முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.025.திருச்செம்பொன்பள்ளி
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.025.திருச்செம்பொன்பள்ளி
1.025.திருச்செம்பொன்பள்ளி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர்.
தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.
261 |
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேன் மன்னும் பாவமே. |
1.025.1 |
மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.
262 |
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் சீரார் செம்பொன் பள்ளி மேவிய ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச் சேரா தவர்மேற் சேரும் வினைகளே. |
1.025.2 |
கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.
263 |
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் திரையார் செம்பொன் பள்ளி மேவிய நரையார் விடையொன் றூரும் நம்பனை உரையா தவர்மே லொழியா வூனமே. |
1.025.3 |
மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.
264 |
மழுவா ளேந்தி மாதோர்பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேற் றுயர மில்லையே. |
1.025.4 |
மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.
265 |
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த சிலையார் செம்பொன் பள்ளி யானையே இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் நிலையா வணங்க நில்லா வினைகளே. |
1.025.5 |
மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினை நில்லா.
266 |
அறையார் புனலோ டகிலும்
வருபொன்னிச் சிறையார் செம்பொன் பள்ளி மேவிய கறையார் கண்டத் தீசன் கழல்களை நிறையால் வணங்க நில்லா வினைகளே. |
1.025.6 |
பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.
267 |
பையா ரரவே ரல்கு லாளொடும் செய்யார் செம்பொன் பள்ளி மேவிய கையார் சூல மேந்து கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே. |
1.025.7 |
அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.
268 |
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் தேனார் செம்பொன் பள்ளி மேவிய ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலே யடைந்து வாழ்மினே. |
1.025.8 |
வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.
269 |
காரார் வண்ணன் கனக மனையானும் தேரார் செம்பொன் பள்ளி மேவிய நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை ஓரா தவர்மே லொழியா வூனமே. |
1.025.9 |
நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக் காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.
270 |
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித் திரியவே தேசார் செம்பொன் பள்ளி மேவிய ஈசா வென்ன நில்லா விடர்களே. |
1.025.10 |
அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.
271 |
நறவார் புகலி ஞான சம்பந்தன் செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப் பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும் உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. |
1.025.11 |
தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்செம்பொன்பள்ளி - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - செம்பொன், பொருந்திய, நில்லா, எழுந்தருளிய, செம்பொன்பள்ளியில், வினைகளே, விளங்கும், பள்ளியில், சிவந்த, வினைகள், சடைமுடியை, மரங்களையும், லொழியா, குற்றங்கள், சூழ்ந்த, பேசித், வயல்கள், கடவுளை, தவர்மே, உடையவனுமாகிய, கொண்டு, முறுக்கேறிய, கண்டத், கழல்களை, மாதோர், திருச்சிற்றம்பலம், திருமுறை, பாகமாக, கண்டத்தை, சேரும், திருச்செம்பொன்பள்ளி, புரிபுன், வணங்கி, திருவடிகளை, டகிலும்