முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.123.திருவலிவலம் - திருவிராகம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.123.திருவலிவலம் - திருவிராகம்
1.123.திருவலிவலம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர்.
தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
1326 |
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள் மேவிய திருவுரு வுடையவன் விரைமலர் மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. |
1.123.1 |
மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண்ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட்டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன்.
1327 |
இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர் மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. |
1.123.2 |
மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.
1328 |
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு மருவலி பொழில்வலி வலமுறை யிறையே. |
1.123.3 |
மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலை போல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரிய கண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.
1329 |
அனனிகர் சடையழ லவியுற வெனவரு புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும் எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. |
1.123.4 |
வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடையழலை அவிப்பதற்கென வருவது போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடிமிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.
1330 |
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. |
1.123.5 |
மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.
1331 |
தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில் வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. |
1.123.6 |
அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித் தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள்புரிபவனாவான்.
1332 |
நலிதரு தரைவர நடைவரு மிடையவர் பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர் வலிவரு மதில்விலி வலமுறை யிறையே. |
1.123.7 |
அழகுமிக்கக் கவின் கலை முதலான தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும், அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப்பிட்சாடனனாய் வருபவன்.
1333 |
இரவண னிருபது கரமெழின் மலைதனின் இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து இரவண மமர்பெய ரருளின னகநெதி இரவண நிகர்வலி வலமுறை யிறையே. |
1.123.8 |
தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்துவேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இராவணன் என்ற பெயரையும் அருளியவன்.
1334 |
தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும் ஏனம தாய்நில மகழரி யடிமுடி தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி வானணை மதில்வலி வலமுறை யிறையே. |
1.123.9 |
வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.
1335 |
இலைமலி தரமிகு துவருடை யவர்களும் நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன் மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. |
1.123.10 |
மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.
1336 |
மன்னிய வலிவல நகருறை யிறைவனை இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை உன்னிய வொருபது முயர்பொருள் தருமே. |
1.123.11 |
நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணி உரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலிவலம் - திருவிராகம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உறையும், வலமுறை, யிறையே, இறைவன், வலிவலத்தில், சூழ்ந்த, விளங்கும், வாழும், உடையவன், பொழில், மதில்களால், மதில்வலி, வுடையவன், பொழில்வலி, சூழப்பட்ட, அஞ்சத்தக்க, உடையவனாய், செய்து, வழங்கும், மிகுதியான, முடிமிசை, மலர்கள், திருவுரு, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவிராகம், விரைமலர், திருவலிவலம், திருமேனியை, உமையம்மையோடு, அணிந்த, திருநீறு