வீணை பவானி
2
ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளை எப்போதும்
ஒரு கேள்வியுடனே தான் கதையை ஆரம்பிப்பது வழக்கம். அவ்விதமே இப்போதும்,
தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "பூந்தோட்டம் பவானி என்று
கேள்விப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதா?" என்றார்.
அந்த மாதிரி ஒரு பெயர் ஏதோ பூர்வ ஜன்மத்தில் கேள்விப்பட்டது மாதிரி எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. கிராமபோன் பிளேட் கூட ஒன்றிரண்டு கேட்டிருக்கும் நினைவு வந்தது. ஆனால் நான் ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் சொல்லும் வரையில் கந்தப்பப் பிள்ளை காத்திருக்கவில்லை. மேலும் சொல்லத் தொடங்கினார்.
*****
"முப்பது வருஷத்துக்கு முன்னால் 'பூந்தோட்டம் பவானி' என்னும் பெயர் மிகவும் பிரசித்தமாயிருந்தது. 'வீணை பவானி' என்றும் சொல்வதுண்டு. வீணையை வைத்துக் கொண்டு பாடினாளானால், ஸரஸ்வதி தேவியே அவதாரம் எடுத்து வந்திருப்பது போல் தான் தோன்றும். அவளுடைய குரலுக்கு உபமானம் சொல்ல வேண்டுமானால், வீணைத் தந்தியை அவள் மீட்டும் போது உண்டாகும் ரீங்கார நாதத்தைத்தான் சொல்லலாம். அந்த வீணைத் தந்தியின் ரீங்காரத்துகோ அவளுடைய குரலைத் தவிர வேறு உபமானம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியுள்ள சபைகளில் அவளுடைய கச்சேரிகள் நடப்பதுண்டு. நிசப்தமாய் இருந்து கேட்பார்கள்; பரவசப்படுவார்கள்; கோவில்களிலே முக்கியமாகத் திருவாரூர்க் கோவில் - உற்சவ சமயங்களில் அவளுடைய கச்சேரி அடிக்கடி நடக்கும். இந்தக் காலத்தில் வரவர நாதஸ்திகம் அதிகமாகி வருகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று உலகமே கெட்டுப் போய் வருகிறது. போதாதற்கு சினிமா வேறு வந்து சேர்ந்து விட்டது. உற்சவங்களைச் சிரத்தையாக நடத்துவோரும் இல்லை. அந்தக் காலத்தில் ஜனங்களுக்கெல்லாம் கோவில் திருவிழா - இம்மாதிரி காரியங்களிலே தான் கொண்டாட்டம். ஒரு கோவிலில் உற்சவம் என்றால் சுற்று வட்டாரத்தில் இருபது மைல் தூரத்திலுள்ள ஜனங்கள் எல்லாம் திரண்டு வந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். ஒவ்வொரு கச்சேரிக்கும் அபரிதமான கூட்டம் சேரும். அதிலும் பூந்தோட்டம் பவானியின் கச்சேரி என்றால் கேட்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் பெரிய கூட்டத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் 'பூந்தோட்டம் பவானியின் கச்சேரிக்குக் கூடுகிறார் போல் கூடியிருக்கிறதே!' என்பார்கள். அப்படி ஜனக் கூட்டம் கூடியிருக்கும் இடத்தில் கசகசவென்று எவ்வளவு சந்தடியிருக்கும்? ஆனால் பவானியின் விரல்கள் வீணையின் தந்திகளைத் தொட வேண்டியதுதான்; முகத்தைச் சிறிது நிமிர்த்திக் கொண்டு அவளுடைய இனிய குரலைக் காட்டிச் சுருதி கூட்ட வேண்டியது தான்; அவ்வளவு இரைச்சலும் ஒரு நொடியில் 'கப்' என்று அடங்கிவிடும்! இரைச்சல் ஓடுவதும், பவானியின் இனிய குரல் ஒலியும் வீணைத் தந்தியின் நாதமும் சேர்ந்து கிளம்புவதும், ஒரு இந்திரஜாலம் போல் தோன்றும்.
பவானியின் கச்சேரி கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், நான் அதை விடுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி கிடைப்பதும் உண்டு. கல்யாணங்களிலோ, கோவில் உற்சவங்களிலோ, பவானியின் கச்சேரிகள் நடக்குமிடங்களில், நானும் என்னுடைய தொழிலுக்காகப் போய்ச் சேரும்படி அடிக்கடி நேரும். பவானியின் கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி கண்ணில் ஜலம் வந்து விடும். பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து பரிகசிக்கப் போகிறார்களே என்று ஏதோ தலை வலிக்கிற பாவனையாகத் தரையை நோக்கிக் குனிந்து கொள்வேன். கண்ணீருக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அது தான் எனக்குத் தெரியாது. ஆனந்தக் கண்ணீர் தானா அல்லது இவ்வளவு அற்புதமான சங்கீதம் நீடித்து நிற்க வேண்டுமே என்ற அநுதாபத்தில் பெருகிய கண்ணீரா? ஜனங்கள் பேசிக் கொண்டு போவார்கள். "இது எங்கேடா நிலைத்து நிற்கப் போகிறது? இப்படிப் பாடினால் உலகம் தாங்குமா!" என்று கவலைப்படுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு நான் பவானியைப் போய்ப் பார்ப்பேன். "தங்கச்சி! அம்மாவை திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லு!" என்பேன். பவானியின் தாயாரும் பெண்ணை எத்தனையோ கண்ணும் கருத்துமாய்த்தான் காப்பாற்றி வந்தாள். ஆனாலும், கடைசியில் திருஷ்டி பட்டே விட்டது.
பவானியின் தாயாருக்குப் பூந்தோட்டம் பிரஹதாம்பாள் என்று பெயர். அவள் பரம்பரையான பணக்காரி. அதோடு அவளுடைய குணத்திலும் பிரசித்தி பெற்றவள். ஒரு பெரிய மனிதரோடு மட்டும் சிநேகம் வைத்துக் கொண்டுடிருந்து, அவருக்கு உண்மையான தர்மபத்தினியாக நடந்து கொண்டிருந்தாள். அவன் காலஞ்சென்ற பிறகு அவள் பகவானுடைய பக்தியில் சிந்தையைச் செலுத்தி வந்தாள்.
தாயாருடைய சுபாவம் பெண்ணிடமும் இருந்தது. நெற்றியில் திவ்வியமாக விபூதியைப் பூசிக் கொண்டு தான் கச்சேரிக்கு வந்து உட்காருவாள். பக்திரஸமுள்ள பாட்டுக்களைத்தான் பாடுவாள். வீட்டிலே தினம் ஸ்நானம், பூஜை எல்லாம் பிரமாதமாக நடக்கும். இதனாலெல்லாம் பவானிக்கு ஞானப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலர் பேசினார்கள்.
பிரஹதாம்பாளுக்குத் தன் பெண்ணை ஒரு யோக்கிமான நல்ல பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று விருப்பம். ஆனால் பவானியோ தான் ஆண்டாளைப் போல் கன்னியாகவே இருந்து கடவுளின் பாதத்தை அடையப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இவர்கள் இரண்டு பேருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. எல்லாம் ஒரு மனுஷன் பராபரியாய் யாரிடமோ சொல்லிக் கொண்டு போன ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போய்விட்டது.
ஒரு தடவை திருவாரூர்க் கோவிலில் கச்சேரி செய்து விட்டுப் பவானி வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொள்ளப் போகும் சமயத்தில், ஒரு மனுஷன் தன் சிநேகிதனுடன் பேசிக்கொண்டு போன ஒரு வார்த்தை அவள் காதில் தற்செயலாக விழுந்தது. "பாட்டு, பாட்டு என்கிறாயே, பிரமாதமாய் பாட்டு இருக்கட்டும், அப்பா! அவள் முகத்திலே சொட்டுகிற களையைச் சொல்லு!" என்றான், அந்த மனிதன. இதைக் கேட்டதும் பவானிக்குச் சிரிப்பு வந்தது. கலீரென்று சிரித்துவிட்டாள். யார் சிரிக்கிறதென்று அந்த மனுஷன் திரும்பிப் பார்க்கவே பக்கத்தில் பவானி நிற்பதைக் கண்டு வெட்கிப் போனான். பவானியும் சட்டென்று வண்டியில் ஏறிக் கொண்டாள்.
விதி என்று சொல்லுகிறார்களே! இது தான் விதி! அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலே, இருட்டிலே அந்த மனுஷன் அந்த வார்த்தையைப் பவானி வண்டி ஏறுகிற இடத்திலே வந்து சொல்வானேன்? அது இவள் காதில் விழுவானேன்? பவானி வீட்டுக்குப் போனதும், அவள் தாயாரிடம் "அம்மா! நீ ஏன் இன்றைக்கு நான் கச்சேரிக்குப் போன போது கைக்குட்டை வைக்கவில்லை?" என்று கேட்டாளாம். அவள் தாயார் "இதென்ன கேள்வி?" என்று சும்மாயிருக்கவே, "மண்டபத்திலே இறுக்கம் அசாத்தியம், ஓயாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது" என்றாளாம். அதோடு விடவில்லை. "கேட்டுக்கோ, அம்மா! என் முகத்திலே வியர்வை கொட்டிக் கொண்டே இருந்ததா? அதைப் பார்த்து விட்டு ஒரு மனுஷர், 'களை சொட்டுகிறது' என்று சொல்லிக் கொண்டு போனார் அம்மா" என்று கூறி இடி இடி என்று சிரித்தாளாம். இதையெல்லாம் பவானியும், அவள் தாயாரும் எனக்கு அடிக்கடிச் சொல்வார்கள். இப்படி வேடிக்கையும் சிரிப்புமாக ஆரம்பித்த காரியம்தான் பிற்பாடு பெரிய வினையாக முடிந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணை பவானி - Veenai Bavani - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானியின், தான், அவள், பவானி, கொண்டு, கச்சேரி, வந்து, அவளுடைய, அந்த, பூந்தோட்டம், நான், அடிக்கடி, எனக்கு, மனுஷன், போல், எல்லாம், காலத்தில், அம்மா, சொல்லிக், பெரிய, பாட்டு, போது, சொல்ல, வந்தது, பெயர், வீணைத், ஜனங்கள், கோவில், கச்சேரிகள், நடக்கும்