கைதியின் பிரார்த்தனை
1
கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில்
போய்க் கொண்டிருந்தான். ("போய்க் கொண்டிருந்தது" என்று முடித்து, உங்களைத்
திகைக்கச் செய்யவேண்டுமென்று எனக்கு ஆசைதான். ஆனால் மலையைக் கதாபாத்திரமாக
வைத்து எழுதும் திறமை இன்னும் எனக்கு வரவில்லை. மனிதர்களைத்தான் கட்டிக்கொண்டு
அழ வேண்டியிருக்கிறது.)
அந்தப் பட்டிக்காட்டுச் சாலையில் அவ்வளவு துரிதப் பிரயாணத்தைச் சாத்தியமாகச் செய்தது கைலாஸம் ஏறியிருந்த புதுமாடல் மோட்டார் வண்டிதான். வழியிலே அவன் கடக்கும் படியாக நேர்ந்த கிராமங்களில் வாழ்ந்த தெரு நாய்கள் மோட்டாரைத் தொடர்ந்து துரத்திக் கிராமத்துக்கு வெளிப்புறம் வரையில் கொண்டு விட்டு விட்டுத் திரும்பின. தாங்கள் துரத்தியதால் தான் அந்தப் பயங்கர பூதம் பயந்து ஓடிப்போனதாக அவற்றின் மனத்திற்குள் எண்ணம்.
ஆனால் கைலாஸம் இது ஒன்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவனுடைய முகத்தைப் பார்த்தால், மோட்டார் எவ்வளவு வேகமாய் ஓடிற்றோ அதை விடப் பதின்மடங்கு வேகமாக அவனுடைய உள்ளம் ஓடிக் கொண்டிருந்ததென்று தெரியவந்தது.
சட்டென்று வண்டி நின்றது. கைலாஸம் வண்டியிலிருந்து கீழே இறங்கி நாற்புறமும் நோக்கினான். கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கிராமத்தின் கோவில் ஸ்தூபி தெரிந்தது. அதைப் பார்த்துக் கைலாஸம் பெருமூச்சு விட்டான். மேற்கே பார்த்தான். சுமார் பத்து மைல் தூரத்தில் திருச்சி மலைக்கோவிலும், அதற்குச் சமீபத்தில் பொன்மலையும் தெரிந்தன. தெற்கேயெல்லாம் பசுமையான வயல்கள், வடக்கே மரம் அடர்ந்த ஒரு தோப்பு. அந்தத் தோப்புக்கு அப்புறத்தில் காவேரி ஆறு.
கைலாஸம் வண்டியைச் சாலையில் நிறுத்திவிட்டு அந்தத் தோப்பைக் கடந்து ஆற்றங்கரையை அடைந்தான். அங்கே மேல் துணியை விரித்து உட்கார்ந்து கொண்டான்.
அவன் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. கிழக்கே கொஞ்ச தூரத்திலிருந்த கிராமத்துக்குப் பெருமாள்புதூர் என்று பெயர். அவ்வூருக்குப் போகலாமென்ற எண்ணத்துடனே தான் கைலாஸம் அந்தப் பக்கம் வந்தான். ஆனால் ஊர் கிட்டத்தட்ட நெருங்கிய போது சந்தேகம் தோன்றிவிட்டது; போகலாமா, அல்லது வந்த வழியே திரும்பிவிடலாமா?
பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் ஒரு முறை அதே சாலை வழியாக அதே ஊருக்குக் கைலாஸம் போனதுண்டு. அப்போது அவன் இருபது வயது வாலிபன். அந்தத் தடவை இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டியில் அவன் சென்றான். இன்னும் ஸ்திரீ புருஷர்கள் பலரும் வெவ்வேறு வண்டிகளில் வந்தார்கள். எல்லாரும் மறுநாள் பெருமாள் புதூரில் நடக்க இருந்த கைலாஸத்தின் திருக்கலியாண மகோத்ஸவத்துக்காகவே வந்தார்கள். அவர்களுடைய மாட்டு வண்டிகள் எல்லாம் இப்போது கைலாஸத்தின் மோட்டார் நின்ற அதே இடத்தில் தான் வந்து நின்றன. எல்லாரும் இறங்கிக் காவேரிக் கரைக்கு வந்தனர். பெண் வீட்டார் அனுப்பியிருந்த சிற்றுண்டிகளை அருந்தினர். சிரிப்பும் விளையாட்டும் பரிகாஸப் பேச்சுக்களும் ஏகக் குதூகலமாயிருந்தன.
சூரியாஸ்தமன சமயத்தில் கிராமத்தை அடைந்தார்கள். அதோ தெரிகிறதே, அந்தக் கோவிலில்தான் முதன் முதலில் இறங்கினார்கள். ஊராரெல்லாரும் வந்து சர்க்கரை, கற்கண்டு, வெற்றிலை பாக்கு வழங்கிய பிறகு, 'ஜானவாஸ' ஊர்வலம் ஆரம்பமாயிற்று. ஊர்வலத்தின் போது, அதற்கு ஐந்தாம் நாள் இரவு அதே குதிரை ஸாரட்டில் தன்னுடைய பிரியநாயகி சகிதமாக ஊர்வலம் போவோம் என்று எண்ணி உடல் பூரித்ததெல்லாம் கைலாஸத்துக்கு ஞாபகம் வந்தது. அடடா! என்னென்ன ஆகாசக்கோட்டைகள்!
ஊர்வலம், சம்பந்திகளுக்காக ஏற்படுத்தியிருந்த ஜாகையில் வந்து முடிந்தது. கைலாஸம் வீட்டினுள் சென்று ஊர்வல உடுப்புகளை விரைவாகக் களையத் தொடங்கினான். அவற்றை அவன் அணிந்திருந்த வரையில், "அப்பாடா! கலியாணம் என்றால் இலேசு இல்லை; ரொம்பக் கனமாய்த்தான் இருக்கிறது" என்று அடிக்கடி எண்ணம் உண்டாயிற்று. அவன் காலர், நெக் டை இவற்றை அவிழ்த்துவிட்டுக் கோட்டைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, விஷமத்தனமான பார்வையுடன் கூடிய ஒரு பெண் அங்கே வந்தாள். அவள் வேறு யாருமில்லை என்பதை அவள் தெரிந்து கொண்டு, "மாப்பிள்ளை! உமா உங்களிடம் இந்தக் கடுதாசை இரகசியமாய்க் கொடுக்கச் சொன்னாள்" என்று கூறி ஒரு கடிதத்தை அவன் சட்டைப் பையில் திணித்துவிட்டு ஓடினாள்.
கைலாஸத்துக்கு ஏற்பட்ட வியப்பும், ஆவலும், பரபரப்பும் சொல்ல முடியாது. மயிர்க்கூச்சல் எறிந்தது. நெஞ்சை என்னவோ செய்தது. விளக்கண்டை சென்று பார்த்தான். மேல் உறையில் "எம்.ஆர்.ஆர்.ஒய். டி.பி.கைலாஸம்" என்று பெண் கையெழுத்தில் இங்கிலீஷில் எழுதியிருந்தது. உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து படித்தான்:
"ஐயா,
தங்களை விவாகம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை. என்னுடைய மனம் இன்னொருவர் மேல் சென்று விட்டது. என்னை நீங்கள் மணந்து கொண்டால், நம் இருவருடைய வாழ்க்கையிலும் துன்பந்தான் குடி கொண்டிருக்கும்! காதல் இல்லாத கல்யாணத்தினால் என்ன பயன்!
படித்துக் கொண்டிருக்கும் போதே விளக்கு,
வீடு எல்லாம் சுழல ஆரம்பித்தன. இரண்டு, மூன்று நிமிஷம் பிரமை கொண்டவன்
போல் இருந்தான் கைலாஸம். அப்புறம் பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ ஒரு
முடிவுக்கு வந்தவன் போல் விரைவாகச் சென்றான். கைலாஸத்துக்குத் தகப்பனார்
இல்லை. இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவரும், நடத்தி வைக்க வேண்டியவரும்
அவனுடைய தாய் மாமன் தான். அவரிடம் சென்று, "மாமா! பெண்ணின் தகப்பனாரிடம்
ஒரு முக்கியமான காரியம் பேச வேண்டும். அதற்குப் பிறகு தான் இந்தக் கலியாணம்
நிச்சயம்" என்று சொல்லி அழைத்துச் சென்றான். பெண்ணின் தகப்பனாரிடம் போனதும்,
"ஐயா! தங்கள் மகளிடம் ஒரு நிமிஷம் நான் தனிமையில் பேச வேண்டும். அவளிடம்
ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத் தான் நான் கலியாணத்துக்குச் சம்மதிப்பேன்"
என்று கூறினான். அவர், "முன்னாலேயே இதைச் செய்திருக்க வேண்டியது. இன்று
பெண்ணைப் பார்ப்பது சம்பிரதாய விரோதம். ஆனாலும் பாதகமில்லை. உங்கள் இஷ்டப்படியே
ஆகட்டும்" என்று கூறி அவ்வாறே ஏற்பாடும் செய்தார். கைலாஸம் இருந்த அறைக்கு
உமா வந்ததும் அவன் அவளை அப்படியே எடுத்து விழுங்கிவிடுபவன் போல் ஒரு
பார்வை பார்த்தான். பிறகு கடிதத்தை நீட்டி, "இந்தக் கடிதம் நீ எழுதியதுதானா?"
என்று கேட்டான். "ஆமாம்" என்று தழுதழுத்த குரலில் பதில் வந்தது.தங்களை விவாகம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை. என்னுடைய மனம் இன்னொருவர் மேல் சென்று விட்டது. என்னை நீங்கள் மணந்து கொண்டால், நம் இருவருடைய வாழ்க்கையிலும் துன்பந்தான் குடி கொண்டிருக்கும்! காதல் இல்லாத கல்யாணத்தினால் என்ன பயன்!
இப்படிக்கு,
உமா."
உமா."
"ரொம்ப சந்தோஷம். நீ உன் மனத்திற்கிசைந்த புருஷனையே மணந்து கொள், அம்மா! அதற்குக் குறுக்கே நிற்கும் பாவத்தை நான் கட்டிக் கொள்ளத் தயாராயில்லை" என்று கூறிவிட்டு மணப்பெண்ணை மறுமுறை பார்க்கவும் செய்யாமல் வெளியே வந்தான்.
நேரே பெண்ணின் தகப்பனாரிடம் போய், "ஐயா! தங்களுடைய பெண்ணை மணக்க எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து மன்னிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு உடனே வெளியே வந்து வண்டியைப் பூட்டச் சொன்னான். ஏக அல்லோல கல்லோலம். யாரோ என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும் பயன்படவில்லை. கைலாஸம் ஒரே பிடிவாதமாயிருந்தான். தன்னுடைய பிடிவாதத்துக்குச் சமாதானம், காரணம் எதுவும் சொல்ல உறுதியாக மறுத்து விட்டான். "இஷ்டமில்லையென்றால் விட்டு விடுங்கள்! அவ்வளவுதான்!"
இவ்விஷயத்தில் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்குத் தான் சிறிதும் பொறுப்பாளியல்லவென்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. கைலாஸம் திருச்சியில் படித்துக் கொண்டிருக்கையில் பெருமாள்புதூரிலிருந்த தன்னுடைய தாய்மாமன் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தக் காலங்களில் சில சமயம் எதிர் வீட்டிலிருந்த உமாவைப் பார்த்திருந்தான். ஆகவே, கலியாண பேச்சு வந்தபோது பெண் பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டான். பெண்ணின் தகப்பனார் படித்த மனிதர். ரிடயர் ஆன உத்தியோகஸ்தர். அத்துடன் தியாஸாபிகல் ஸொஸைடியைச் சேர்ந்தவர். ஆகவே, அவர் கட்டாயம் தம்முடைய பெண்ணின் சம்மதத்தைக் கேட்டிருப்பாரென்று எதிர்பார்த்தான். அவர் அப்படிச் செய்யவில்லையென்றால், இவனா அதற்கு ஜவாப்தாரி?
இரவுக்கிரவே திரும்பி ஊருக்குப் போன கைலாஸம் அங்கே ஒரு நாள் கூடத் தங்கவில்லை. ஒருவரிடமும் விவரம் தெரிவிக்காமல் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து, தன்னுடைய திறமை காரணமாக, கூடிய சீக்கிரம் மானேஜர் பதவிக்கு வந்தான். ஏராளமாகப் பணம் சம்பாதித்தான். இடையில் சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்து காங்கிரஸ் கூட்டங்களில் புகழடைந்தான். எல்லா வகையிலும் அவனுடைய வாழ்க்கை திருப்திகரமாயிருந்ததென்றே சொல்லவேண்டும். ஆயினும் மனச்சாந்தி மட்டும் ஏற்படவில்லை. மாப்பிள்ளை அழைத்த அன்று இரவில் நடந்த எதிர்பாராத நாடகம் மனத்தை விட்டு அகலவேயில்லை. தன்னுடைய கேள்விக்குப் பதிலாக, 'ஆமாம்' என்று தழுதழுத்த குரலில் கூறிய உமாவின் உருவம் அவன் மனக் கண்முன் அடிக்கடி தோன்றி வந்தது. வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, இதை மறக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கைகூடவில்லை. ஞாபகம் வந்த போதெல்லாம், "ஐயோ! இதென்ன ஜன்மம்?" என்று வாழ்க்கையிலேயே வெறுப்புண்டாகும்.
பம்பாய் சென்று பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு, சொந்த நாட்டைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று ஆவல் உண்டாயிற்று. ஆறு மாதம் லீவு வாங்கிக் கொண்டு அங்கிருந்தே மோட்டாரில் யாத்திரை கிளம்பினான். திருச்சிக்கு வந்த போது, ஏனோ பெருமாள்புதூருக்குப் போகவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எவ்வளவுதான் முயன்றும் அந்த ஆவலை அடக்குவதற்கு முடியவேயில்லை.
ஆனால் பெருமாள்புதூருக்குக் கிட்டத்தட்ட வந்த விட்ட போது மனக்குழப்பம் உண்டாயிற்று. அவள் இந்த ஊரில் இருக்கப் போவதில்லை. இருந்தாலும், யாரோ ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பாள். நாலைந்து குழந்தைகள் பிறப்பதற்குக் காலமாயிற்று. சீ! இந்த நினைவே சகிக்க முடியவில்லை! நேரில் பார்த்து எப்படி சகிப்பது?
மேலும், அங்கே போய் யாரையாவது விசாரிக்க வேண்டும்! தான் இன்னான் என்று சொல்ல வேண்டியிருக்குமல்லவா? பழைய கதையை உடனே எல்லாரும் சொல்ல ஆரம்பிப்பார்கள். காரணம் கேட்பார்கள். வேண்டாம், வேண்டாம்! பேசாமல் திரும்பிப் போவதுதான் சரி.
இவ்வாறு தீர்மானித்து மேல் துணியை உதறி எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். தலையிலே "படார்!" என்று ஓர் அடி; கழுத்தில் "கும்" என்று ஒரு குத்து. கைலாஸம் தலைக்குப்புறக் கீழே விழுந்தான்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைதியின் பிரார்த்தனை - Kaithiyin Pirarthanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கைலாஸம், அவன், தான், தன்னுடைய, அங்கே, பெண், சென்று, பெண்ணின், கொண்டு, வேண்டும், சென்றான், சொல்ல, பிறகு, வந்த, வந்து, மேல், அவனுடைய, எனக்கு, போது, செய்து, மோட்டார், கடிதத்தை, இந்தக், அந்தப், அவர், நான், தகப்பனாரிடம், அவள், போல், அடிக்கடி, அந்தத், இருந்த, எல்லாரும், வந்தான், பார்த்தான், ஊர்வலம், இல்லை, விட்டு, வந்தது, உண்டாயிற்று