காரிருளில் ஒரு மின்னல்
2
நாங்கள் கிளம்பும் போது சரியாக இரவு மணி
பன்னிரண்டு. இருட்டென்றால் இப்படி அப்படியான இருட்டல்ல. கன்னங்கரிய காரிருள்.
வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குமுறிக் கொண்டிருந்தன. சாலையில் இருபுறமும்
மரங்கள் அடர்த்தியாயிருந்தபடியால், அவ்வப்போது இருளை வெட்டிக் கொண்டு
தோன்றிய மின்னலொளியும் அந்தச் சாலைக்குள் புகுவதற்கு முயன்று தோல்வியடைந்து
திரும்பிச் செல்வதுபோல் காணப்பட்டது.
சாலையின் ஒரு புறத்தில் வயல்கள். மற்றொரு புறம் வாய்க்கால். வயல்களில் மழை ஜலம் நிரம்பி, சாலை மீது வழிந்து போய்க் கொண்டிருந்தது. இதனால் சாலையிலுள்ள குண்டு குழிகள், மரங்களின் வேர்கள் ஒன்றையும் தெரிந்து கொள்வதற்கில்லை. வண்டி திடீர் திடீரென்று சாலையின் குழிகளில் விழுந்து எழுந்தது. கால் மணி நேரத்திற்குள் நானும் சாம்புவும் இருநூறு தடவை ஒருவரோடொருவர் முட்டிக் கொண்டோம். அங்கங்கே வாய்க்கால் மதகுகள் வேறு வந்து கொண்டிருந்தன.
மதகுகளின் ஏற்ற இறக்கங்களில் வண்டி ஏறி இறங்கிய போது, சறுக்கலினால் டிரைவர் ஒரு பக்கம் திரும்பினால், வண்டி இன்னொரு பக்கம் திரும்பிற்று. எந்த நிமிஷத்தில் வண்டி வாய்க்காலில் இறங்கிவிடுமோ, அல்லது மரத்தில் முட்டிக் கொள்ளுமோ என்று திகிலாய்த்தான் இருந்தது.
இடி முழக்கமோ சொல்லவேண்டியதில்லை. எந்த நிமிஷமும் வானம் பிளந்து துகள் துகளாகிவிடுமென்று தோன்றியது. ஒவ்வொரு பேரிடி இடித்தபோதும் அண்டகடாகங்களுடனே எங்கள் மண்டைகளும் அதிர்ந்தன.
சாம்புவின் நெஞ்சைத் தொட்டுப் பார்த்து, "ஏண்டா உனக்கு இருதயம் இப்படி ரோடு என்ஜின் மாதிரி அடித்துக் கொள்கிறது?" என்று கேட்டேன்.
"ஸாமி! என் மாமனாருக்கு மட்டும் ஒரு பாடம் கற்பித்து விட்டேனானால், அப்புறம் இந்த உயிர் எனக்கு லட்சியமில்லை" என்றான்.
இச்சமயம் வண்டி ஒரு குழியில், தொபுகடீரென்று விழுந்தது; எங்கள் தலைகள் முட்டிக் கொண்டன. வண்டி எழுந்திருக்கும் போது இன்னொரு முட்டலுக்கு நான் தயாரானேன். ஆனால் ஏமாந்து போனேன். வண்டி எழுந்திருக்கவில்லை. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த மோட்டார் என்ஜின் ஓர் அலறல் அலறிவிட்டு அப்புறம் மௌனம் சாதிக்கத் தொடங்கியது.
டிரைவரும், அவனுக்குத் துணையாக வந்தவனும் கீழே இறங்கினார்கள். இரண்டு மூன்று தடவை மோட்டார் வண்டியைப் பிரதக்ஷிணம் செய்தார்கள்.
"ஏண்டா! உன் புத்தியை எங்கேடா அடகு வைத்து விட்டு வந்தாய்?" என்று டிரைவர் தன் சிநேகிதனைப் பார்த்துக் கேட்டான்.
"ஏன்? செட்டியார் கடையிலேதான் அடகு வைத்துவிட்டு வந்தேன்" என்றான் அவன் சிநேகிதன்.
எனக்கும் சாம்புவுக்கும் கோபம் அசாத்தியமாய் வந்தது. "நீங்கள் சண்டை போடுவது அப்புறம் இருக்கட்டும் அப்பா! வண்டி என்ன சமாசாரம்?" என்ரு கேட்டேன்.
"வண்டி நின்னுடுத்துங்க!" என்றான் டிரைவர்.
"அதுதான் தெரிகிறதே! அதைக் கிளப்புவதற்கு என்ன வழி?" என்றான் சாம்பு.
"இந்த முட்டாளை நீங்களே கேளுங்க. இராத்திரியிலே கிளம்பினால் கையிலே லாந்தர் கொண்டு வரவேணுமென்று எத்தனை தடவை அழுதிருக்கிறேன்" என்றான் டிரைவர்.
"நான் தான் முட்டாளாச்சே. புத்திசாலியாயிருக்கிறவங்க கிளம்புகிற போது ஞாபகப்படுத்துகிறதுதானே!" என்றான் டிரைவரின் சிநேகிதன்.
"இல்லைங்க, ஸார்! இந்த ஆளுக்கு ஊரிலே தீவட்டித் தடியன் என்று பெயர். பேருக்குத் தகுந்தபடி இந்தச் சமயம் தீவட்டி போடவேண்டுமல்லவா? பின்னே இவன் தீவட்டித் தடியனாயிருப்பதில் என்ன பிரயோஜனம்?" என்றான் டிரைவர்.
அந்தச் சமயத்தில் கோபித்துக் கொள்வதால் பிரயோஜனமில்லையென்று அறிந்த நான், "சரிதான்; அப்பா மேலே நடக்க வேண்டியதைப் பாருங்கள்" என்று சாந்தமாகச் சொன்னேன்.
"அதுதான் நானும் யோசிக்கிறேன்" என்று கூறிய டிரைவர் ஏதோ சட்டென்று நினைவு வந்தவன் போல், "ஏன் ஸார்! உங்களிடத்தில் டார்ச் லைட் இருக்குமே?" என்றான்.
நாங்கள் இல்லையென்று சொன்னதும், மிகவும் ஏமாற்றமடைந்தவனாய், "இவ்வளவுதானா! உங்கள் மாதிரி இராத்திரிப் பயணம் கிளம்புகிறவங்க எப்போதும் கையிலே டார்ச் லைட் வைத்துக் கொள்ளவேணும், ஸார்!" என்றான்.
"அட போக்கிரி படவா!" என்று மனத்திற்குள் திட்டினோம்.
டிரைவரிடமும் அவனுடைய சிநேகிதனிடமுமிருந்த இரண்டு நெருப்புப் பெட்டிகளையும், நாங்கள் கொண்டு வந்திருந்த மத்தாப்புப் பெட்டிகளில் ஐந்தாறையும் காலி செய்தும் பிரயோஜனப்படாமல் போகவே, "அடமடையா ஓடுடா! இந்த ஐயாக்களுக்குத்தான் அவசரமில்லையென்றால் நமக்குக் கூடவா அவசரமில்லை? காலையில் தீபாவளிக்கு வீடு போய்ச் சேர வேண்டாமா? ஓடிப்போய் இப்போது நாம் தாண்டி வந்தோமே, அந்த ஊரில் யார் வீட்டிலாவது கதவைத் தட்டி ஒரு லாந்தர் வாங்கிக் கொண்டு வா!" என்று டிரைவர் அந்தத் தீவட்டித் தடியனை விரட்டினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரிருளில் ஒரு மின்னல் - Kaarirulil Oru Minnal - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றான், வண்டி, டிரைவர், கொண்டு, போது, என்ன, ஸார், தீவட்டித், நான், அப்புறம், தடவை, முட்டிக், நாங்கள்