ஜமீன்தார் மகன்
1. முன்னுரை
சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப்
பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து
எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப்
பிடித்துத் தள்ளப்படுகிறார்கள்.
மூன்றாவது கூறிய எழுத்தாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். கொஞ்சங்கூட எதிர்பாராத விதத்தில் எழுத்தாளன் ஆனவன். இன்றைய தினம் நான் 'வாடா மலர்' பிரசுராலயத்தின் தலைவனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு இணையில்லாத் தொண்டு செய்து, தமிழைக் கொன்று வருவதற்குப் பொறுப்பாளி யார் என்று கேட்டால், நிச்சயமாக நான் இல்லை. என் கைக்குள் அகப்படாத சந்தர்ப்பங்களின் மேலேயே அந்தப் பொறுப்பைச் சுமத்த வேண்டியவனாயிருக்கிறேன். இல்லையென்றால், முதன் முதலாக நான் பேனாவைக் கையில் பிடித்துக் கதை எழுதத் தொடங்கிய வேளையின் கூறு என்று சொல்ல வேண்டும்.
அப்படி எழுத்தாளர் உலகத்தில் என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளக் காரணமாயிருந்த எனது முதல் கதை என்ன என்று தெரிய வேண்டாமா? அது என்னுடைய சொந்தக் கதையே தான். பர்மா நாட்டிலே, ஒரு அகாதமான காட்டு மலைப் பாதையிலே, மாலை நேரத்தின் மங்கிய வெளிச்சத்திலே அதை எழுதினேன். நான் அவ்விதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பக்கத்து மரத்தடியிலேயிருந்து இரண்டு அழகிய, விசாலமான, கருநீல வண்டுகளை யொத்தகண்கள், இமை கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன! சற்று எழுதுவதை நிறுத்தி, நான் சுற்றுமுற்றும் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, அந்த மரத்தடியை நோக்குவேன். அப்போது அந்தக் கண்கள் ஒரு குறுநகை புரிந்து விட்டு, வேறு பக்கம் நோக்கும். மறுபடி நான் எழுதத் தொடங்கியதும், அந்தக் கண்கள் இரண்டும் என்னை நோக்குகின்றன என்பதை என் உள்ளுணர்ச்சி மட்டுமல்ல - என் உடம்பின் உணர்ச்சியே எனக்குத் தெரியப்படுத்தும்.
மலர்ந்து விழித்த அந்த நயனங்களிலேதான் என்னமாய் சக்தி இருந்ததோ, எனக்குத் தெரியாது. அந்த நயனங்களுக்குரியவளான நங்கையிடம் வேறு என்ன மந்திரம் இருந்ததோ, அதுவும் எனக்குத் தெரியாது. அவள் தன் கண்களின் தீட்சண்யமான பார்வையினால், என் உடைமை, உள்ளம், ஆவி எல்லாம் ஒருங்கே கவர்ந்து, என்னை அடிமை கொண்டு, சுய புத்தியுடன் இருந்த காலத்தில் நான் ஒரு நாளும் செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் செய்யப் பண்ணினாள் என்பது மட்டுந்தான் தெரியும்.
ஆம்; ஒருவிதக் கஷ்டமும் இன்றிச் சுயபுத்தியுடனே தாய் நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் இருக்கத்தான் இருந்தது. அதை நான் வேண்டுமென்று தவற விட்டதை நினைத்தால், விதியைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்வதற்கு முடியாமலிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜமீன்தார் மகன் - Zamindar Mahan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், எனக்குத், வேறு, அந்த, சிலர், எழுத்தாளர்