சாரதையின் தந்திரம்
1
"அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு
யாரிருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆறுவேன்? இத்தனை நாளாக
எட்டிப் பாராமல் இருந்துவிட்டாயே!" என்று சொல்லி, சாரதையின் மடியில்
முகத்தை வைத்துக் கொண்டு கண்ணீருகுத்தாள் லக்ஷ்மி.
"அசடே நீ என்ன இன்னமும் பச்சைக் குழந்தையா? பதினெட்டு வயதாகிறது. ஒரு குழந்தை பெற்றெடுத்து விட்டாய். வெட்கமில்லாமல் அழுகிறாயே. சங்கதி என்ன? சொல்" என்று சொல்லி, சாரதை அருமையுடன் லக்ஷ்மியின் கண்ணீரைத் துடைத்தாள்.
இப்பெண்மணிகள் மயிலாப்பூரில் மாடவீதி ஒன்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு தெருவில் ஓர் அழகிய புது வீட்டின் மாடி மீதிருந்த ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்களில், சாரதை பத்தரைமாற்று பொன்னொத்த மேனியினாள். விசாலமான நெற்றியும், அறிவு ஊறித்ததும்பும் கண்களும் படைத்தவள். அவள் கண்களினுள்ளே இருந்த கருவிழிகளோ, அங்குமிங்கும் குறுகுறுவென்று அலைந்து கொண்டிருந்தன. தன் கடைக்கண் வீச்சாகிய ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு ஆடவரையும் பெண்டிரையும் அடக்கியாளும் திறனுடையவள் அவள் என்பது அவ்விழிகளை ஒருமுறை பார்த்த அளவினாலே விளங்கும். அப்போதலர்ந்த ரோஜா மலரின் இதழையொத்த தன் அதரங்களில் புன்னகையிருக்க, வேறு பொன் கல் நகைகள் எதற்கு என்று கருதியே போலும், அவள் அதிக ஆபரணங்கள் அணிந்துகொள்ளவில்லை. தலைப்பில் சரிகைக்கரை போட்ட நீலநிறக் கதர்ப்புடவை அவள் மேனி அழகைப் பதின்மடங்கு மிகுதிப்படுத்திக் காட்டிற்று.
இப்பொன்னொத்த வண்ணமுடையாளினின்றும் பல வகையிலும் மாறுபட்டிருந்தாள் லக்ஷ்மி. அவள் மாநிற மேனியினாள். திருத்தமாக அமைந்திருந்த அவள் திருமுக மண்டலம், இதுகாலை சோகத்தினால் வாட்டமுற்றிருந்ததாயினும், அழகும் அமைதியுமே அதன் இயற்கை அணிகள் என்பது நன்கு விளங்கிற்று. அவள் கண்ணில் அளவிடப்படாத தூய உண்மைக் காதல் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. எல்லோரையும் மகிழ்விக்கும் இனிய குணமும் அளவற்ற அன்பும் அவள் தோற்றத்திலே நிகழ்ந்தன. சோகத்திலும் மலர்ந்திருந்தன அவளது செவ்விதழ்கள். அவள் தரித்திருந்தது. விலையுயர்ந்த சிவப்பு வர்ணப் பட்டுபுடவை. பொன் வைர நகைகளும் அவள் அணிந்திருந்தாள்.
லக்ஷ்மி, முத்து முத்தாகத் துளித்துப் பெருகிய கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பினால் துடைத்து, சாரதையின் இரு கரங்களையும் தன் கரங்களால் பிடித்துக் கொண்டு சொல்வாள். "அக்கா! எனக்கு வயதாகிவிட்டது. உண்மையே. ஆனால் உன்னைக் கண்டால் நான் குழந்தையேயாகி விடுகிறேன். என்னை விட நீ ஒரு வயதுதான் மூத்தவள். ஆயினும் எனக்கு வினாத் தெரிந்தது முதல் நீ எனக்குத் தாய் போல் இருந்து வரவில்லையா? பெற்ற தாய் இறந்த துயரத்தை நான் உணராமல் செய்தது யார்? என் சித்தி கோபித்துக் கொண்டால் உடனே உன்னிடம் ஓடி வந்து ஆறுதல் பெறுவேன்..."
"இந்தக் கதையெல்லாம் இப்போதெதற்கு? இனிமேல் அம்மாதிரி நாம் குழந்தைகளாகப் போகிறோமா?" என்று சாரதை இடைமறித்துக் கூறினாள்.
"இல்லை அக்கா, கொஞ்சம் பொறு. நமது இளம் பிராய நட்பின் நினைவுகள் எனக்கு எத்தனை மகிழ்ச்சி அளிக்கின்றன? அத்தான், பள்ளிக்கூட விடுமுறைக்கு ஊர் வரும்போதெல்லாம், நாம் அளவு கடந்த மகிழ்ச்சியடைவோம். அவரும் நம்மிடம் பிரியமாயிருந்தார். நமக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். கதைகள் சொல்லிக் காலங்கழிப்பார். நம்முடன் சேர்ந்து விளையாடுவார். ஊரில் எல்லோரும் அத்தானுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். நீ மட்டும் 'இல்லவே இல்லை. அத்தானுக்கு லக்ஷ்மிதான் வாழ்க்கைப்படப் போகிறாள். அத்தானும் சாது, லக்ஷ்மியும் சாது. அவர்கள் இருவருக்கும்தான் பொருத்தம். நான் நல்ல போக்கிரி ஒருவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறேன். பின்னர், அவனையடக்கிச் சாதுவாக்கி விடுவேன்' என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு வருவாய். அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு நன்றி பாராட்டினேன்? அவ்வளவுக்கு இப்போது உன்னைச் சபிக்கிறேன்" என்று கூறுகையில், லக்ஷ்மி விம்மி விம்மி அழலானாள்.
சாரதைக்குச் சற்று விளங்க ஆரம்பித்தது. "அடியே என்ன சொல்லுகிறாய்? அத்தான் உன்னைத் துன்புறுத்துகிறானா, என்ன சொல்லு?" என்றாள். அவள் கண்களின் ஓரங்கள் சிறிது சிவந்து கோபக்குறி காட்டலாயின.
"ஐயோ, துன்பப்படுத்தினால் பாதகமில்லையே? உன்னிடம் சொல்லியிருக்கவே மாட்டேன்... ஆம், அக்காலத்தில் எல்லாம் நீ சொன்னபடியே ஆயிற்று. தெய்வம் நமக்குச் சகாயமாயிருந்தது. கடைசியாக, அத்தானுக்கு என்னையே கலியாணம் செய்து கொடுத்தார்கள். உனக்கு அகத்துக்காரர் பட்டணத்திலிருந்து வந்தார். நீ சொல்லியபடியே கிராப்பும், உடுப்பும், பூட்ஸும், மூக்குக் கண்ணாடியுமாக அவர் வந்தார். நாங்கள் 'போக்கிரி மாப்பிள்ளை' என்று சொல்லிக் காட்டினோம். 'பேசாமலிரு, இரண்டு வருஷத்தில் எல்லாம் அடக்கிப் போடுகிறேன்' என்று நீ சொல்லிக் கொண்டு வந்தாய். அந்த மாதிரியே செய்து முடித்தாய். காலரும் கழுத்து சுருக்கும் மாட்டிக் கொண்டு வந்தவர். இப்பொழுது நாலுமுழக் கதர்த் துணியுடன் நின்று வருகிறார். ஆனால், என்னுடைய சாது அத்தானோ?"
"அதைச் சொல்! என்ன செய்தான்?"
"நீ அவர் மீது கோபிப்பதில் பயனில்லை. அக்கா! எனக்குச் சாமர்த்தியமில்லை, அழகில்லை, அதிர்ஷ்டமும் இல்லை. அவ்வளவுதான். இருந்தாலும் உன்னிடம் என் குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? மேலும் எல்லாம் உன்னாலேயே வந்தது. நீ ஏன் திருவல்லிக்கேணிக்குப் போனாய்? போனதுதான் போனாய்; எங்களை ஏன் உடன் அழைத்துக் கொள்ளவில்லை? நீ போன பிறகே எனக்கு இத்துயர் வந்தது."
"ஆ, கள்ளி, இந்த ஒரு வருஷமாகவா நீ இப்படிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய்? ஏன் இத்தனை நாளாக எனக்குச் சொல்லவில்லை?"
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாரதையின் தந்திரம் - Saradhaiyin Thandhiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவள், சொல்லிக், கொண்டு, என்ன, எனக்கு, உன்னிடம், அக்கா, லக்ஷ்மி, செய்து, சாது, எல்லாம், அத்தானுக்கு, இல்லை, நான், சொல்லி, சாரதை, வேறு