கணையாழியின் கனவு
9. அமைதி
ஒரு நாள் கல்கத்தா ரங்கநாதம் அவர்களின்
வீட்டிற்கு ஒரு புதிய விருந்தாளி வந்திருப்பதாகக் கணையாழியில் செய்தி
பரவிற்று. அவரைப் பார்த்தால் வடக்கத்தியார் மாதிரி இருக்கிறதென்றும்,
அவரை எதிர் கொண்டு அழைத்துச் செல்வதற்கு ரங்கநாதமும் அவர் புதல்வியும்
ஸ்டேஷனுக்குப் போயிருந்தார்களென்றும், வந்தவருடன் கை கோத்துக் கொண்டு
சகுந்தலை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்தாளென்றும், இன்னும் இந்த மாதிரி
சில்லறை விவரங்களும் அந்தரத் தபால் மூலம் பரவின.
நல்ல வேளையாக கணையாழி வாசிகளின் உண்மையறியும் ஆவல் அதிகமாக வளருவதற்கு இடம் ஏற்படவில்லை. ஏனென்றால் ஸ்ரீ ரங்கநாதம் அவ்வூரில் தமக்கு அறிமுகமான இளைஞர்களையெல்லாம் அன்று மாலை ஒரு சிற்றுண்டி விருந்துக்கு அழைத்திருந்தார். எல்லாரும் கூடியதும் அவர் புது விருந்தாளியைச் சுட்டிக் காட்டி, "இவர்தான் சகுந்தலையின் கணவர்; பெயர் ஷியாம் பாபு. இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவே இச்சிறு விருந்துக்கு உங்களை அழைத்தேன்" என்றார். இப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சுமார் 25 வயதுள்ள ஒரு வங்காள இளைஞர்.
அப்போது அங்கே கூடியிருந்த வாலிபர்கள் எல்லாருடைய மனமும் என்ன நிலையடைந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? காதல் சாஸ்திர விதிகளின்படி அவர்கள் மனோநிலை எப்படி ஆகியிருக்க வேண்டுமென்பதை நான் அறியேன். உண்மையாக நடந்தது மட்டும் எனக்குத் தெரியும். அவர்கள் உள்ளத்தில் சென்ற மூன்று மாத காலமாய் அடித்துக் கொண்டிருந்த பெரும் புயல் திடீரென்று ஓய்ந்து, ஆழ்ந்த, நிறைந்த அமைதி நிலவலாயிற்று. பரபரப்பெல்லாம் பழைய கதையாய் விட்டது. அன்று காப்பி சாப்பிட்டபோது யாரும் சட்டையில் கொட்டிக் கொள்ளவில்லை.
ஷியாம் பாபு கல்கத்தாவில் ஒரு கலாசாலை ஆசிரியர் என்றும், சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு வருஷமாய்ச் சிறையில் இருந்தாரென்றும், அவருடைய நெற்றியில் பெரிய காயத்தின் வடு போலீஸாரின் தடியடியினால் ஏற்பட்டதென்றும், இப்போது மறுபடியும் கல்கத்தா திரும்பியதும் கலாசாலை ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறாரென்றும் சம்பாஷணையின் போது தெரியவந்தன.
"உங்களுக்கெல்லாம் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மூன்று மாதமும் எப்படிப் போகப் போகிறதோ என்று பயமாயிருந்தது. உங்களுடைய சிநேகத்தினால் எவ்வளவோ சந்தோஷமாயும் உபயோகமாயும் காலம் போயிற்று. இரண்டு மூன்று நாளில் பிரயாணப்பட்டு விடுவோம். தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுக் கல்கத்தா போவதாயிருக்கிறோம்" என்றாள் சகுந்தலை.
இதற்கு அடுத்த நாலாம் நாளன்று கல்கத்தா ரங்கநாதம் அவர்களின் வீடு பூட்டிக் கிடந்தது.
கணையாழியின் வீதிகளில் முன்போல் குப்பைகள் சேரலாயின!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணையாழியின் கனவு - Kanaiyazhiyin Kanavu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கல்கத்தா, மூன்று, ரங்கநாதம்