தூக்குத் தண்டனை
1
அமாவாசை இரவு. திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ
த்தரமய்யங்கார் சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார்.
என்ன புரண்டாலும் தூக்கம் வருகிற வழியாயில்லை. தலைப் பக்கத்துத் தலைகாணியைக்
கால் புறத்திலும், கால் புறத்துத் தலைகாணியைத் தலைப்புறத்திலும் வைத்துக்
கொண்டு பார்த்தார். அப்படியும் தூக்கம் வரவில்லை
கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கிற்று. "ஒன்று, இரண்டு, மூன்று..." என்று எண்ணிக் கொண்டே வந்தார். பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்தது. "இனிமேல் கட்டாயம் தூங்க வேண்டியதுதான்" என்று ஜட்ஜ் அய்யங்கார் திடசங்கல்பம் செய்து கொண்டு கண்களை இறுக மூடினார். அப்போது அவருடைய மனக் கண்ணின் முன்பாக ஒரு பயங்கரக் கோரக் காட்சி தென்பட்டது.
முதலில் எங்கேயோ வெகு தூரத்தில் உள்ளது போல் அந்தக் காட்சி மங்கலாய்த் தெரிந்தது. தூக்கு மேடையில் தூக்கு மரத்தில் ஒரு உருவம் தொங்கி இலேசாகக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் காட்சி, தூக்கு மரம், அதில் தொங்கிய உருவம் எல்லாம் வெகு சமீபத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. பால் வடியும் அழகிய வாலிபனுடைய முகம். ஆனால், முகத்தில் உயிர்க்களை இல்லை. கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. உயிரில்லாத அந்தக் கண்கள் திவான் பகதூரின் இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பது போல் அவருக்கு உணர்ச்சி உண்டாயிற்று
சட்டென்று அய்யங்கார் எழுந்து உட்கார்ந்தார். படுக்கையிலிருந்து கீழே குதித்தார். ஜன்னல் ஓரமாகச் சென்று ஜன்னல் கதவைத் திறந்தார். குளிர்ந்த காற்று உள்ளே 'விர்'ரென்று வந்தது. கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. அய்யங்கார் ஜன்னல் ஓரமாக நின்று வெளியே தோட்டத்தில் பார்வையைச் செலுத்தினார்.
ஆஹா! அது என்ன! அதோ அந்த மரத்தின் கிளையில் ஏதோ தொங்குகிறாப் போல் இருக்கிறதே? ஐயோ?...படீரென்று ஜன்னல் கதவைச் சார்த்தினார் அய்யங்கார். இருட்டில் தடவிக் கொண்டே சென்று, 'ஸ்விட்ச்' இருக்குமிடம் கண்டுபிடித்து, மின்சார விளக்கை ஏற்றினார். அலமாரியைத் திறந்து கையிலகப்பட்ட புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார். புத்தகத்தைப் பிரித்தார். ஆகா! புத்தகத்திற்குள் ஏதாவது தேள் ஒளிந்திருந்து அவர் கையில் கொட்டி விட்டதா என்ன? புத்தகத்தை அப்படித் திடீரென்று போட்டு விட்டுக் குதிக்கிறாரே?
தேளுமில்லை கீளுமில்லை; அந்தப் புத்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாயிருந்தது தான் காரணம். திவ்யப் பிரபந்தத்தைப் பார்த்ததும் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்ரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் மதகுப்பட்டி கலக வழக்கில் கூறிய சாட்சியம் அய்யங்காருக்கு ஞாபகம் வந்தது. அவர் என்ன சாட்சி சொன்னார்? "மதகுப்பட்டிக் கலகம் நடந்த அன்றைக்கு முதல் நாள் இரவு நானும் திருமலையும் திருச்சி ஜங்ஷன் வெயிட்டிங் ரூமில் திவ்யப் பிரபந்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்!" என்றார். "பெரியாழ்வார் பாத சாட்சியாகவும் திருமங்கையாழ்வார் திருவடி சாட்சியாகவும் சத்தியமாய்ச் சொல்கிறேன்" என்று ஆணையிட்டார். சடகோபாச்சாரிய ஸ்வாமியை அஷ்டோ த்தரமய்யங்காருக்கு வெகு காலமாகத் தெரியும். பரம பக்தர்; சிறந்த அறிவாளி; உயர்ந்த ஒழுக்கமுள்ளவர். எத்தனையோ தடவை அவரிடம் அஷ்டோ த்தரமய்யங்கார் திவ்யப் பிரபந்த பாசுரங்களைக் கேட்டு மனமுருகிக் கண்ணீர் வடித்திருக்கிறார். அப்பேர்ப்பட்டவருடைய சாட்சியைப் பொய்ச்சாட்சி என்று தள்ளிவிட்டு, போலீஸ் சாட்சியத்தையே உண்மையென்று ஏற்றுக் கொண்டு திருமலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டியதாயிற்று! சடகோபாச்சாரியின் சாட்சியம் உண்மையாக இருக்குமோ? திருமலை நிரபராதிதானோ? குற்றமற்ற பையனையா நாளைப் பொழுது விடிந்ததும் தூக்கில் போடப் போகிறார்கள்? அந்தப் பாதகம் தம்முடைய தலையிலா விடியப் போகிறது? ஐயோ! இந்த ஜட்ஜ் உத்தியோகத்தை என்னத்திற்காக ஏற்றுக் கொண்டோ ம்? வக்கீலாகவே இருந்து காலத்தை ஓட்டி இருக்கக் கூடாதா?... இப்படி அய்யங்காரின் மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலைந்தது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூக்குத் தண்டனை - Thookku Thandanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஜன்னல், திவ்யப், அய்யங்கார், என்ன, கொண்டு, தூக்கு, அந்தக், வெகு, காட்சி, ஜட்ஜ், போல்