மயில்விழி மான்
2
வாயிலும் மூக்கிலும் உப்பு ஜலம் ஏறி மூச்சுத்
திணறுவது போன்ற உணர்ச்சியுடன் சுய நினைவு பெற்றேன். பொல்லாத உயிர் என்
உடம்பை விட்டுப் போய் விடவில்லை. இந்திய சர்க்காரிடம் பெற்ற உதவி தொகைக்கு
ஈடாக ஏதேனும் நான் ஆராய்ச்சி செய்து என் கடனைக் கழித்தே ஆகவேண்டும் அல்லவா?
அதற்காகவே பிழைத்தேன் போலும்! வாயில் புகுந்திருந்த உப்பு ஜலத்தைத் துப்பிக்
கொண்டு எழுந்து நின்றபோது கடலோரத்தில் இடுப்பளவு ஜலத்தில் நிற்கக் கண்டேன்.
பெரிய அலை ஒன்று என்னை மோதி அடித்துக் கொண்டு சென்றது. அலை போன பிறகு
பார்த்தால் ஈர மண்ணில் தரையில் கிடந்தேன். சட்டென்று எழுந்து இன்னும்
கொஞ்சம் கரையை நோக்கிச் சென்றேன். அங்கிருந்த ஒரு மலைப் பாறை மீது தாவி
ஏறிக் கொண்டேன். பிறகு நாலா புறமும் பார்த்தேன். அதிர்ஷ்டம் என்று சொல்வதா,
கடவுளின் கருணை என்று சொல்வதா என்று தெரியாமல் திகைத்தேன். பஸிபிக் சமுத்திரத்தின்
மத்தியில் ஆங்காங்கு இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேனே, அந்தத் தீவுக்கூட்டங்களில்
ஒன்றில் நான் இருப்பதாக அறிந்து கொண்டேன். ஒரு தீவின் கரையில் நான் ஒதுங்கியிருந்தேன்.
சுமார் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இன்னொரு தீவு தெரிந்தது. அதற்கு
அப்பால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு தீவு காணப்பட்டது.
பஸிபிக் சமுத்திரத்திலுள்ள சில தீவுகள் சொர்க்கலோகத்துக்கு இணையான வனப்பும் வளமும் பொருந்தியவை என்று புத்தகங்களில் படித்திருந்தது நினைவு வந்தது. அமெரிக்காவில் நான் ஏறிய விமானம் என்னை நேரே சொர்க்கலோகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவே எண்ணிக் கொண்டேன்.
என்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி நானே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் என்னுடன் விமானத்தில் வந்தவர்களைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. கப்பல்களிலும் ஆகாச விமானங்களிலும் பிரயாணம் செய்கிறவர்கள் சாதாரணமாக 'பைனாகுலர்' என்னும் தூரதரிசினிக் கண்ணாடி கொண்டு போவது வழக்கம், ஆம்; கிரிக்கெட், புட்பால், விளையாட்டுக்கள் பார்க்கப் போகிறவர்களும் 'பைனாகுலர்' கொண்டு போவதுண்டு. நான் என் தோளில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்த 'பைனாகுலர்' இத்தனை ஆபத்துகளுக்கும் தப்பிச் சேதமாகமாலிருந்தது. அதை எடுத்துக் கண்களில் வைத்துக் கொண்டு முதலில் எனக்கு எதிரே அகண்டமாக விரிந்து கிடந்த சமுத்திரத்தை நோக்கினேன்.
தெய்வமே! ஏன் பார்த்தோம் என்று கதி கலங்கும்படியான காட்சியைக் கண்டேன். நாங்கள் வந்த விமானம் கடல் நடுவில் விழுந்து கொஞ்சங் கொஞ்சமாக அமுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த பிரயாணிகள் சிலர் வெளியேறிக் கடலில் நீந்த முயற்சி செய்தார்கள். இது ஒரு கணம் தெரிந்தது. மறு கணத்தில், அம்மா! கூட்டம் பாய்ந்து வந்ததைக் கண்டேன். அந்த மீன்களின் கோரமானவாய்க்குள், நீத முயன்றவர்கள் சென்றதையும் கண்டேன். என் உடம்பு நடுங்கியது. எப்படிப்பட்ட விபத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணிக் கொண்டு எனக்கு வலது புறத்திலிருந்த தீவின் மீது பார்வையைச் செலுத்தினேன். அங்கே அதைவிடப் பன்மடங்கு பயங்கரமான காட்சி எனக்குக் காத்திருந்தது.
ஆப்பிரிக்காத் தேசத்து உட்பிரதேசங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டி ராட்சஸர்கள் வசிப்பதாகக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? புத்தகங்களில் படித்திருப்பீர்கள்; சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். அம்மாதிரி ராட்ஸசக் கூட்டம் ஒன்று அங்கே களிக் கூத்தாடிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் களிப்புக்குக் காரணம் என்ன வென்பது தெரிந்து போயிற்று. ஆகாச விமானத்தில் எனக்குப் பக்கத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சாபி நண்பர் அக்கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் காணப்பட்ட பீதியையும் வேதனையையும் சொல்ல முடியாது என்னால் ஒரு கண நேரத்துக்கு மேல் அதைப் பார்க்க முடியவில்லை. நான் இறங்கியிருக்கும் தீவிலும் அத்தகைய காட்டுமிராண்டிகள் தான் இருக்கிறார்களோ, என்னமோ? இப்படி நினைத்ததும் என் உடம்பு நடுங்கியது. தீவுக்குள் போகலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். அதற்குள் ஏதோ கடலில் சலசலப்புச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பைனாகுலரை வைத்துப் பார்த்தேன். நூறு இருநூறு இல்லை, ஆயிரம் பதினாயிரம் சுறா மீன்கள் ஒரு பெரிய யானை மந்தையைப் போல் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு நான் இருந்த திசையை நோக்கி வெகுவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது நான் அடைந்த பயத்தைப் போல் என் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.
என் நிலைமை இன்னதென்பதை என்னுடைய பயமே எனக்கு உணர்த்திவிட்டது. அது வரைக்கும் கடல் நீர் வடியும் நேரமாயிருந்தபடியால், நான் இருந்த தீவைச் சுற்றிக் கொஞ்சம் பூமிப் பிரதேசம் தெரிந்தது. கடல் பொங்க ஆரம்பித்து விட்டால் ஜலம் தரையெல்லாம் முழுக அடித்துக் கொண்டு மேலே வந்து விடும். நான் அப்போதிருந்த பாறை கூடத் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்படியென்றால், சுறாமீன்கள் அங்கேயும் வந்துவிடக்கூடும்.
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது கடல் பொங்க ஆரம்பித்து விட்டதைப் பார்த்தேன். உடனே குதித்து எழுந்து அந்தக் கற்பாறைகளின் மீது தத்தித் தாவி ஏறினேன். அங்கங்கே வழுக்கிய இடங்களில் கீழே விழுந்து மறுபடி எழுந்தேன். உயிர் மீதுள்ள ஆசை, முக்கியமாக அந்தச் சுறா மீன்களின் பற்களின், இடையில் அகப்பட்டுக் கொள்வதைப் பற்றிய பீதி என்னை அங்கு நிற்கவிடாமல் துரத்தி அடித்தது.
சுமார் அரை மணி நேரம் விழுந்து விழுந்து ஓடித்தாவி ஏறி மூச்சுத் திணறிய பிறகு, அவ்வளவு முயற்சியும் வீண் என்று கண்டேன்.
எனக்கு எதிரே செங்குத்தான ஒரு பெரிய மதில் சுவர் நின்றது. அண்ணாந்து பார்த்தால் உச்சித் தெரியாதபடி அவ்வளவு உயரமான சுவர், அந்தச் சுவர் ஓரமாகவே வழுக்கிய பாறைகளில் நிதானமாகக் கால் வைத்து நடந்து சிறிது தூரம் சென்றேன். சுவர் முடிவில்லாமல் சென்றது.
ஏற்கனவே களைத்துப் போயிருந்தேன். அத்துடன் ஏமாற்றமும் மனச்சோர்வும் சேர்ந்து கொண்டன. அந்த மதில் சுவரில் மண்டையை மோதிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அதில் ஒன்றும் பயனில்லை. அதைக் காட்டிலும் மலைப்பாறை உச்சியிலிருந்து கடலில் குதித்து உயிரை விடலாம் என்று தோன்றியது. ஆகாச விமானத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்து விட்டு இப்போது உயிர் விடுவதற்காகப் பாறையிலிருந்து குதிக்க வேண்டியிருப்பதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வந்தது.
கடலோரமாக உயரமான பாறையொன்றை அணுகி அதன் பேரில் உட்கார்ந்தேன். என்னுடைய நிலைமை பற்றி நிதானமாக யோசிக்கலுற்றேன். எதிரே யானைகளைக் கூட விழுங்கக் கூடிய சுறாமீன்கள் மந்தை மந்தையாக உலாவும் கடல். அப்பால் மனிதர்களைப் பலி கொடுத்து உண்ணும் ராட்சஸ மக்கள் வசிக்கும் தீவு. இந்தப் பக்கம் திரும்பினால், கண்ணுக்கெட்டிய தூரம் வானை நோக்கி உயர்ந்திருந்த மதில் சுவர். நான் இருந்த பாறைக்குச் சற்றுத் தூரத்தில், இன்னொரு பாறையின் பேரில் இரண்டு பெரிய கழுகுகள் வந்து உட்கார்ந்தன. அவை தான் எனக்குத் தோழர்கள். அவற்றின் நோக்கம் என்ன என்பது பற்றி அதிகமாகச் சந்தேகப்படுவதற்கில்லை. அடுத்தத் தீவிலுள்ள ராட்சஸ மக்களை விட இந்தக் கழுகுகள் நல்லவை தான். எனெனில் நான் இறந்து போகும் வரையில் காத்திருப்பதற்கு வேண்டிய பொறுமை இவற்றுக்கு இருக்கின்றன அல்லவா?
முடிவில் இந்தக் கழுகுகளுக்கு இரையாவதற்குத் தானா உயிர் பிழைத்தோம் என்று எண்ணினேன். இல்லை, இல்லை. வேறு வழி ஏதேனும் இருக்க வேண்டும். உயிர் உள்ள வரையில் நம்பிக்கைக்கு இடம் உண்டு அல்லவா? மீண்டும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டும். இந்தக் கோட்டை மதில் சுவர் மேல் ஏறுவதற்கு எங்கேயாவது வழி இல்லாமலா போகும்? எப்படியாவது இந்த மதிலைக் கடந்து உள்ளே போய்ப் பார்க்க வேண்டும். யாரோ நாகரிகத்தில் முன்னேற்றமடைந்த மனிதர்கள் இந்த மதிலைக் கட்டியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அடுத்தாற்போல், அந்த இன்னொரு தீவில் உள்ள ராட்ஸதர்கள் கோட்டைக் கட்டிக்கொள்ளவில்லையே? ஒரு வேளை அந்தக் காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்தத் தீவில் உள்ளவர்கள் இவ்வளவு பெரிய மதில் சுவர் எழுப்பியிருக்கிறார்களோ என்னமோ? அப்படியும் இருக்கலாம் அல்லது கோட்டை கட்டியவர்கள் அனைவரும் மாண்டு மடிந்து போயிருக்கலாம். கோட்டைக்குள் இப்போது வசிப்பவர்கள் காட்டு மிராண்டி இனத்தவராகவே இருக்கலாம். அல்லது மனிதர்களே இல்லாத நிர்மானுஷ்யமான தீவாக இருந்தாலும் இருத்தல் கூடும். பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. மனிதர்கள் வசிப்பதாயிருந்தால், மதில் சுவரின் உச்சியில் யாராவது இருக்கலாம் அல்லவா? கோட்டையும் மதில் சுவரும் கட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் மேலே காவல் வைக்காமலா இருப்பார்கள்?
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மயில்விழி மான் - Mayilvizhi Maan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, சுவர், மதில், கடல், உயிர், விழுந்து, கண்டேன், அல்லவா, பெரிய, எனக்கு, வேண்டும், இன்னொரு, வந்து, தான், இல்லை, பார்க்க, அந்தக், அந்த, இருந்த, பிறகு, இருக்கலாம், எழுந்து, இந்தக், என்னை, கடலில், பார்த்தால், நினைவு, தெரிந்தது, தீவு, பார்த்தேன், என்னுடைய, ஆகாச, மீது, எதிரே, கொண்டேன், பைனாகுலர், அப்பால்