கவர்னர் வண்டி
1
மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின்
பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன்
சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும்
மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த
புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன.
பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான்.
அஞ்சலை "கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்" என்றாள்.
தலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். "நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது" என்றான்.
"ஐயோ! இதென்ன அநியாயம்? எங்கே போக வேண்டும்? அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்" என்றாள் அவன் மனைவி மதுரம்மா.
"நான் என்ன செய்யட்டும்? யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி. ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்" என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும்? எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா? ஐயோ! வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே? நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது" என்றாள் மதுரம்.
"இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்" என்றான் முத்து.
இதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா." என்றாள்.
சின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்" என்றான்.
"பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும்? உனக்குப் பிடிக்குமே? நீ போகாதிருந்து விட்டாலென்ன? உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்" என்றாள் மதுரம்.
"ஐயோ! தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா? இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள்? சர்க்கார் உத்தியோகம் இலேசா?" என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு.
பிறகு, மத்தாப்புப் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கவர்னர் வண்டி - Governor Vandi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வேண்டும், என்றாள், முத்து, கொண்டு, என்றான், வந்து, அப்பா, வாங்கி, இராத்திரி, சர்க்கார், தலையாரி, காவல், பிடித்துக்