முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.081.சீர்காழி
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.081.சீர்காழி
1.081.சீர்காழி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
875 |
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. |
1.081.1 |
நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.
876 |
துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந் தௌவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங் களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே. |
1.081.2 |
வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தௌந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச் சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.
877 |
ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச் சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற் பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற் காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. |
1.081.3 |
பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன் பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழி நகராகும்.
இப்பதிகத்தின் 4-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.4 |
இப்பதிகத்தின் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.5 |
இப்பதிகத்தின் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.6 |
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
878 |
இரவிற் றிரிவோர்கட் கிறைதோ
ளிணைபத்தும் நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும் பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங் கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே. |
1.081.8 |
இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித் திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க அடியார் வாழும், சீகாழிப் பதியாகும்.
879 |
மாலும் பிரமனு மறியா மாட்சியான் றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன் ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங் காலம் பகராதார் காழிந் நகர்தானே. |
1.081.9 |
திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும் மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும் பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொரு நாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழி நகராகும்.
880 |
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. |
1.081.10 |
உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழி நகரைப் பேணித் தொழுவீர்களாக.
881 |
வாசங் கமழ்காழி மதிசெஞ்
சடைவைத்த ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன் பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப் பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. |
1.081.11 |
பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப் பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீர்காழி - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நகர்தானே, காழிந், இப்பதிகத்தின், சிவபிரானது, செய்யுள், போயிற்று, சீகாழி, சிதைந்து, நகராகும், பொருந்திய, வழங்கும், திரியும், சீகாழிப், பேணித், பரவித், திருமுறை, எழுந்தருளிய, சிவபெருமான், திருச்சிற்றம்பலம், சீர்காழி