நம்பர் 888
இங்கு மூன்று சித்தாந்தங்களை
ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் வீண்
போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் - மற்ற யுகங்களைப்
பற்றி எனக்குத் தெரியாது - நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் தீமையடைவதும்
நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் நிச்சயமில்லை. இந்த
மூன்று சித்தாந்தங்களுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமென்ன வென்று கேட்டீர்களானால்
- நல்லது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; முத்தலை நகரின் மத்திய சிறைச்சாலையில்
9-வது பிளாக்கில் 12-வது அறையில் இருந்த நம்பர் 888-ஐப்பற்றி நீங்கள்
கேள்விப் பட்டதுண்டா?
இல்லையென்றால் நான் சொல்லுகிறேன். கேளுங்கள். "உமக்கெப்படித் தெரியும்?" என்று கேட்பீர்களோ? சரி அந்த விவரத்தை முதலில் கூறுகிறேன். மேற்படி சிறைச்சாலையில் அதே பிளாக்கில் 11-வது அறையில் நான் சில காலம் வாசம் செய்ய நேரிட்டது. ஐயையோ! இப்போது இதற்குக் காரணம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கதையை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். என்னைச் சிறைக்கனுப்பியது யாதெனில், ஒரு கேள்விக்கு உண்மையாகப் பதில் சொன்னதுதான். நம்ப மாட்டீர்களா? ஐயன்மீர்! இது கலியுகம் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்துகிறேன். கேள்வி கேட்டவர், ஒரு வெள்ளைக்கார துரை. அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். என்னைவிட வயதில் அவர் இரண்டொரு வருஷமே பெரியவராயிருப்பார். இந்நிலையில் எனக்கு ரோசமாயிராதா? ஆம் பாரத நாட்டின் கௌரவத்தைக் காக்கும் பொறுப்பு முழுவதும் அப்போது என் தலைமீது சுமந்திருந்ததாக எனக்கெண்ணம்.
"ஷெடிஷன் (அரசாங்கத்துவேஷம்) என்பதற்கு உமக்குப் பொருள் தெரியுமா?" என்று துரை கேட்டார். "ஓ நன்றாகத் தெரியும், துரையே! சென்ற ஒரு வருஷகாலமாக அந்த வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்" என்றேன். நுணலும் தன் வாயால் கெடும்! அதுதான்! "தெரியாது" என்று சொல்லியிருந்தால், ஒருக்கால், துரை 'பாவம் ஒன்றுந்தெரியாத சிறுவன்' என்றெண்ணி என்னை விட்டிருக்கலாம். உண்மை கூறியதின் பயன், "ஒரு வருஷம் கடுங்காவல்". என் மீது குற்றமில்லை, ஐயா! எல்லாம் காலத்தின் கூற்று. 1922-ம் வருஷ ஆரம்பம், பர்தோலி முடிவுக்கு முன்னால். மேலும், என் ஜாதகத்தில் காராகிரகப் பிரவேசம் என்று நன்றாய்ப் போட்டிருப்பதாக வெளியே வந்த பிறகு ஜோதிடர்கள் சொன்னார்கள்.
நல்லது; முத்தலைநகரின் மத்திய சிறைச் சாலையில் 9-வது பிளாக்கில் 11-வது அறைக்கு நான் வந்தது எப்படி என்பது இப்போது விளங்கி விட்டதல்லவா? இனி முதலில் விட்ட இடத்தில் தொடங்கி, அடுத்த 12-வது அறையிலிருந்த நம்பர் 888-ஐப் பற்றிக் கூறுகிறேன். 888-க்குப் பூர்வாசிரமத்தில் கேசவலு நாயுடு என்று பெயர். அவரைப் பற்றி அச்சிறைச்சாலை வார்டர்களும் மற்றக் கைதிகளும் என்னவெல்லாமோ சொன்னார்கள். அவர் பெரிய வேஷதாரியென்றும், ஏராளமான பணத்தை எங்கேயோ புதைத்து வைத்து விட்டு இங்கே ஏழை போல் நடிக்கிறாரென்றும் கூறினார்கள். விடுதலையாகப் போகும் கைதிகளில் பலர் அவரிடம் வந்து பணம் புதைத்து வைத்திருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடுவதுண்டு. அவர் "இல்லை" என்றால் யாரும் நம்புவது கிடையாது. இவையெல்லாம் என்னுடைய ஆவலை நிரம்பக் கிளப்பிவிட்டன. எனவே, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தாழ்வாரத்தில் நாங்கள் இருவரும் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய வரலாற்றை விசாரித்தேன். என் வரையில், அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று எண்ணியிருந்தேன். பொய் சொல்லக் கூடியவரல்லர் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் தமது வரலாற்றைக் கூறிய பான்மையும் அப்படியேயிருந்தது. எனவே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்பினேன். ஆனால், அவர் கூறிய வண்ணமே இங்கே கதை சொல்லுந்திறமை எனக்கில்லை; நான் ஏகசந்தக்கிராகியல்லன். மேலும் சில விஷயங்களை எழுதுதலும் நன்றாயிராது. முக்கியமாக, சிங்கப்பூர் நாயுடுவுக்கு அவர் கொடுத்த சாபங்கள் பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதியானவையல்ல. எனவே என்னுடைய சொந்த நடையில் கேசவலு நாயுடு வரலாற்றைச் சுருக்கித் தருகிறேன்.
மேல்குடி கிராமத்தில் நாயுடுமார் வீதிதான் முக்கியமானது. ஊரில் பெரிய பணக்காரர்களும் மிராசுதாரர்களும் நாயுடுமார்களே. சிலர் பரம்பரைச் செல்வர்கள். சிலர் முயற்சியினால் பணக்காரரானவர்கள். ஒருவர் மளிகைக் கடை வைத்துப் பைசாவுக்குப் பைசா லாபம் சேர்த்து விற்றுப் பணக்காரர் ஆனார். மற்றொருவர், லேவாதேவி செய்து 1.50 வட்டிக்குக் குறையாமல் வாங்கிப் பெரிய முதலாளி ஆனார். இன்னொருவர், மலாய் நாட்டுக்குச் சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தார். இப்படிக் கண்ணெதிரில் எல்லாரும் பணக்காரர் ஆவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கேசவலு நாயுடு மட்டும், அன்றிருந்த நிலைக்கு அழிவின்றி இருந்தார். பாவம்! அவர் மீது தவறில்லை. பணம் சேர்ப்பதற்கு அவர் கைக்கொண்ட முறை அத்தகையது. அதுதான் விவசாயம். விவசாயத்தொழில் நடத்திப் பணக்காரன் ஆனவன் எங்கேயாவது உண்டா? கொஞ்ச காலம் குத்தகை எடுத்துச் சாகுபடி செய்து பார்த்தார். சொந்த நிலத்தின் வருமானமும் அதில் அடித்துக் கொண்டு போவதாயிருந்தது. பின்னர் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, தாமுண்டு தமது நிலமுண்டு என்று இருந்து வந்தார். அவருக்குப் பணக்காரராக ஆசையில்லாமலில்லை. அடுத்த வீட்டுக்காரர் எல்லாரும் பணக்காரர் ஆகி வருகையில், தாம் மட்டும் ஆசைப்படாமலிருக்க அவர் என்ன, சந்நியாசியா? நேற்றுக் கஞ்சிக்கு இல்லாதிருந்தவர்கள் இன்று மூன்று கட்டு வீடு கட்டிவிட்டார்கள் என்னும் விஷயத்தை அவர் மனைவி, அடிக்கடி நினைவூட்டி வந்தாள். "பேசாமலிரு, அதிர்ஷ்டம் வரும்போது, தானே வரும்" என்று சமாதானம் சொல்லி வருவார். இப்படிச் சொல்லிச் சொல்லி ஏதேனும் ஒரு வழியில் தமக்கு அதிர்ஷ்டம் வந்தே தீரவேண்டுமென்று அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அதிர்ஷ்டம் வரக்கூடிய வழிகள் பற்றி அவர் ஓயாது சிந்திப்பார். கடைசியாக அவருடைய யோசனை "புதையல்" என்பதில் வந்து முற்றுப்புள்ளிப் போட்டு நின்றது. அதற்குமேல் ஓடக் கண்டிப்பாக மறுத்துவிட்டது. அதிர்ஷ்டம் தம்மிடம் வந்துசேர வேறு வழி எதுவும் இருப்பதாகப் புலப்படவில்லை. நதிப்படுகையிலும், நாணற்காட்டிலும், வீதியில் வழி நடக்கையிலும், வயல் வரப்பிலும், கொல்லை அவரைக் குழியிலும், வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு நேர் கீழேயும், தோண்டியிலும், குடத்திலும், தவலையிலும், பெட்டியிலும் அவர் புதையல் கண்டெடுத்துக் கலகலவென்று சிரித்துத் தூக்கத்திலிருந்து விழித்த இரவுகள் அனேகம்...
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நம்பர் 888 - Number 888 - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவர், நான், அதிர்ஷ்டம், மூன்று, கூறிய, பணக்காரர், பிளாக்கில், பெரிய, நாயுடு, துரை, பற்றி, கேசவலு, தெரியும்