மாடத்தேவன் சுனை
4
அன்றிரவே மாடத்தேவனுடைய தோட்டக் குடிசையில்
அடுப்புப் புகை கிளம்ப ஆரம்பித்து விட்டது. பழையபடி சுயம்பாகம் செய்து
சாப்பிடத் தொடங்கினான்.
மறுநாள் கருப்பையா சேர்வை மாடத்தேவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
"தம்பி நேற்றெல்லாம் உன்னைக் காணோமே? எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டான்.
"நான் எங்கும் போகவில்லை, உங்களுக்குத்தான் கண் தெரியவில்லை. புது விருந்தாளி வந்திருக்கிறான் அல்லவா? அந்த மவுஸில் முழுகியிருந்தீர்கள்!"
"அது உண்மைதான், வீட்டுக்கு புது விருந்தாளி வந்தால் உபசரிக்க வேண்டியது நியாயந்தானே! அவனோ உடம்பெல்லாம் புண்ணுடன் வந்திருக்கிறான். அவன் யார் என்று தெரியுமா? வேலம்மாள் சொன்னாளா?"
"அவளோடு இங்கே யார் பேசினார்கள்?"
"நேற்றுச் சாயங்காலம் உனக்குச் சோறு கொண்டு வந்தாளே? சொல்லவில்லையா?"
"கொண்டு வந்தாள். நான் சோறு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..."
"நான் தான் அவளை இன்னும் ஐந்தாறு நாளைக்கு உனக்குச் சோறு கொண்டு வந்து இங்கேயே கொடுத்து விடும்படி சொன்னேன். புது ஆள் வந்திருக்கிறானே, அவன் என் அக்காவின் மகன். உன்னைப் பார்த்தால், நீ யார் இன்னார் என்று கேட்பான். எதற்காக வீணாய் இந்த வம்பு?"
"இத்தனை நாளும் இல்லாமல் இப்பொழுது அக்கா மகன் திடீரென்று வந்து குதித்து விட்டானா?"
"அதில் என்ன அதிசயம்? இந்தக் காலத்தில் அங்கங்கே படை திரட்டுகிறார்கள்; படையைக் கலைக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பாளையக்காரன் ராஜாங்கம் செலுத்துகிறான். நாளைக்கு அவன் புளியமரத்தில் தொங்குகிறான். நீ கூட இரண்டு வருஷத்துக்கு முன்னால் திடீரென்றுதானே இங்கே வந்து குதித்தாய்?"
"அதைப்பற்றி இப்போது என்ன? எனக்கு வேலை இருக்கிறது. வீண் பேச்சு பேச நேரம் இல்லை. நீங்கள் போய் உங்கள் விருந்தாளியைப் பாருங்கள்."
"அவ்வளவு பதட்டப்படாதே, தம்பி! வந்திருப்பவன் நல்ல சொத்துக்காரன். அதிக நாள் உயிரோடிருக்க மாட்டான். இருக்கிறவரையில் அவனைக் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் அவனுடைய சொத்து நமக்கு வரும். அப்புறம் உனக்கும் வேலம்மாளுக்கும் ஒருவிதமான கவலையுமில்லை! ஆயுள் முழுவதும் நீங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்."
"அப்படிப்பட்ட சொத்து எனக்கு வேண்டாம். நீங்களும் உங்கள் மகளுமே வைத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கைப்பாடு பட்டுப் பிழைக்கத் தெரியும்!" என்று சொல்லி மாடத்தேவன் விர்ரென்று நடந்து தோட்ட வேலையைப் பார்க்கப் போனான்.
கிழவன், "இந்த பிள்ளைக்கு வந்த கிறுக்கைப் பார்!" என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்.
பிறகு நாலைந்து நாட்கள் விசேஷம் ஒன்றுமில்லாமல் கழிந்தன. மாடத்தேவனுடைய உள்ளத்தில் மட்டும் எரிமலை ஜுவாலை விட்டுக் கொண்டிருந்தது. வெளியே தீக்குழம்பைக் கக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பமும் வந்தது.
ஒரு நாள் மாலை தற்செயலாக மாடத்தேவன் மலை உச்சியில் சுனை இருக்கும் இடத்தை நோக்கினான். அந்தச் சுனைக்கரையில் தானும் வேலம்மாளும் எத்தனையோ நாள் மாலை நேரங்களில் உல்லாசமாகப் பொழுது போக்கியதெல்லாம் நினைவு வந்தது. இருவருமாகச் சேர்ந்து கட்டிய ஆகாசக் கோட்டைகளை நினைத்துக் கொண்டு நெடிய பெருமூச்சு விட்டான். அதைப் பற்றி நினைத்த போதெல்லாம் அவனுடைய நெஞ்சை வலித்தது. அந்தச் சுனையருகில் போனால் ஒருவேளை தன் மனத்தின் தாபம் தீருமோ என்று எண்ணி ஆர்வத்துடன் நோக்கினான். அப்போது மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த அஸ்தமன சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு ஒரு மனிதனின் உருவம் கரிய நெடிய சிலைபோல அங்கே நின்றது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் உருவம் வந்து அந்த நெடிதுயர்ந்த மனிதனின் பக்கத்தில் நின்றது. இருவரும் சுனைக்கரையில் இருந்த வெள்வேல மரத்தடியில் உட்கார்ந்ததும் தெரிந்தது. இதைப் பார்த்ததும் மாடத்தேவனுடைய உள்ளம் குமுறியது. அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் கொதித்து வெளிவந்தது. மிக்க ஆக்ரோஷத்துடன் குன்றின் மீது பாய்ந்து ஏறினான். அவன் அங்கே போய்ச் சேர்ந்தபோது அந்தப் பெண் உருவத்தைக் காணோம். இடிந்த கோட்டைக்குள் வேலம்மாளின் பணிவிடைக்கும் உரியவனாயிருந்த மனிதன் மட்டும் அந்த வெள்வேல மரத்தில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மேற்குத் திசையை நோக்கி அவன் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபடியால் மாடத்தேவன் வந்ததையே அவன் கவனிக்கவில்லை.
மாடத்தேவன் குன்றில் ஏறத் தொடங்கிய போது தோட்டத்துக்கு வேலி எடுத்துக் கொண்டிருந்தான். ஆகையால் அவனுடைய கையில் கொஞ்சம் நார்க் கயிறு இருந்தது. மடியில் செருகியிருந்த கத்தியும் இருந்தது. தனியாக உட்கார்ந்திருந்த ஆளைக் கண்டதும் அவனுடைய மூளையில் சட்டென்று ஒரு யோசனை உதயமாயிற்று. பின்புறமாகச் சென்றான். கயிற்றை வீசி எறிந்து அந்த மனிதனைச் சுற்றி மரத்தோடு சேர்த்துக் கட்டினான். கட்டி முடிச்சுப் போட்டுவிட்டு எதிர்ப்பக்கத்தில் வந்தான். மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்துப் பிடித்துக் கொண்டான், "அடபாவி! சண்டாளா! நீ யார், எதற்காக இங்கே வந்தாய் என்று சொல்லிவிடு. எனக்கும் வேலம்மாளுக்கும் குறுக்கே எப்படி நீ வரலாம்? அவளுக்கும் எனக்கும் கலியாணம் நடப்பது ஒன்றுதான் பாக்கியாயிருந்தது. அப்படி இரண்டு உடலும் ஒருயிருமாயிருந்தோம். எங்கள் வாழ்க்கையைப் பாழாக்க நீ வந்தாய். எதற்காக வந்தாய்? உன்னுடைய மனதில் என்ன எண்ணியிருக்கிறாய்? உண்மையைச் சொல்லிவிடு. திரும்பவும் அவளைப் பார்க்காமல் இப்படியே ஓடிப் போவதாகச் சத்தியம் செய்து கொடு; சத்தியம் செய்து கொடுத்தால் உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இந்தக் கத்தியால் குத்திக் கொன்று போடுவேன். இது நிச்சயம் நான் சொன்னபடி சத்தியம் செய்யப் போகிறாயா, இல்லையா?" என்று மாடத்தேவன் சரமாரியாகப் பொழிந்தான்.
அந்தக் கட்டுண்ட மனிதனோ இத்தனைக்கும் அதிசயம் ததும்பிய கண்களால் மாடத்தேவனை உற்று பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை ஏதோ சொல்லப் போகிறவன் போல் அவனுடைய உதடுகள் ஒரு தடவை அசைந்தன... ஆனால் வார்த்தை ஒன்றும் வெளி வரவில்லை.
"அடே! ஏன் ஆடு திருடின கள்ளனைப் போல் விழித்துக் கொண்டிருக்கிறாய்? பதில் சொல்வதற்கு என்ன? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? உன்னை இப்படியே கட்டிப் போட்டுக் கொலை செய்வேன் என்று நினைக்காதே! நீ என்னோடு கத்தி எடுத்துச் சண்டை செய்வதாயிருந்தால் சொல்லு! அவிழ்த்து விட்டுவிடுகிறேன். ஆனால் தப்பித்து ஓடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! கோட்டையில் ஒளிந்து கொள்ளலாம் என்று மனப்பால் குடிக்காதே! அந்தப் பாழுங் கோட்டையின் மர்ம வழிகள், மூலை முடுக்குகள் எல்லாம் எனக்குத் தெரியும். நீ எங்கே ஒளிந்து கொண்டாலும் விடமாட்டேன்" என்று மாடத்தேவன் கர்ஜித்தான்.
அதற்கும் கட்டுண்ட மனிதன் சும்மா இருந்தான்.
மாடத்தேவனுக்கு வந்த எரிச்சலைச் சொல்ல முடியாது. "நான் எவ்வளவு நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ ஏண்டா சும்மாயிருக்கிறாய்? உனக்குப் பேசத் தெரியாதா? நீ ஊமையா?" என்றான்.
அத்தனை நேரமும் வியப்பு மட்டும் தோன்றிய முகத்தில் இப்போது ஒரு புன்னகை தோன்றிப் பரவியது. அந்தப் புன்னகை மிக விசித்திரமாயிருந்தது. ஆனால் அதன் பொருள் மாடத்தேவனுக்கு விளங்கவில்லை. எரிச்சல் அதிகமாயிற்று.
"என்னடா சிரிக்கிறாய்? நான் சொல்வதெல்லாம் உனக்கு கேலியாக இருக்கிறதா? பரிகாசமா செய்கிறாய்? இதோ பார்! உன்னை ஒரே குத்தாய் குத்திவிடுகிறேன். என் ஆசைக் காதலியை என்னிடமிருந்து பறித்தவனுக்கு இதுதான் தண்டனை!" என்று கத்தியை ஓங்கினான்.
அச்சமயம் கட்டுண்ட மனிதனுடைய பார்வை மாடத்தேவனுக்குப் பின்புறம் சென்றது. அதே கணத்தில் யாரோ வேகமாக ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது.
"அடப்பாவி! நில்லு! நில்லு! என்ன காரியம் செய்யப் போகிறாய்?" என்ற வேலம்மாளின் பதறிய குரல் ஒலி கேட்டது.
மாடத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய உள்ளக் கொதிப்பு இப்போது அனல் ஜுவாலை ஆயிற்று.
"அடி பாதகி! நானா பாவி? கையடித்துக் கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்து எனக்குத் துரோகம் செய்யத் துணிந்த நீ என்னவாம்? முதலில் உன்னைக் கொன்றுவிட்டு அப்புறம் உன் ஆசை நாயகனைக் கொல்கிறேன்!" என்று மாடத்தேவன் கத்திக்கொண்டே வேலம்மாளை நோக்கிக் கத்தியை ஓங்கினான்.
"ஐயோ!" என்று வேலம்மாள் வீரிட்டாள். அதே சமயத்தில் மாடத்தேவனுக்குப் பின்னால் படபடவென்று சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவனுடைய கத்தி பிடித்த கையை இன்னொருவனுடைய கை பிடித்துக் கொண்டது. மறுகணம் மற்றொரு கையும் அவ்விதம் கெட்டியாகப் பற்றப்பட்டது. அது சாதாரணப் பிடியா? இரும்புப் பிடி! அவனைப் பிடித்த கைகள் வஜ்ரத்தினாலான கைகளாகவே இருக்க வேண்டும். மாடத்தேவனுடைய உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரையில் அந்தப் பிடியின் வேகத்தினால் நரம்புகள் புடைத்துக் கொண்டன; அவனுடைய உடம்பு வெட வெடவென்று நடுங்கிற்று.
மாடத்தேவன் சற்றுத் திரும்பிப் பார்த்தான். மரத்தில் சேர்த்துக் கட்டியிருந்த கயிறுகள் சுக்குச்சுக்காக அறுபட்டிருந்தன. கட்டை அறுத்துக் கொண்ட அம் மனிதனுடைய முகத்தில் முன் போலவே ஒரு அதிசயமான புன்னகை தவழ்ந்தது. அவன் உதடுகள் துடித்தன.
"அட பாவி! அவர் யார் என்று தெரியவில்லையா? உன் மண்டையில் மூலை இல்லையா? உன் முகத்தில் கண் இல்லையா?" என்று வேலம்மாள் அலறினாள்.
உடனே, மாடத்தேவனுடைய மூளையில் ஒரு நரம்பு அசைந்தது. அந்த நரம்பு வானவெளியிலிருந்து ஒரு செய்தியை ஏற்று அவன் மூளையில் நிரப்பிற்று. அவனுடைய உடம்பு முழுவதும் புளகாங்கிதமடைந்து புல்லரித்தது. கோபத்தினால் புடைத்திருந்த நரம்புகள் தளர்ந்தன. கையில் இருந்த கத்தியும் சரிந்து கிழே விழுந்தது.
உடனே, அந்த இரும்புக் கைகளும் பிடியை விட்டன.
"வேலம்மா! இவர்தான் ஊமைதுரையா?" என்று கேட்டான் மாடத்தேவன்.
"அது உனக்கு இத்தனை நேரம் தெரியவில்லையா? உன் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்ல!" என்றாள் வேலம்மாள்.
"சாமி! துரையே!" என்று மாடத்தேவன் பாறையில் நெடுஞ்சாண் கடையாக விழுந்து ஊமைத்துரையின் கால்களை பிடித்துக் கொண்டான்.
"தெரியாமல் நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்கள். நான் கும்பிடப் புறப்படுவதற்கு முன்னாலேயே என் தெய்வம் என்னைத் தேடி வந்து விட்டது. துரையே! இந்த சண்டாளப் பாவி வேலம்மாள் இருக்கிறாளே, இவளிடம் நான் கொண்ட மோகந்தான் என் கண்களுக்குத் திரை போட்டு மறைத்து விட்டது. இவளாவது முன்னாலேயே எனக்கு சொல்லக்கூடாதா? சொல்லாமல் துரோகம் செய்து விட்டாளே!" என்றான்.
ஊமைத்துரை மறுபடியும் புன்னகை செய்தான். கொன்னிக் கொன்னி இந்த வார்த்தைகளைச் சொன்னான். "த-த-தம்பி! இந்தச் சு-சு-சுருள் வாளைப் பார்! இதை ஒ-ஒ-ஒரு தடவை வீசி...ஏ-ஏ-ஏழு தலைகளை வெட்டியிருக்கிறேன். உன்னுடன் ச-ச-சண்டை போடச் சொல்கிறாயா!" இவ்விதம் சொல்லி ஊமைத்துரை தன் மடியிலிருந்து கீழே விழுந்து கிடந்த சுருள்வாளை எடுத்து ஒரு வீச்சு வீசினான். இருபுறமும் கூருடைய அந்தச் சுருள்வாள் சுமார் பதினாறு அடி தூரம் மின் வெட்டைப் போல் பாயந்து திரும்பி வந்து சுருண்டு கொண்டது. அதை அவ்விதம் விசிறிய போது நாகப் பாம்பு சீறுவது போன்ற சீறல் சத்தம் கேட்டது.
மாடத்தேவன் அதைப் பார்த்துவிட்டு "சாமி! நான் இந்தச் சுருள் வாளுக்குப் பயப்படவில்லை. இதே சுருள் வாள் உங்கள் விரோதியிடம் இருந்தால் என் சிறிய மடக்குக் கத்தியை வைத்துக் கொண்டே ஒரு கை பார்ப்பேன். ஆனால் உங்களுடன் நான் சண்டை இடுவேனா? உங்களை இந்த ஜன்மத்தில் பார்க்கப் போகிறேனா என்று தவம் கிடந்தேன். நீங்கள் போர்க்களத்தில் இறந்து வீரசொர்க்கம் சென்றீர்கள் என்று கேள்விப்பட்டு மனமுடைந்து போயிருந்தேன். இப்போது தான் எனக்குப் புதிய உயிர் வந்தது. நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். உங்கள் காலடியில் என் உடல் பொருள் உயிரை அர்ப்பணம் செய்யத் தயார். எனக்குக் கட்டளை இடுங்கள்!" என்றான்.
ஊமைத்துரையின் கண்ணில் அப்போது கண்ணீர் துளித்தது. இதையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த வேலம்மாளும் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவர்கள் மூன்று பேருமாகச் சுனைக் கரையிலிருந்து புறப்பட்டு இடிந்த கோட்டைக்குத் திரும்பிப் போனார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாடத்தேவன் சுனை - Madaththevan Sunai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மாடத்தேவன், நான், அவனுடைய, அவன், வந்து, அந்த, என்ன, கொண்டு, மாடத்தேவனுடைய, வேலம்மாள், யார், கத்தியை, உங்கள், அந்தச், நீங்கள், மட்டும், வந்தது, அந்தப், இப்போது, கேட்டது, செய்து, சத்தம், திரும்பிப், புன்னகை, சுருள், கட்டுண்ட, இல்லையா, போல், என்றான், உன்னை, முகத்தில், பாவி, சண்டை, பார், இங்கே, சோறு, புது, தம்பி, விட்டது, எதற்காக, எனக்கு, பிடித்துக், வந்தாய், மூளையில், பார்த்துக், நாள், சத்தியம்