முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.110.திருவிடைமருதூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.110.திருவிடைமருதூர்

1.110.திருவிடைமருதூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1185 |
மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினொ டிறவுமானான் அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் இருந்தவன் வளநக ரிடைமருதே. |
1.110.1 |
பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
1186 |
தோற்றவன் கேடவன் றுணைமுலையாள் கூற்றவன் கொல்புலித் தோலசைத்த நீற்றவ னிறைபுன னீள்சடைமேல் ஏற்றவன் வளநக ரிடைமருதே. |
1.110.2 |
உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒருகூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
1187 |
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் நடைநவி லேற்றினான் ஞாலமெல்லாம் உடைதலை யிடுபலி கொண்டுழல்வான் இடைமரு தினிதுறை யெம்மிறையே. |
1.110.3 |
மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.
1188 |
பணைமுலை யுமையொரு பங்கனொன்னார் துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக் கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற இணையிலி வளநக ரிடைமருதே. |
1.110.4 |
பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவ பெருமானது வளநகர் இடைமருது ஆகும்.
1189 |
பொழிலவன் புயலவன் புயலியக்கும் தொழிலவன் றுயரவன் துயரகற்றும் கழலவன் கரியுரி போர்த்துகந்த எழிலவன் வளநக ரிடைமருதே. |
1.110.5 |
ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்து அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
1190 |
நிறையவன் புனலொடு மதியும்வைத்த பொறையவன் புகழவன் புகழநின்ற மறையவன் மறிகட னஞ்சையுண்ட இறையவன் வளநக ரிடைமருதே. |
1.110.6 |
குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கையோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
1191 |
நனிவளர் மதியொடு நாகம்வைத்த பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் முனிவரொ டமரர்கண் முறைவணங்க இனிதுறை வளநக ரிடைமருதே. |
1.110.7 |
நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறை மதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.
1192 |
தருக்கின வரக்கன தாளுந்தோளும் நெரித்தவ னெடுங்கைமா மதகரியன் றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும் எரித்தவன் வளநக ரிடைமருதே. |
1.110.8 |
செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மத யானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
1193 |
பெரியவன் பெண்ணினொ டாணுமானான் வரியர வணைமறி கடற்றுயின்ற கரியவ னலரவன் காண்பரிய எரியவன் வளநக ரிடைமருதே. |
1.110.9 |
எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகியதிருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
1194 |
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன புந்தியி லுரையவை பொருள்கொளாதே அந்தண ரோத்தினொ டரவமோவா எந்தைதன் வளநக ரிடைமருதே. |
1.110.10 |
சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.
1195 |
இலைமலி பொழிலிடை மருதிறையை நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் உலகுறு புகழினொ டோங்குவரே. |
1.110.11 |
இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருதூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரிடைமருதே, வளநகர், விளங்குபவனும், இடைமருதாகும், உறையும், சிவபிரானது, கொண்டவனும், சிவபெருமானது, உடையவனும், இருப்பவனும், சிவபிரான், இடைமருது, தனங்களை, உயிர்களின், முனிவரொ, காரணமானவனும், திருவிடைமருதூர், திருமுறை, திருச்சிற்றம்பலம், உமையம்மையை