இடிந்த கோட்டை
3
குமாரஸ்வாமி சொன்ன கதையை ஏட்டில் படிக்கும்
போது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறதோ, என்னவோ, தெரியாது. ஆனால் எனக்கென்னவோ
அவன் சொல்லி வந்த போது எல்லாம் நிஜமாகவே தோன்றிக் கொண்டிருந்தது. அந்த
இடமும் அந்த நேரமும் சேர்ந்து அப்படி என்னை மயக்கியிருக்க வேண்டும்.
தான் மூர்ச்சையடைந்த கட்டத்தில் குமாரஸ்வாமி கதையை நிறுத்தி விட்டு எழுந்திருந்து
நின்றான். நாற்புறமும் ஒரு தடவை சுற்றிப் பார்த்தான். பிறகு, மறுபடியும்
உட்கார்ந்தான்.
"அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆவலுடன் கேட்டேன்.
குமாரஸ்வாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினான்.
"எனக்கு மூர்ச்சை தெளிந்தபோது, ஒரு பெண்ணின் மடியில் நான் தலையை வைத்துப் படுத்திருப்பதையும் அவள் தன் மென்மையான கரங்களால் என் நெற்றியைத் தடவிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். உடனே துள்ளி எழுந்து சற்று விலகி உட்கார்ந்தேன்.
"குமார்! ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்? என்னை ஞாபகம் இல்லையா? நான் தான் உங்கள் மாலதி," என்று அவள் கூறியது இனிய சங்கீதம் போல என் செவியில் விழுந்தது.
மாலதி! மாலதி! - எவ்வளவு இனிமையான பெயர்! என் மனதுக்குள் நாலு தடவை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
'நினைத்துப் பாருங்கள், குமார்! இதே மாதிரி பால் போல் நிலவு எரித்த ஒரு பௌர்ணமியில், இதே இடத்தில் நீங்கள் என்னிடம் விடைபெற்றுக் கொள்ளவில்லையா? என்னை மறக்காதீர்கள் என்று நான் சொன்னேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன் என்று என் கையில் அடித்து, சத்தியம் செய்து கொடுத்தீர்கள். ஞாபகம் இல்லையா?' என்று மாலதி கேட்டாள்.
நான் மூர்ச்சையடைவதற்கு முன்பு இந்தக் காட்சிதான் புகையுண்ட சித்திரம்போல் என் மனக் கண்ணின் முன் தோன்றிற்று என்று சொன்னேனல்லவா? அவளும் அதைச் சொன்னது, அது வெறும் தோற்றமல்ல - உண்மையில் நடந்த சம்பவம் என்பது எனக்கு நிச்சயமாயிற்று.
மாலதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். கங்கு கரையில்லாத பிரேமையுடன் என்னை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய விரிந்த கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் கண்டேன். என் உள்ளம் உருகிற்று. அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு 'ஞாபகம் இருக்கிறது. மாலதி! அந்த வாக்குறுதியை இன்னொரு தடவையும் அளிக்கிறேன். உன்னை ஏழேழு ஜன்மத்திலும் மறக்கமாட்டேன்,' என்றேன்.
பிறகு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய பூர்வ சரித்திரத்தை ஞாபகப்படுத்தினாள். அவள் சொல்லச் சொல்ல, முந்நூறு வருஷத்துக்கு முந்திய அந்தச் சம்பவங்கள் எல்லாம், தெளிவில்லாத ஒரு பழைய கனவைப் போல் எனக்கு ஞாபகம் வந்தன."
குமாரஸ்வாமி இங்கே நிறுத்தி, "இந்தச் செஞ்சிக் கோட்டையின் பூர்வ சரித்திரத்தைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான்.
"இங்கே தேசிங்குராஜா என்று ஒருவன் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறொன்றும் தெரியாது," என்றேன்.
தேசிங்குராஜன் கதை வெறும் கட்டுக்கதை. அதற்குச் சரித்திரத்தில் ஆதாரம் கிடையாது. நானோ உண்மைச் சம்பவத்தைக் கூறப் போகிறேன். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்தச் செஞ்சியில் பிரிதிவிசிங் என்னும் ராஜா இருந்தார். அவர் வீர ராஜபுத்திர வம்சத்தவர். அவருடைய முன்னோர் ஒருவர் டில்லியில் பட்டாணியர் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க மனமில்லாமல் தெற்கு நோக்கி வந்து இந்தக் கோட்டையைக் கட்டிக் கொண்டாராம். இந்தக் கோட்டையையும், இதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையும் அந்த வம்சத்தார் சுதந்திரமாக ஆண்டு வந்தார்கள். மொகலாய சைன்யங்களால் பலமுறை முயன்றும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. பிரிதிவிசிங்கும் சுதந்திர ராஜாவாக இந்தச் சிறு ராஜ்யத்தை ஆண்டு வந்தார்.
அந்த ராஜாவுக்கு ஒரு புத்திரி இருந்தாள். அவளுடைய பெயர், மாலதி. குழந்தைப் பிராயத்தில் அவளுக்குக் கல்வி கற்பித்த தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவனுக்குச் சுகுமாரன் என்று பெயர். குழந்தைகளாய் இருந்தபோது இவர்கள் இருவரும் ஒருங்கே கல்வி பயின்றார்கள். சுகுமாரனுக்குச் சங்கீதத்தில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் வயதானதும் தேச யாத்திரை செய்து சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சி பெற்று வருவதற்காகக் கிளம்பினான். தஞ்சாவூரிலும், விஜய நகரத்திலும் கொஞ்ச காலம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டான். பிறகு மகாராஷ்டிரத்துக்குப் போய் அப்போது பிரசித்தியாகிக் கொண்டிருந்த அபங்கங்கள் கற்றுக் கொண்டான். அங்கிருந்து டில்லிக்குப் போய் பெயர் பெற்ற தான்சேனுடைய சிஷ்யர்களிடம் இந்துஸ்தானி சங்கீதமும் பயின்றான்.
அவன் திரும்பி வந்ததும் செஞ்சி ராஜசபையில் அவனுடைய சங்கீதக் கச்சேரி நடந்தது. ராஜகுமாரி மாலதியும் திரைபோட்ட மேன்மாடத்திலிருந்து தன் பால்ய நண்பனுடைய சங்கிதத்தைக் கேட்டாள். இது சுகுமாரனுக்கும் தெரிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அன்று அவன் அற்புதமாய்ப் பாடினான். அவனுடைய பாட்டு கேவலம் பூலோகத்துச் சங்கீதமாக இல்லை; நாரதர் தும்புறு முதலிய தெய்வலோகத்து இசைவாணர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று நினைக்கும்படி, தேவகானமாகவே பொழிந்தான். அந்தக் கானத்தைக் கேட்டு சபையோர் அனைவரும் பரவசமானார்கள். ஆனால், எல்லாரிலும் அதிகமாக அந்தக் கானத்தின் இன்பத்தை அனுபவித்தவள் ராஜகுமாரி மாலதிதான். அவள் அந்தத் தெய்வ கீதத்தின் இன்பத்துக்குத் தன்னுடைய இருதயத்தையே பரிசாகக் கொடுத்தாள்.
சில நாள்களுக்குப் பிறகு சுகுமாரனிடம் தான் சங்கீதம் கற்றுக் கொள்ள விரும்புவதாக மாலதி தகப்பனாரிடம் தெரிவித்தாள். அந்தக் காலத்தில் ராஜகன்னிகைகள் கோஷா அனுசரிப்பார்கள். ஆனால், உபாத்தியாயர் மகன் தானே என்ற எண்ணத்தினாலும் தன்னுடைய அருமை புதல்வியின் விருப்பத்துக்கு மாறு சொல்ல மனமின்றியும் ராஜா சம்மதித்தார்.
மாலதி, ராஜபுத்திர வம்சத்தினள் ஆனதால் அவளுக்கு இயற்கையாக வடநாட்டுச் சங்கீதத்தில் தான் ஆசை இருந்தது. சுகுமாரனிடம் அவள் இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டு வந்தாள். பரஸ்பரம் அவர்களுடைய காதலும் வளர்ந்து வந்தது. இந்தக் காதல் விபரீதத்தில் தான் முடியும் என்று சுகுமாரன் பல தடவை எடுத்துச் சொன்னான். ஆனால் மாலதி கேட்கவில்லை. தான் சுகுமாரனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், தகப்பனாரை எப்படியாவது அதற்குச் சம்மதிக்கச் செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டு வந்தாள். இப்படியிருக்கையில், எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய ஆபத்து வந்தது. செஞ்சி ராஜாக்களை ஆற்காட்டு நவாபுகள் வெகு காலமாகச் சிநேகிதர்களாக நடத்தி வந்தார்கள். வடக்கேயிருந்து வந்த மொகலாய சைனியங்களுடன் அவர்கள் சண்டையிட்ட காலங்களில் செஞ்சி ராஜாக்களின் உதவியைக் கோரிப் பெற்றார்கள். அவர்களிடம் கப்பம் வாங்குவது கிடையாது.
அப்போது ஆற்காட்டில் நவாபாய் இருந்தவர் மாலதியின் ரூபலாவண்யங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். டில்லி பாதுஷாக்கள் சிலர் ராஜபுத்திர கன்னிகைகளை மணந்திருக்கும் விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைப் போல் தாமும் ஒரு ராஜபுத்திர கன்னிகையை மணக்க வேண்டுமென்று நவாப் தீர்மானித்து, பிரிதிவிசிங்குக்கும் தூது அனுப்பினார். பிரிதிவிசிங்குக்கும் தமக்கும் உள்ள சிநேக பாந்தவ்யத்தை விவாக சம்பந்தத்தின் மூலம் நிரந்தரமாகச் செய்து கொள்ள விரும்புவதாய் அவர் சொல்லி அனுப்பினார். பிரிதிவிசிங் இஷ்டப்பட்டு அவ்விதம் செய்யாவிட்டால், பின்னால் கட்டாயத்தின் மேல் செய்ய வேண்டியதாயிருக்குமென்றும் எச்சரிக்கை செய்தார். செஞ்சியின் மேல் படையெடுப்பதற்கு ஒரு பெரிய சைனியம் தயாராயிருப்பதாகவும் தூதன் தெரியப்படுத்தினான்.
இந்தச் செய்தி கேட்டதும் பிரிதிவிசிங் அளவிலாத கோபங்கொண்டு துடிதுடித்தார். மந்திராலோசனை சபை கூட்டி, யோசனை கேட்டார். சபையில் யாரும் யோசனை சொல்லத் துணியவில்லை. ராஜகுமாரியை நவாபுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தால் யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். முந்நூறு வீரர்களை வைத்துக் கொண்டு முப்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய சைனியத்தோடு சண்டை போட முடியுமா? 'நவாபுக்கு உங்கள் பெண்ணைக் கொடுங்கள்' என்று சொல்லவும் யாருக்கும் தைரியம் வரவில்லை.
இந்த நிலைமையில், உபாத்தியாயரின் புதல்வன் சுகுமாரன் எழுந்து யோசனை கூற முன் வந்தான். நவாபின் கோரிக்கையை மறுத்து விட வேண்டியது தான் என்று அவன் தைரியமாய்க் கூறினான். 'நவாப் படையெடுத்து வந்தால் வரட்டும். இந்தக் கோட்டைக்குள் இருந்து கொண்டு குறைந்தது ஆறு மாதம் நவாபின் படைகளை எதிர்த்து நிற்கலாம். மகாராஷ்டிரத்தில் சிவாஜி மகாராஜா இந்து தர்மத்தை ரக்ஷிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். அவருக்குச் செய்தி அனுப்பினால் கட்டாயம் நம்முடைய உதவிக்கு வருவார். நானே போய் அழைத்து வருகிறேன்' என்றான். பிரிதிவிசிங் மிகவும் சந்தோஷமடைந்து சுகுமாரனை மகாராஷ்டிரத்துக்கு அனுப்ப இசைந்தார்.
மாசிமகத்துப் பௌர்ணமியன்று இரவு மாலதியைச் சுகுமாரன் சந்தித்து, தான் சிவாஜி மகாராஜாவிடம் தூது போகப் போவதைத் தெரிவித்து விடை கேட்டான். இந்தக் காரியத்தைத் தான் செய்து முடித்தால், மகாராஜா மன மகிழ்ந்து மாலதியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க இசையலாம் என்றும் கூறினான். மாலதிக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனாலும் சுகுமாரனைப் பிரிவது அவளுக்குப் பெருந்துன்பத்தையளித்தது. அப்பொழுது தான் "என்னை மறந்துவிடாதீர்கள்" என்று அவள் மனமுருகிக் கூறினாள். சுகுமாரனும் "ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
சுகுமாரன் போய்ச் சில நாளைக்கெல்லாம் பிரிதிவிசிங்குக்கு மற்ற மந்திரிகள் துர்போதனை செய்து அவருடைய மன உறுதியைக் குலைத்தார்கள். 'சிவாஜியாவது இங்கே வருவதாவது; நடக்காத காரியம். சுகுமாரன் பைத்தியக்காரன்; உலகம் தெரியாதவன்; ஏதோ போயிருக்கிறான். அவன் சிவாஜியைப் பார்ப்பதே நிச்சயமில்லை; நவாபுடன் சமாதானம் செய்து கொள்வதே நலம்,' என்றார்கள்.
மாலதியும் ஒரு தவறு செய்தாள். ஒரு நாள் தந்தையிடம் பிரியமாய்ப் பேசிக் கொண்டிருந்த போது சுகுமாரனிடம் தான் கொண்டிருந்த காதலைப் பற்றிச் சொல்லி, தன்னை அவனுக்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். இதனால் பிரிதிவிசிங்கின் மனம் அடியோடு மாறிவிட்டது. 'சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வியாஜத்தில் இப்படியா என் பெண்ணின் மனத்தை அந்தப்பாவி வசப்படுத்தி விட்டான்!' என்ற எண்ணம் அவருக்குப் பெரிதும் ஆத்திர மூட்டியது. அதைவிட, நவாபுக்குக் கொடுப்பதே நலம் என்று எண்ணினார். பெரிய பெரிய ராஜபுத்திர மன்னர்கள் ஏற்கெனவே மொகலாயர்களுக்குப் பெண் கொடுத்து வழி காட்டியிருக்கவில்லையா? நாம் மட்டும் கொடுத்தால் என்ன தப்பு? நம்முடைய பெண்ணும் - அவளுடைய அழகுக்கும் சாமர்த்தியத்திற்கும் ஒரு நூர்ஜஹானைப் போல் ஆகலாமல்லவா?
இப்படியெல்லாம் நினைத்தார் அந்தப் பேராசை பிடித்தக் கிழவர். தம் குமாரியின் மன விருப்பத்தை அவர் ஒரு பெரிய காரியமாகவே கருதவில்லை. நவாபுக்குத் தம்முடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்.
மாலதிக்கு இது தெரிந்தபோது இடியுண்ட நாகத்தைப் போல் துடிதுடித்தாள். 'ஏழு ஜன்மத்திலும் தன்னை மறப்பதில்லை' என்று வாக்களித்துவிட்டுப் போன சுகுமாரனுக்குத் துரோகம் செய்து, இன்னொருவனை மணப்பதென்பது அவளால் நினைக்கவே முடியாத காரியமாயிருந்தது. தகப்பனாரிடம் எவ்வளவோ சொல்லி மன்றாடிப் பார்த்தாள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியாக, ஒரு நாள் இரவு, அரண்மனையிலிருந்து யாரும் அறியாமல் எழுந்து சென்று, இந்தக் கோட்டையின் அதிதேவதையான காளி கோயிலுக்குச் சென்றாள். அந்தக் கோயிலுக்கு அருகில் மிக ஆழமான சுனையொன்று இருக்கிறது. அம்மனைத் தியானித்துக் கொண்டே அந்தச் சுனையில் விழுந்து உயிர் துறந்தாள்.
பிரிதிவிசிங்கிற்கு இந்த விபத்தினால் பைத்தியம் பிடித்து விட்டது. அவருக்கு வேறு புதல்வர்கள் இல்லை. எனவே, கோட்டையை இலேசாக ஆற்காட்டு நவாபு கைப்பற்றிக் கொண்டார்.
சிவாஜியைக் காணச் சென்ற சுகுமாரன், எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாகி கடைசியில் அந்த மகாவீரரை நேரில் கண்டான். அவனுடைய வேண்டுகோளை சிவாஜியினால் நிராகரிக்க முடியவில்லை. அவருக்கும் வெகு காலமாகத் தெற்கு நோக்கி வரவேண்டுமென்ற எண்ணமிருந்தபடியால், ஒரு பெரிய சைனியத்துடன் கிளம்பி வந்தார். கோட்டை ஒரே நாளில் சிவாஜி வசமாயிற்று. ஆனால் சுகுமாரன் கோட்டைக்குள் வரவில்லை. மாலதியின் கதியை அறிந்ததும், அவனுக்கு உலக வாழ்க்கையில் வைராக்கியம் உண்டாகி விட்டது. கையில் சுரைக்காய்த் தம்பூர் ஏந்திய வண்ணம், அவன் உலக அநித்யத்தைப் பற்றியும் காதலின் மேன்மையைப் பற்றியும் பாடிக் கொண்டு தேச சஞ்சாரம் செய்யப் போய் விட்டான்.
அந்தச் சுகுமாரன் தான் நான். ஆறு ஜன்மத்துக்குப் பிறகு ஏழாவது ஜன்மத்தில் இங்கு வந்து சேர்ந்தேன்.
சரி, ரொம்ப நேரமாகி விட்டதே! நீங்கள் போக வேண்டாமா? உங்கல் சிநேகிதர்கள் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?" என்றான் குமாரஸ்வாமி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடிந்த கோட்டை - Idintha Kottai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தான், செய்து, மாலதி, சுகுமாரன், அவள், இந்தக், அந்த, அவன், கொண்டு, பெரிய, போல், சங்கீதம், நான், என்னை, ராஜபுத்திர, பிறகு, குமாரஸ்வாமி, போய், அவளுடைய, பிரிதிவிசிங், இந்தச், அந்தக், பெயர், சொல்லி, ஜன்மத்திலும், ஞாபகம், கற்றுக், சுகுமாரனிடம், சிவாஜி, கொடுக்க, யோசனை, செஞ்சி, அவனுடைய, கொண்டிருந்த, மாலதியின், எழுந்து, எனக்கு, தடவை, போது, ஏழேழு, முந்நூறு, அவர், இங்கே, அந்தச், சங்கீதத்தில்