ரங்கதுர்க்கம் ராஜா
3
'இனி என்ன செய்வது?' என்னும் பிரச்சனை
அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது போல் ரங்கராஜனுடைய சொந்த வாழ்க்கையில்
இப்போது அதி தீவிரமாக ஏற்பட்டது. சீமைக்கு மறுபடியும் போகும் யோசனையைக்
கைவிட வேண்டியதுதான். அது கடவுளுக்கே இஷ்டமில்லையென்று தோன்றுகிறது.
போதும் சீமைப் பயணம்.
'பம்பாயில் தங்கி ஏதேனும் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து விட்டால்?' என்று எண்ணிய போது, தானே வயிறு குலுங்கச் சிரித்தான். நாடோ டி வாழ்க்கையை வெறுத்துப் புதிய அநுபவங்களைத் தேடி அவன் புறப்பட்டதற்கு அது தக்க முடிவாயிருக்குமல்லவா?
இவ்வாறு பல யோசனைகள் செய்து கொண்டேயிருந்த போது திடீரென்று அவனுடைய ஜீவிய இலட்சியம் என்னவென்பது மனத்தில் உதயமாயிற்று. அவனுடைய கை விரல்கள் துடித்தன. "கொண்டா பேனாவும் காகிதமும்" என்று அவை கதறின. நூலாசிரியத் தொழிலுக்கு வேண்டிய அஸ்திவாரம் ஏற்கனவே அவனிடம் அமைந்திருந்தது. தூண்டுகோல் ஒன்று தான் பாக்கி; அதுவும் இப்போது ஏற்பட்டு விட்டது.
ஊருக்குப் போக வேண்டியதுதான்; நாவல்களும் நாடகங்களுமாக எழுதிக் குவித்துத் தமிழ் மொழியை ஆகாயத்தில் உயர்த்தியே விடுவது என்று தீர்மானித்தான்.
'பிரிட்டானியா' கப்பலில் விட்டிருந்த பணம் வந்து சேரும் வரையில் பம்பாயில் இருந்ததாக வேண்டும். அந்த நாட்களில் அவன் அந்த நகரை முழுதும் சுற்றிப் பார்த்து விட விரும்பினான். பம்பாயில் முக்கியமாக 'விக்டோ ரியா டெர்மினஸ்' ஸ்டேஷன் அவனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்ததாகத் தோன்றியது. தினந்தோறும் சாயங்காலம் 'மெட்ராஸ் மெயில்' புறப்படும் சமயத்துக்கு ரங்கராஜன் பிளாட்பாரத்தில் உலாவி வருவதைக் காணலாம். அப்படிச் செய்ததில் அந்தரங்க நோக்கம் ஒன்றும் அவனுக்கு லவலேசமும் கிடையாது. (அவ்வாறு அவன் நம்பினான்). முன்னைப் போல் ஜனங்களைக் கண்டு வெறுப்படைவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்ப்பதிலும் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனிப்பதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த புதிய உற்சாகமே அதன் காரணம். (இதுவும் அவனுடைய அபிப்பிராயமே.) ஆகையினால், ஒரு நாள் மாலை அவன் அவ்வாறு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பிரேமலதா தீடீரென்று எதிர்ப்பட்டு, புன்னகையுடன், "ஓ! உங்களை நான் எதிர்பார்த்தேன்," என்று சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது.
"அப்படியா? ஆனால், தங்களை நான் எதிர்பார்க்கவில்லை" என்றான்.
"பொய்! பொய்! நீங்கள் சொல்வது பொய்," என்றாள் பிரேமா.
"ரொம்ப சந்தோஷம். ரங்கதுர்க்கம் ராஜா அப்புறம் கோபித்துக் கொள்ளப் போகிறார். நான் போய்..."
இந்தச் சமயம் பிரேமாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ததும்பி நிற்பதை ரங்கராஜன் பார்த்தான். உடனே, "... போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று முடித்தான்.
"நானும் கூட வருவதில் ஆட்சேபம் இல்லையே!"
"எனக்கு ஆட்சேபம் இல்லை; ஆனால், ஒரு வேளை ராஜா சாகிப்பிற்கு"
"ரங்கதுர்க்கம் ராஜாவின் பாக்கியமே பாக்கியம்! உங்களைப் போன்ற ஒருவர் தம் பேரில் இவ்வளவு அசூயை கொள்வதற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?
ரங்கராஜன் பிரேமலதாவைத் திரும்பி பார்த்தான். "அப்படியானால், நீ என்னை ரங்கதுர்க்கம் ராஜாவென்று எண்ணவில்லையா?" என்றான்.
"என்னைப்பற்றி இவ்வளவு தாழ்வாக நீங்கள் நினைத்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபஸ்மாரக் காதல் கடிதத்தை எழுதக் கூடியவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தீர்கள்?"
ரங்கராஜன் மிக்க ஆச்சரியத்துடன் பிரேமலதாவின் முகத்தை நோக்கினான். "அப்படியானால், அந்தத் தந்தியைப் படித்ததும் நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லாரும் சென்று விட்டீர்களே, அது ஏன்?" என்றான்.
"கடவுளே! அதுதானா கோபம்? கொஞ்சம் உங்களை வேடிக்கை செய்யலாமென்று நினைத்தோம். கப்பல் கரையோரமாய் போய் நிற்பதற்குள், நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் படகிலிறங்கிப் போய் விடுவீர்களென்று கண்டோமா?"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கதுர்க்கம் ராஜா - Rangathurkam Raja - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரங்கராஜன், அவன், அவனுடைய, போய், நீங்கள், ரங்கதுர்க்கம், பொய், நான், பம்பாயில், போல், என்றான்