வைர மோதிரம் [காணாமற் போகாதது]
3
போலீஸ் டிபுடி கமிஷனர் மிஸ்டர் கபாலி
அவர்களுக்குச் சமீபத்தில் 'ராவ் சாகிப்' பட்டம் அளிக்கப் பெற்றதை முன்னிட்டு
நம் மாஜி திவான் அந்தச் சிற்றுண்டி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
ரொம்பவும் பொறுக்கி எடுத்த அத்தியந்த சிநேகிதர்கள் மட்டுந்தான் அந்த
விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களின் அண்ணனும் தங்கையுமாகிய ஓர் இளைஞனும் யுவதியும் இருந்தனர். அவர்கள் முக்கிய விருந்தினராகிய ராவ்சாகிப் கபாலியின் மருமகனும் மருமகளும். அவர்கள் பெயர்: பாலகோபால், வத்ஸலை. அவர்களுக்கு ராஜாராமனை மாஜி திவான் அறிமுகம் செய்து வைத்தார்.
"உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறதே? ஸெயிண்ட் ஜான் காலேஜில் படித்தீர்களா?" என்று பாலகோபால் கேட்டான்.
"ஆமாம்; கொஞ்ச நாள் தான் படித்தேன். நீங்களும் உங்கள் சகோதரியும் தினம் காரில் வருவீர்கள். உங்களை மட்டும், இறக்கிவிட்டு வண்டி உங்கள் சகோதரியுடன் போய் விடும் இல்லையா?"
அதற்குள் வத்ஸலை, "நீங்கள் காலேஜ் மாடி வராண்டாவில் மூன்றாவது தூணில் சாய்ந்து கொண்டு நிற்பீர்கள், இல்லையா?" என்றான்.
ராஜாராமனுக்கு ரோமம் சிலிர்த்தது. இவள் தன்னைக் கவனித்திருப்பது மட்டுமல்ல; நன்றாய் ஞாபகம் வைத்துக் கொண்டும் இருக்கிறாள்! பழைய நினைவுகள் எல்லாம் அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டு வந்தன.
சென்ற வருஷத்துக்கு முந்திய வருஷம் கலாசாலை திறந்து சில நாளைக்கெல்லாம் ஒரு நாள் சற்று முன்னதாகவே ராஜாராமன் கலாசாலைக்குச் சென்றுவிட்டான். எனவே, மணி அடிக்கும் வரையில் மாடித் தாழ்வாரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் வண்டி வந்து கலாசாலை வாசலில் நின்றது. அதில் ஒரு யுவனும் யுவதியும் இருந்தார்கள். முக ஒற்றுமையிலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெரிந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கினான்; வண்டி அந்த யுவதியுடன் போய்விட்டது. அவள் பெண்கள் கலாசாலைக்குப் போகிறாள் போலும்!
வண்டி போன பிறகும், அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் ராஜாராமனின் எதிரில் தோன்றிக் கொண்டிருந்தன. அம்மா! அந்தக் கண்கள் தான் எவ்வளவு விசாலமானவை! 'கடலினும் பெரிய கண்கள்' என்று கவி வர்ணித்திருப்பது இப்படிப்பட்ட கண்களைப் பற்றித் தான் இருக்க வேண்டும்!
அடுத்த நாளும் ராஜாராமன் சற்று முன்னதாகவே கலாசாலைக்குச் சென்றான். அதே இடத்தில் நின்றான். வண்டியும் அதே நேரத்துக்கு வந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கியதும் என்னவோ சொன்னான். ஏதோ வேடிக்கையாக அவன் சொல்லியிருக்க வேண்டும். அதைக் கேட்டு, அந்தப் பெண் புன்னகை புரிந்தாள்; பளீரென்று ஒரு மின்னல் மின்னுவது போல் இருந்தது.
பரந்த விழிகளுடன் கூடிய அந்தப் புன்னகை பூத்த முகம் ராஜாராமனுடைய உள்ளத்தில் பதிந்தது. "இவள் ஒரு 'ஸினிமா ஸ்டார்' ஆக வேண்டும்; அப்படி ஆனால் மேனாட்டின் பிரசித்த நடிகைகளையெல்லாம் தோற்கடித்து உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுவாள்" என்று அவன் முதலில் நினைத்தான். 'சீ? இவ்வளவு சௌந்தரியமும் அப்படியா வீணாய்ப் போக வேண்டும்? இவள் மட்டும் தேச சேவையில் ஈடுபட்டால், எவ்வளவு நல்ல வேலை செய்யலாம்? இவளுடைய தலைமையின் கீழ் யார் என்ன தியாகந்தான் செய்யப் பின் வாங்குவார்கள்?' என்று கருதினான். பிறகு, 'இதெல்லாம் நம் தேசத்தில் நினைத்து என்ன பிரயோஜனம்? எந்த அசடு இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறதோ? அல்லது ஒரு வேளை முன்னமே ஆகிவிட்டதோ என்னவோ? கலியாணம் ஆகிவிட்டால் பிறகு எல்லாரையும் போல் ஜனத்தொகையை அபிவிருத்தி செய்து கொண்டு, வாழ்க்கையைத் தள்ளவேண்டியதுதானே?' என்றெல்லாம் எண்ணமிட்டான்.
ராஜாராமன் மறுநாளும் அதே நேரத்தில் அதே இடத்தில் நின்றான். அன்று வண்டி அங்கே நின்றுவிட்டுக் கிளம்பிச் சென்றபோது, அந்தப் பெரிய கண்கள் ஒரு தடவை சுழன்று அவன் மேல் ஒரு வீச்சு வீசி, அவனைத் திகைக்கச் செய்து விட்டு, மறுவினாடி மறைந்தன.
பிறகு, இதே மாதிரி அநேக நாட்கள் நடந்தது. அந்தக் கண்கள் என்னதான் சொல்கின்றன? அந்தப் பார்வையின் அர்த்தந்தான் என்ன? பரிகாசமா? கோபமா? மமதையா? அல்லது...
மூன்று மாத காலம் ராஜராமன் ஒரு சொப்பன உலகத்தில் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அடுத்த வருஷம் அவன் மறுபடி அதே கலாசாலையில் வந்து சேர்ந்தபோது, அந்தப் பச்சை வர்ண மோட்டார் வண்டி இந்த வருஷம் அங்கு வருவதில்லையென்று தெரிந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைர மோதிரம் [காணாமற் போகாதது] - Vaira Mothiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வண்டி, அந்தப், அவன், கண்கள், செய்து, வேண்டும், பிறகு, என்ன, ராஜாராமன், இவள், நாள், போல், தான், மட்டும், கொண்டு, வருஷம்