முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 3.04. குங்குலியக் கலய நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 3.04. குங்குலியக் கலய நாயனார் புராணம்

3.04. குங்குலியக் கலய நாயனார் புராணம்
836 | வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயிற் பதி எறி நீர்க் கங்கை தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக் காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் | 3.4.1 | 837 | வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் அயல் எலாம் வேள்விச் சாலை அணை எலாம் கழுநீர்க் கற்றை புயல் எலாம் கமுகின் காடு அப்புறமெலாம் அதன் சீர் போற்றல் செயல் எலாம் தொழில்கள் ஆறே செழுந் திருக் கடவூர் என்றும் | 3.4.2 | 838 | குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும் இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல் வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல் | 3.4.3 | 839 | துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம் பால் நாறும் மங்குல் தோய் மாடச் சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் அங்கவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் | 3.4.4 | 840 | மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார் அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் | 3.4.5 | 841 | பாலனாம் மறையோன் பற்றப் பயங்கொடுத்து அருளும் ஆற்றால் மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து காலனார் உயிர் செற்றார்க்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் | 3.4.6 | 842 | கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பிரார்க்கு பொங்கு குங்குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்ல அங்கவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார் | 3.4.7 | 843 | இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பன்னெடுந் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னில் மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் | 3.4.8 | 844 | யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறிப் பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி காதல்செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக் கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் | 3.4.9 | 845 | அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக ஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் இப்பொதி என் கொல்? என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டு முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார் | 3.4.10 | 846 | ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான நாறுகுங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல பேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து வேறினிக் கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார் | 3.4.11 | 847 | பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும் என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார் அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழுகளிப்பினோடும் | 3.4.12 | 848 | விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று எய்தி என்னை உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லார் | 3.4.13 | 849 | அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் தன் பெரு நிதியந் தூர்த்துத் தரணி மேல் நெருங்க எங்கும் பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்க மல்பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட | 3.4.14 | 850 | மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி அற்றை நாள் இரவு தன்னில் அயர்வுறத் துயிலும் போதில் நல்தவக் கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்கத் தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் | 3.4.15 | 851 | கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்துப் போற்றித் தம் பெரும் கணவனார்க்குத் திரு அமுது அமைக்கச் சார்ந்தார் | 3.4.16 | 852 | காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம் ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப் பாலின் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் | 3.4.17 | 853 | கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கை அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித் தலை மிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார் | 3.4.18 | 854 | இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த செல்வத்தைக் கண்டு நின்று திரு மனையாரை நோக்கி வில்லொத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்கொல் என்ன அல்லொத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் | 3.4.19 | 855 | மின்னிடை மடவார் கூற மிக்க சீர் கலயனார் தாம் மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கி என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் தன்னருள் இருந்த வண்ணம் என்று கைதலைமேல் கொண்டார் | 3.4.20 | 856 | பதும நற்திருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு கது மெனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்பரோடும் விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம் | 3.4.21 | 857 | ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச் சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால் ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் | 3.4.22 | 858 | செங்கண் வெள் ஏற்றின் பாகன் திருப் பனந் தாளில் மேவும் அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக் கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல | 3.4.23 | 859 | மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க நன்னேறி கலயனார் தாம் நாதனை நேரே காணும் அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும் மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் | 3.4.24 | 860 | மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று தொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை முழுதுலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும் செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார் | 3.4.25 | 861 | காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி | 3.4.26 | 862 | சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி யானும் இவ் இளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று தேனலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார் | 3.4.27 | 863 | நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க ஒண்ணுமோ? கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் | 3.4.28 | 864 | பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் கார்பெறு கானம் போலக் களித்தன கைகள் கூப்பி வார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து | 3.4.29 | 865 | விண் பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத் திண்சிலை குனிய நின்றார் செந்நிலைக் காணச் செய்தீர் மண்பகிர்ந்தவனும் காணா மலரடி இரண்டும் யாரே பண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் | 3.4.30 | 866 | என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர் மன்றிடை ஆடல் செய்யும் மலர்க் கழல் வாழ்த்தி வைகி | 3.4.31 | 867 | சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி நிலவுதம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகரில் காழித் தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அலர்புகழ் அரசுங்கூட அங்கு எழுந்து அருளக் கண்டு | 3.4.32 | 868 | மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்தி ஈறிலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் ஆறு நற்சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார் | 3.4.33 | 869 | கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த திருப்பணி பலவுஞ் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் | 3.4.34 | 870 | தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக் கூனல்தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த பான்மைத்திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலே மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன் | 3.4.35 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.04. குங்குலியக் கலய நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டு, கலயனார், நோக்கி, எல்லாம், தொண்டர், எங்கும், மிக்கார், செல்வம், மனையில், அடிசில், சென்று, என்றார், கடவூர், அருளினாலே, மன்னிய, மருங்கு, ஆற்றால்