தியாக பூமி - 3.9. அநாதைக் கடிதம்
இந்த இரண்டு வருஷ காலத்தில் சாவித்திரியின் விஷயமாக ஸ்ரீதரனுடைய மனோபாவம் இரண்டு மூன்று தடவை மாறுதல் அடைந்துவிட்டது.
ஆரம்பத்தில் கொஞ்ச நாள், தன்னைக் கேட்காமல் தங்கம்மாள் அவளை அழைத்துக் கொண்டு வந்த காரணத்தினால் அவனுக்கு வெறுப்பும் கோபமுமாயிருந்தது. போகப் போக, "சரிதான்; இந்தப் பிராரப்தத்தைக் கட்டிக் கொண்டுதான் மாரடித்தாக வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நமக்கென்ன கஷ்டம் வந்தது? அவள் பாட்டுக்கு வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாயிருந்து விட்டுப் போகிறாள்" என்று ஒரு மாதிரி முடிவுக்கு வந்திருந்தான்.
சில நாளைக்கெல்லாம் சாவித்திரியிடம் அவனுக்கு கொஞ்சம் சிரத்தை உண்டாகத் தொடங்கிற்று. சிரத்தை உண்டானதும், அவளைத் தன் தாயார் படுத்துகிற கஷ்டத்தைப் பார்த்து இரக்கமும் ஏற்பட்டது. ஸ்ரீதரனுடைய இரக்கம் சாவித்திரிக்கு ஆபத்தாய் முடிந்தது.
ஒரு தடவை சாவித்திரி கஷ்டமான காரியம் செய்வதைப் பார்த்து, ஸ்ரீதரன் அம்மாவிடம், "ஏனம்மா இந்த வேலையெல்லாம் அவளைச் செய்யச் சொல்கிறாய்?" என்றான். தங்கம்மாளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமாண்டாப்பா, உன் ஆம்படையாள் காரியம் செய்யலாமோ? தேஞ்சுன்னா போயிடுவள்? நீ வேணா பூட்டி வைச்சுட்டுப்போ! இல்லாட்டா, பின்னோட அழைச்சுண்டு போயிடு" என்று கத்தினாள். அவன் வெளியே போன பிறகு, சாவித்திரியிடம், "ஏண்டி பொண்ணே! ஆம்படையானிடம் கோழி சொல்ல ஆரம்பிச்சுட்டயோல்லியோ? நீ காரியம் செய்யலாமோடி? மிராசுதார் பொண்ணாச்சே! போய் மெத்தையை விரிச்சுப் போட்டுண்டு படுத்துக்கோ! நான் தான் ஒத்தி இருக்கேனே இந்த வீட்டிலே காரியம் செய்யறதற்கு!..." என்று சரமாரியாய்ப் பொழியத் தொடங்கினாள்.
இம்மாதிரி சாவித்திரிக்கு ஸ்ரீதரன் பரிந்து பேசிய ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அதனால் கஷ்டமே நேர்ந்தது. ஒரு நாள் சாவித்திரி மாவு இடித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீதரன் பார்த்துவிட்டான். "உன்னை யார் மாவு இடிக்கச் சொன்னது? வீட்டிலே வேலைக்காரியில்லையா?" என்று ஸ்ரீதரன் கோபமாய்க் கேட்டான். சாவித்திரி, அவனுடைய கோபத்தைத் தணிக்கும் நோக்கத்துடன், "அம்மாதான் இடிக்கச் சொன்னார்" என்று சொல்லி விட்டாள். ஸ்ரீதரன் அம்மாவிடம் போய், "இதென்ன அம்மா நான்ஸென்ஸ்? இவளை என்னத்துக்காக மாவு இடிக்கச் சொன்னாய்?" என்று கேட்டான். "அப்படிச் சொல்லு தகடிகை!" என்றாள் தங்கம்மாள். "நான் என்னடா அப்பா சொன்னேன்! கொஞ்ச நாள் போனா, ஆம்படையானும் பொண்டாட்டியும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸாப் போயிடுவேன்னு சொன்னேனோ இல்லையோ? என் வாக்குப் பலிச்சுதா?" என்று கூச்சலிட்டாள். பிறகு, சாவித்திரியைக் கூப்பிட்டு, "ஏண்டி பொண்ணே! நானாடி உன்னை மாவு இடிக்கச் சொன்னேன்; என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்லடி!" என்று கேட்டாள். சாவித்திரி பயந்துபோய்ப் பேசாமல் இருந்தாள். பார்த்தயோல்லியோடா கள்ள முழி முழிக்கிறதை!" என்றாள் தங்கம்மாள். ஸ்ரீதரனுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. "ஏண்டி! பொய்யா சொன்னே?" என்று சாவித்திரியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டுப் போய்விட்டான்.
சாவித்திரி அழுதுகொண்டே மாவு இடிக்கத் தொடங்கினாள். தங்கம்மாள், "என் பிள்ளைக்கும் எனக்கும் ஆகாமலடிக்க வந்துட்டயாடி அம்மா, மகராஜி! என்ன சொக்குப் பொடி போட்டிருக்கயோ, என்ன மருந்து இட்டிருக்கயோ, நான் என்னத்தைக் கண்டேன்!" என்று புலம்பத் தொடங்கினாள்.
இந்த நாளில் சாவித்திரி சரியான வழியில் முயற்சி செய்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதரனுடைய அன்பைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தச் சரியான வழி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாமியாரைத் திருப்தி செய்வது தான் கணவனைத் திருப்தி செய்யும் வழி என்று அவள் நினைத்தாள். அவன் பகலில் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவள் அடுப்பங்கரையில் ஏதாவது காரியம் செய்து கொண்டிருப்பாள். இரவில் அவன் வரும் போது அவள் ஒன்று, பகலெல்லாம் உழைத்த அலுப்பினால் படுத்துத் தூங்கிப் போய் விடுவாள்; அல்லது மாமியார் சொன்னது எதையாவது நினைத்து அழுது கொண்டிருப்பாள். "சனியன்! சனியன்! எப்ப பார்த்தாலும் ஒரே அழுகைதானா? மூதேவி! பீடை!" என்று ஸ்ரீதரன் எரிந்து விழுவான். இதனால் அவளுடைய அழுகை அதிகமாகும். ஸ்ரீதரனுடைய வெறுப்பும் வளரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.9. அநாதைக் கடிதம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாவித்திரி, ஸ்ரீதரன், காரியம், இடிக்கச், ஸ்ரீதரனுடைய, தங்கம்மாள், தொடங்கினாள், சொன்னது, கேட்டான், சொன்னேன், சனியன், கொண்டிருப்பாள், திருப்தி, சரியான, என்றாள், அம்மாவிடம், சிரத்தை, சாவித்திரியிடம், வெறுப்பும், அவனுக்கு, பார்த்து, சாவித்திரிக்கு, பொண்ணே, இரண்டு, சாவித்திரியின், வீட்டிலே