முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.031.திருக்குரங்கணின்முட்டம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.031.திருக்குரங்கணின்முட்டம்
1.031.திருக்குரங்கணின்முட்டம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர்.
தேவியார் - இறையார்வளையம்மை.
327 |
விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும் கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும் கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம் தொழுநீர் மையர்தீ துறுதுன் பமிலரே. |
1.031.1 |
பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்தவரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.
328 |
விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக் கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில் குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம் உடையா னெனையா ளுடையெந் தைபிரானே. |
1.031.2 |
உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.
329 |
சூலப் படையான் விடையான்
சுடுநீற்றான் காலன் றனையா ருயிர்வவ் வியகாலன் கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத் தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே. |
1.031.3 |
அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தைபிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் காலகாலன் எனப்படுபவன்.
330 |
வாடா விரிகொன் றைவலத் தொருகாதில் தோடார் குழையா னலபா லனநோக்கி கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம் ஆடா வருவா ரவரன் புடையாரே. |
1.031.4 |
வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடியவனும், வலக்காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன்.
331 |
இறையார் வளையா ளையொர்பா கத்தடக்கிக் கறையார் மிடற்றான் கரிகீ றியகையான் குறையார் மதிசூ டிகுரங் கணின்முட்டத் துறைவா னெமையா ளுடையொண் சுடரானே. |
1.031.5 |
இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும், நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான்.
332 |
பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம் கலவும் மயில்கா முறுபே டையொடாடிக் குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம் நிலவும் பெருமா னடிநித் தல்நினைந்தே. |
1.031.6 |
தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.
333 |
மாடார் மலர்க்கொன் றைவளர்
சடைவைத்துத் தோடார் குழைதா னொருகால திலிலங்கக் கூடார் மதிலெய் துகுரங் கணின்முட்டத் தாடா ரரவம் மரையார்த் தமர்வானே. |
1.031.7 |
சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து, ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான்.
334 |
மையார் நிறமே னியரக் கர்தங்கோனை உய்யா வகையா லடர்த்தின் னருள்செய்த கொய்யார் மலர்சூ டிகுரங் கணின்முட்டம் கையாற் றொழுவார் வினைகாண் டலரிதே. |
1.031.8 |
கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.
335 |
வெறியார் மலர்த்தா மரையா
னொடுமாலும் அறியா தசைந்தேத் தவோரா ரழலாகும் குறியா னிமிர்ந்தான் றன்குரங் கணின்முட்டம் நெறியாற் றொழுவார் வினைநிற் ககிலாவே. |
1.031.9 |
மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர்.
336 |
கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும் வழுவாச் சமண்சாக் கியர்வாக் கவைகொள்ளேல் குழுமின் சடையண் ணல்குரங் கணின்முட்டத் தெழில்வெண் பிறையா னடிசேர் வதியல்பே. |
1.031.10 |
தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத்திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும்.
337 |
கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன் கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம் சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக வல்லார்க் கௌதாம் பிறவா வகைவீடே. |
1.031.11 |
கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குரங்கணின்முட்டம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கணின்முட்டம், குரங்கணில், தகுரங், சிவபிரான், கணின்முட்டத், இலராவர், இறைவன், உறையும், குரங்கணில்முட்டத்தில், விளங்கும், கொன்றை, மாலையைச், இறையார், சூழப்பட்ட, முட்டத்து, றொழுவார், தோடார், டிகுரங், முட்டத்தில், தைபிரானே, தொழுபவர், திருச்சிற்றம்பலம், கையில், நிறைந்த, பொழில்சூழ்ந், கழுநீர், திருமுறை, திருக்குரங்கணின்முட்டம், சடைமுடியை