்சக்கரப்பள்ளி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
3085 | படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர் விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல் சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே |
3.027.1 |
சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும்.
3086 | பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச் சூடினார் படுதலை துன்எருக் கதனொடும் நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச் சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே |
3.027.2 |
சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். மண்டையோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும்.
3087 | மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும் பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும் துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே |
3.027.3 |
சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது, ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3088 | நலமலி கொள்கையார் நான்மறை பாடலார் வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை மலர்மலி சலமொடு வந்திழி காவிரி சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே |
3.027.4 |
சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும், மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3089 | வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல் அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர் கந்தமார் மலரொடு காரகில் பல்மணி சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே |
3.027.5 |
சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர், நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும்.
3090 | பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே |
3.027.6 |
உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3091 | பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே |
3.027.7 |
சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தரும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3092 | முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள் எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால் அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே |
3.027.8 |
முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3093 | துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர் பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர் மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும் தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே |
3.027.9 |
கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
3094 | உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள் விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல் வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும் தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே |
3.027.10 |
உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சார்த்தியும், குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக!
3095 | தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம் கண்ணுத லவனடிக் கழுமல வளநகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல் பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே |
3.027.11 |
குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சக்கரப்பள்ளி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வளநகர், சக்கரப், பள்ளியே, திருச்சக்கரப்பள்ளி, வீற்றிருந்தருளும், அப்பெருமான், என்பதாகும், சிவபெருமான், சடைமுடியில், அணிந்தவர், கொண்டவர், குளிர்ந்த, கங்கையைச், தாங்கியவர், விரிபுனல், என்னும், சூடியவர், செய்தவர், உமாதேவியைத், நான்கு, தொழுது, கொன்றை, நான்மறை, போன்று, செந்தமிழ், கமழும், ஒலிக்கின்ற, முப்புரம், திருமுறை, திருச்சக்கரப், சந்திரனைச், பூசியவர், படைக்கலனாக, உடையவர், கூறாகக், திருமேனியில், மழுவைப், உறைவிடஞ், பாயும், உமையொரு, கூறனார், சூடினார், திருச்சிற்றம்பலம்