சிரஞ்சீவிக் கதை
இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் முதலியார்
சட்டென்று எழுந்திருந்து, நிமிர்ந்து உட்கார்ந்து, ஒழுங்கான வாழ்க்கைக்குரிய
திட்டங்களை காகிதத்தில் எழுதத் தொடங்கினார்:
1. ஆகார நியமம் - விடமின் - ஏ.பி.ஸி.டி.இ. கீரை - (ரொம்ப முக்கியம்) - டொமாடோ (பச்சை) - இராத்திரி கோதுமை ரொட்டி.
2. தொட்டி ஸ்நானம் (தினம் அரைமணிக்குக் குறையாமல்)
3. யோகாஸனம் - பத்மாஸனம், சிரஸாஸனம், சர்வாங்காஸனம். (முதலில் எது ஆரம்பிக்கலாம்?)
4. பிரணாயாமம் (பூரகம் எட்டு, கும்பகம் ஆறு, ரேசகம் பத்து)
5. தேகாப்பியாசம் (பத்து தண்டால், பதினைந்து பஸ்கி. வாரத்துக்கு இரண்டு தண்டாலும் மூன்று பஸ்கியும் அதிகமாக்கலாம்.) மாலையில் கடற்கரை காற்று (மிக மிக அவசியம்)
6. மருந்து - மகரத்வஜம், சியவனப்ராஸம் (அவசியந்தானா?)
ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார் புத்தகம் படித்து வீணாகக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது கிடையாது என்று சொல்லியிருக்கிறேன். தேகாரோக்கியத்தைப் பற்றி புத்தகங்கள் மட்டும் இதற்கு விலக்கு. அவருடைய பழைய அலமாரியில் இருந்த சுமார் நூறு புத்தகங்களும் தேகத்தைப் பற்றியவை தான். இயற்கை வைத்தியம் சம்பந்தமாக, டாக்டர் கூன் என்னும் ஜெர்மானியர் புத்தகம் முதல் புதுக்கோட்டை லக்ஷ்மண சர்மா புத்தகம் வரையில் அவர் அலமாரியில் இருந்தன. மருந்து வைத்தியம் சம்பந்தமாக மணிசங்கர் கோவிந்தஜியின் 'காம சாஸ்திரம்' முதல், வேங்கடரமணா டிஸ்பென்ஸரி மருந்து கேட்லாக் வரையில் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இன்னும் யோகாஸனங்கள், தேகாப்பியாச முறைகள், மனோ சிகிச்சை முறைகள், மெஸ்மெரிஸ ஹிப்னாடிஸ வித்தைகள் ஆகியவற்றைப் பற்றிய புத்தகங்கங்களும் அவரிடம் இருந்தன.
முதலியாருக்கு முப்பதாவது வயதிலேயே இந்த மாதிரி பிரமை ஏற்பட்டது. அப்போதிருந்து ஏதாவது ஒரு புதிய புத்தகம் ஒரு புதிய சிகிச்சை முறையைப் பற்றித் தெரிய வந்ததும் அதை உடனே அனுஷ்டிக்கத் தொடங்குவார். ஆனால் எல்லாம் நாலைந்து நாளைக்குத்தான்; பிறகு ஏதாவது இடையூறு வரும். அசிரத்தை ஏற்பட்டுவிடும். இவ்வாறு வருஷத்திற்கு நாலைந்து தடவை அவர் 'ஒழுங்குபட்ட வாழ்வு' ஆரம்பித்து, சில தினங்களில் விட்டுவிடுவது வழக்கம்.
இந்தத் தடவை அப்படிச் செய்வதில்லையென்று மார்க்கண்ட முதலியார் திடமாக உறுதி செய்து கொண்டார். இன்றுடன் ஐம்பது வயது பூர்த்தியாகிறது; அதாவது, புருஷாயுஸில் சரிபாதிதான். நாளைய தினம் ஐம்பத்தோராவது வயது பிறக்கிறது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டால் இன்னும் ஐம்பது வருஷம் உயிர் வாழலாம். நாளை முதல் எல்லாம் சரியாக நடத்தி வரவேண்டும்.
அப்போது முதலியாருக்கு ஓர் அருமையான யோசனை தோன்றிற்று. நாளை முதல் ஏன்? இன்றே ஏன் ஆரம்பிக்கக் கூடாது? நல்ல தீர்மானத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும்? பேஷ், அதுதான் சரி!
உடனே நாற்காலியிலிருந்து கீழே இறங்கித் தரையில் உட்கார்ந்தார். பத்மாஸனம் போடுவதற்காகக் கால்களை மடக்க முயன்றார். அதற்கு ஓர் இடையூறு ஏற்பட்டது. "அப்படியா சேதி, தம்பி! பொறு, பொறு! இன்னும் பத்து நாளில் உன்னை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறேன், பார்!" என்றார். இது அவர் தமது தொந்தியைப் பார்த்துச் சொன்னது. கால்களை மடக்கிப் பத்மாஸனம் போட இடையூறாயிருந்தது அவருடைய தொந்திதான்.
பிறகு, எழுந்திருந்து சுவரோரம் சென்று, சிரஸாஸனம் போட முயன்றார். தலையைக் கீழே வைத்து வெகு பிரயாசையுடன் கால்களை மேலே தூக்கிச் சுவர் மீது நிறுத்தினார். ஒரு நிமிஷம் கால்களைச் சுவரண்டையிலிருந்து நகர்த்தி, பக்க ஆதாரமின்றி நிற்க முயன்றார். தொபுகடீர் என்று கீழே விழுந்தார். முதுகிலே பளீர் என்று அடிபட்டது. அப்பாடா! அம்மாடி! சிரஸாஸனம் என்றால் இலேசில்லை.
இன்றைக்கு இவ்வளவு போதும். இப்போது என்ன செய்யலாம்? மணி பார்த்தார். ஆறு அடிக்கப் பத்து நிமிஷம் இருந்தது. சரி, கடற்கரைக்குப் போய் உலாவிவிட்டு வரலாம். அதில், ஆஸனம் போடுவதிலுள்ள கஷ்டங்கள் ஒன்றும் இல்லை - இப்படித் தீர்மானித்து, மேல் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.
*****
ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார் தமது தேகத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்காகத் தீவிர முயற்சி தொடங்கியிருந்த அதே காலத்தில் பாரத தேசத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடனே ஒரு பெரிய இயக்கம் ஆரம்பமாகியிருந்தது. அந்த இயக்கத்தை 'உப்பு சத்தியாகிரஹம்' என்றார்கள். அதை ஆரம்பித்த மகா புருஷரை ஒரு வாரத்திற்கு முன்பு தான் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருந்தார்கள். சென்ற இரண்டு மூன்று தினங்களாகச் சென்னையிலும் அப்பேரியக்கத்தின் எதிரொலி கேட்டுக் கொண்டிருந்தது.
முந்தாநாள், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் காந்தி குல்லா அணிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பத்துப் பேர் நாலு அடுப்பு மூட்டி, நாலு குடத்தில் கடல் நீரைக் கொண்டு வந்து அடுப்பு மீது வைத்துக் காய்ச்சினார்கள். இதை வேடிக்கை பார்க்க நூறு பேர் வந்து கூடினார்கள். குடங்களின் அடியில் அழுக்கும் குப்பையுமாகக் கன்னங்கரேலென்று கொஞ்சம் உப்பு தங்கியது. அதைத் தொண்டர்கள் அங்கே கூடியிருப்பவர்களுக்கு வினியோகித்தார்கள். அவர்கள் அதை ருசி பார்த்துவிட்டு, குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்த வாந்தியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு வீடு நோக்கி விரைந்து சென்றார்கள். தொண்டர்களோ,
'ஜெய பேரிகை கொட்டடா!'
என்று பாடிக்கொண்டு குதூகலத்துடன் விடுதிக்குச் சென்றார்கள்.
அன்றிரவு கவர்ன்மெண்ட் ஹவுஸில் ஓர் அந்தரங்கக் கூட்டம் நடந்தது. கவர்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போலீஸ் கமிஷனர், லா மெம்பர், ஹோம் மெம்பர் இவர்கள் கூடி ஆலோசித்தார்கள். "முளையிலேயே கிள்ளி விடவேண்டும்" என்று போலீஸ் இலாகா சொல்லிற்று. ஹோம் மெம்பரும் லா மெம்பரும், "நம் ஊரில் ஒன்றும் நடக்கவில்லையென்று பெயர் வாங்குவது தான் நமக்குக் கௌரவம்; நாம் சும்மா இருந்தால் இரண்டு நாளைக்குப் பிறகு தானே அடங்கிவிடும்" என்றார்கள். கவர்னரும் இவர்களுடைய அபிப்பிராயத்தையே ஆதரித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரஞ்சீவிக் கதை - Chiranjeevi Kadhai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவர், முதலியார், பத்து, கொண்டு, புத்தகம், செய்து, கால்களை, போலீஸ், முயன்றார், பிறகு, கீழே, தான், சிரஸாஸனம், பத்மாஸனம், இரண்டு, மருந்து, மார்க்கண்ட, இன்னும்