விதூஷகன் சின்னுமுதலி
4
ஒருசமயம் இரண்டுமாத காலம் வரையில் வெளியூர்களில்
சுற்றிவிட்டு ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உடம்பு சரியாயில்லை
யென்றும் தலைவலிக்கிறதென்றும் கூறினான். உடம்பெல்லாம் பற்றி எரிகிறதென்று
சொன்னான். அவன் முகம் மினுமினுவென்று பிரகாசித்தது. கண்கள் திறுதிறுவென்று
விழித்தன. பத்மாவதி அவனுக்குச் சோறுபோட்டு வீட்டிலேயே படுத்துக் கொள்ளச்
சொன்னாள். அப்படியே படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வராமல் முனகியவண்ணம்
புரண்டு கொண்டேயிருந்தான். காலையில் வைத்தியனை அழைத்துக் காட்டவேண்டுமென்று
பத்மாவதி எண்ணினாள். அவளும் குழந்தைகளும் பகலெல்லாம் வேலை செய்தவர்களாதலால்
விரைவில் தூங்கிப் போனார்கள்.
பத்மாவதி ஏதோ சத்தம் கேட்டு விழித்தெழுந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை நடுநடுங்கச் செய்தது. அர்த்தராத்திரி; மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. சின்னுமுதலி தலையில் ஒரு பழைய முறத்தைக் கவிழ்த்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருந்தான். முறம் கீழே விழாவண்ணம் அவன் உடம்பையும் கைகளையும் நெளித்துக் கொடுத்து ஆடினான். பத்மாவதி இன்னதென்று சொல்லத் தெரியாத பயங்கர மடைந்தாள். மெதுவாக எழுந்து அவனருகில் சென்றாள். சின்னுமுதலி ஆடுவதை நிறுத்தி அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். உடனே "கண்ணே பொண்ணே" என்னும் விகாரமான கூத்தாடிப் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். பத்மாவதியின் முகவாய்க்கட்டையைப் பிடித்தான்; பல்லை இளித்தான்.
பத்மாவதி தன்னையறியாமல் பயங்கரமான கூச்சல் ஒன்று போட்டாள். இதனால் குழந்தைகள் விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் சின்னுமுதலி பக்கத்திலிருந்த கூடை ஒன்றைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆடினான். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அயல் வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். எல்லாரும் சேர்ந்து சின்னுமுதலியைப் பிடித்துச் சமாதான வார்த்தைகள் சொல்லிப் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் காலையில் கொங்கணப்பட்டியிலிருந்து சமாசாரம் கிடைத்தது. அவ்வூரில் கூத்து நடந்து கொண்டிருந்தபோது, சின்னுமுதலியின் ஆர்ப்பாட்டம் வழக்கத்தைவிட அதிகமா யிருந்ததென்றும், அவன் திடீரென்று ஒரு கூச்சல் போட்டு, ஸ்திரீ வேஷம் தரித்திருந்தவனின் மூக்கைக் கடித்துவிட்டு, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து ஓடினானென்றும், சிலர் இதுவும் ஒரு விகடம் என்று நினைத்துச் சிரித்தார்களென்றும், மற்றும் சிலர் "இன்று போதை அதிகம்" என்று பேசிக் கொண்டார்களென்றும், அப்படி ஓடியவன் திரும்பி வரவேயில்லையென்றும் கொங்கணப்பட்டியிலிருந்து வந்தவன் சொன்னான்.
சின்னுமுதலியின் விதூஷக நடிப்பை இன்னும் நீங்கள் பார்க்கலாம். சந்திரப்பட்டிக்கு நீங்கள் சென்றால், அவன் தன் பிதிரார்ஜித வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்தவண்ணமிருப்பதைக் காண்பீர்கள். கவிதைகளும், கீர்த்தனங்களும், அகட விகடங்களும், சிருங்காரப் பேச்சுகளும் அவன் சரமாரியாய்ப் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்பீர்கள். ஆனால், கொங்கணப்பட்டி கூத்தில் செய்தபடி நடுவில் விழுந்தடித்து ஓடாவண்ணம், அவன் கால் ஒன்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும். உங்களைக் கண்டதும் அவன் ஒண்ணரை டிராம் வாங்கி வரும்படி கெஞ்சிக் கேட்பான். "ஆகட்டும்" என்று சொன்னால் சந்தோஷமாய்ப் பேசிச் சிரிக்கப் பண்ணுவான். "மாட்டேன்" என்றீர்களோ திட்டுவான். அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குங்கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பத்மாவதி அவனைக் காணும்போதெல்லாம் துக்கந்தாங்காமல் கண்ணீர் விடுகிறாள்; குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விதூஷகன் சின்னுமுதலி - Vidhushagan Chinnumudhali - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், பத்மாவதி, சின்னுமுதலி