கோவிந்தனும் வீரப்பனும்
கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள்.
வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.
கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை; வாரம் ஆறரை ரூபாய் சம்பளம். வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம். மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக் கடை உண்டு. அவன் அந்தக் கடை வழியாகத் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். கோவிந்தன் ஆலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலும் கள்ளுக்கடை, சாராயக் கடை, பீர்க்கடை எல்லாம் உண்டு. ஆனால் அவன் குறுக்கு வழியாகச் சந்து பொந்துகளில் புகுந்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமைச் சொல்கிறேன் கேளுங்கள்.
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள். ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள். நடராஜன் திம், திம் என்று குதித்துக் கொண்டு "அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும்!" என்று கூச்சலிட்டான்.
பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். பின் வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்:-
ரூ. |
அ. |
பை |
|
வீட்டு வாடகை |
0 |
12 |
0 |
அரிசி |
1 |
8 |
0 |
பருப்பு, உப்பு, புளி சாமான்கள் |
0 |
8 |
0 |
மோரும், நெய்யும் |
0 |
8 |
0 |
எண்ணெய் |
0 |
4 |
0 |
காய்கறி முதலிய சில்லறை செலவுகள் |
0 |
8 |
0 |
---------------- | |||
4 |
0 |
0 |
|
---------------- |
வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ. 1-12-0 கையில் இருந்தது.
"சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!" என்றான் கோவிந்தன்.
சுந்தரம் மகனுக்குச் சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டாள். பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான்.
கடற்கரையில் காற்றுவாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது. கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அருபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். நடராஜன் குதித்து விளையாடினான். அலை மோதிக்கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப் பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டாயிருந்தது.
இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான். நடராஜன் ஓடிச் சென்று அவனை அழைத்து வந்தான். அரையணாவுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோவிந்தனும் வீரப்பனும் - Govindanum Veerappanum - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், கோவிந்தன், வீட்டுக்கு, ரூபாய், போட்டு, பெரிய, நடராஜன், கொண்டு, கோவிந்தனும், உண்டு, சம்பளம்