போலீஸ் விருந்து
நெல்லிப்பாக்கத்தில் பெரும்பாலும் மத்திய
வகுப்பினரே குடியிருந்தார்கள். சின்னச் சின்னத் தோட்டங்களுக்கு மத்தியில்
சின்னச் சின்ன பங்களாக்கள். அவற்றில் வசித்தவர்கள் அறுபது எழுபது ரூபாய்
முதல் முந்நூறு நானூறு ரூபாய் வரையில் மாதச் சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்கள்,
குமாஸ்தாக்கள் ஆகியோர். இடையிடையே மாஜி உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள்
முதலியோரும் உண்டு.
காலை எட்டு மணிக்கு ஸ்ரீமான் கே. ராமகிருஷ்ணய்யர், காமரா உள்ளில் கையில் பத்திரிகையுடன் உட்கார்ந்திருந்தார். வாசல் ஜன்னல் ஓரமாய் ஒரு மனிதன் வந்து நின்று, "ஸார்!" என்று கூப்பிடவே, "யாரடா அது?" என்று அதட்டிய குரலில் எரிச்சலாகக் கேட்டார். "போலீஸ், ஸார்" என்று பதில் வரவும், கொஞ்சம் அடங்கி, "என்ன?" என்றார்.
"ரோந்து டியூட்டி, ஸார்!"
"சரி அதற்கென்ன?"
"எல்லாரும் சேர்ந்து பொங்கல் வைக்கிறோம், ஸார்!"
"சரிதான், அதற்கென்ன செய்யவேணும்?"
"ஏதோ உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம், ஸார்!"
ராமகிருஷ்ணய்யர் ஒரு நிமிஷம் யோசித்தார். முதலில் "போலீஸ்" என்றதும், அவர் நெஞ்சில் ஏற்பட்ட துணுக்கம் இப்போது நிவர்த்தியாகி, அவன் யாசகத்துக்கு வந்திருக்கிறானென்னும் விஷயம் கொஞ்சம் சந்தோஷம் அளித்தது. "ஆமாம்; ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. போலீஸ்காரர்களுடைய ஒத்தாசை எவ்வளவு அவசியமானது?" என்று எண்ணினார். என்ன கொடுக்கலாமென்று சற்றுச் சிந்தித்துவிட்டு, பணப்பையைத் திறந்து நாலு அணா எடுத்தார். "நாங்கள் ஆறு பேர் ரோந்து சுத்தறோம், ஸார்!" என்றான். இன்னும் இரண்டணா சேர்த்துக் கொடுத்து அனுப்பினார்.
அன்று பத்தரை மணிக்குள்ளாக, கந்தசாமி ரூ.24 சொச்சம் சம்பாதித்து விட்டான். வெயில் ஆகிவிட்டது. இன்றைக்கு நிறுத்த வேண்டியது தான். ஆனாலும், முழுசாகக் கால் நூறு ஆக்கிவிட்டு நிறுத்தலாம் என்று எண்ணினான். இன்றைக்கு விழித்த முகத்தில் இன்னும் பத்து நாள் விழித்தால் போதும்; அப்புறம் கௌரவமாய் ஒரு சோடாக் கடை வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்யலாம்; ஏன், கலியாணம் கூடப் பண்ணிக்கலாம்!
"மிஸ்டர் கே.சேனாபதி, ஜி.டி.ஏ." என்ற போர்டு தொங்கிய வீட்டிற்குள் நுழைந்தான். முன் ஹாலில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் சேனாபதி அல்ல. அவருடைய தமையன் தீர்த்தபதி என்று கந்தசாமிக்குத் தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம் தான்.
"யார்? என்ன வேணும்?" என்று சாவதானமாய்க் கேட்டார் தீர்த்தபதி.
"போலீஸ், ஸார்!" என்றதும், தீர்த்தபதியின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அதன் கருத்து கந்தசாமிக்கு விளங்கவில்லை.
"எந்தப் போலீஸ்?"
"டவுன் போலீஸ்தான்."
"என்ன வேணும்?"
கந்தசாமி வழக்கமான பாடத்தை ஒப்புவித்து, "உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுக்கலாம்" என்றான்.
"சரி, கொஞ்சம் இரு" என்று தீர்த்தபதி சொல்லிவிட்டு, வேலைக்காரப் பையனை அழைத்து அவனிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினார். பிறகு இன்னும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கந்தசாமியும் நின்று கொண்டேயிருந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் உடுப்புத் தரித்த ஒரு போலீஸ்காரன் வந்தான். தீர்த்தபதியின் முன் வந்து ஸலாம் வைத்து நின்றான்.
தீர்த்தபதி அவனைப் பார்த்து, "என்ன வேலையடா பார்க்கிறீர்கள், நீங்கள்? சுத்த சோம்பேறிக் கழுதைகள்!" என்று திட்டிவிட்டு, "வாசலில் போய் நில்லு!" என்றார். வாசற்படிக்கு அருகில் நின்ற கந்தசாமி அந்த போலீஸ்காரனை இரகசியமாய், "எஜமான் யார்?" என்று கேட்டான். "தெரியாதா? சப்-இன்ஸ்பெக்டர் ஐயா" என்றான் போலீஸ்காரன்.
இம்மாதிரி நெருக்கடிகளில் தான் கந்தசாமி எவ்வளவு தீர புருஷன் என்பது வெளியாகும். எத்தகைய ஆபத்திலும் அவன் பதற்றம் அடைவது கிடையாது. இப்போது அவன் மளமளவென்று இன்ஸ்பெக்டர் அருகில் சென்று சட்டைப் பைகளில் இருந்த பணம், சில்லறை எல்லாவற்றையும் எடுத்து மேஜை மீது வைத்தான். "எஜமான் மன்னிக்க வேணும்" என்றான்.
"இவ்வளவு தானாடா? இன்னும் பாக்கி ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறாயோ?"
"தம்பிடி கூட இல்லை, எஜமான்!"
"சரி, ஓடிப் போ! இனி இம்மாதிரி செய்தாயோ தொலைத்து விடுவேன்!"
"எஜமான்!"
"என்னடா?"
"வயிறு பசிக்கிறது. நாஸ்தாவுக்கு ஏதாவது..."
"சரி; தொலைத்துக் கொண்டு போ!" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் இரண்டணாவை எடுத்தெரிந்தார். கந்தசாமி அதை எடுத்துக் கொண்டு வெளியேறினான். வாசலில் நின்ற போலீஸ்காரனைப் பார்த்து, "எஜமான் உன்னைப் போகச் சொல்கிறார். அண்ணே! இனி உனக்கு வேலையில்லையாம்" என்று கூறிவிட்டுப் போனான்.
*****
ஸப்-இன்ஸ்பெக்டர் தீர்த்தபதி, கையோடு கையாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மலையப்பெருமாளுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
"....மாற்றலாகிப் போகும்
டிபுடி சூபரின்டென்டண்ட் துரைக்கு நாம் கொடுக்க எண்ணியிருக்கும் விருந்துக்காக,
என்னுடைய சந்தா ரூ.24 இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.
இப்படிக்குக்
கீழ்ப்படிந்துள்ள ஊழியன்
தீர்த்தபதி."
கீழ்ப்படிந்துள்ள ஊழியன்
தீர்த்தபதி."
*****
கந்தசாமி கையில் இரண்டணாக் காசுடன் வீதியில் நடந்து சென்ற போது, 'உலகம் ரொம்ப சரியாய்த்தான் நடந்து வருகிறது; எல்லாம் அதது, அப்படியப்படி சேர வேண்டிய இடத்தில் தான் கணக்காய்ப் போய்ச் சேர்கிறது" என்று சொல்லிக் கொண்டு போனான்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போலீஸ் விருந்து - Police Virunthu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸார், கந்தசாமி, தீர்த்தபதி, என்ன, இன்ஸ்பெக்டர், எஜமான், கொண்டு, தான், இன்னும், என்றான், போலீஸ், கொஞ்சம், வேணும், அவன்