சின்னத்தம்பியும் திருடர்களும்
ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற
ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம்
சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.
அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- "குழந்தாய்! உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை" என்றாள்.
அந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் அறிவு.
சின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்று கேட்டான் வழிப்போக்கன்.
"பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா!" என்றான் சின்னத்தம்பி.
"அப்படியா? நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்" என்று வழிப்போக்கன் சொன்னான்.
சின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். "உன் பெயரென்ன?" என்று கேட்டான்.
"என் பெயர் சோம்பல்" என்றான் வழிப்போக்கன்.
"ஓகோ! உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.
திருடன் "இந்தா! பிடி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை.
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்று கேட்டான். "பட்டணத்துக்குப் போகிறேன்" என்றான் சின்னத்தம்பி.
"அப்படியா? சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்" என்றான் அம்மனிதன்.
"நீ யார்?" என்று கேட்டான் சின்னத்தம்பி.
"என்னைத் தெரியாது? நான் தான் வியாதி" என்று அம்மனிதன் கூறினான்.
"ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே! நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு" என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.
வியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான்.
மேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான்.
கடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்றான் திருடர் தலைவன்.
"பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்?" என்று சின்னத்தம்பி கேட்டான்.
"என் பெயர் மதுசாரம்" என்றான் திருடன்.
சின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- "இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா? எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்."
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சின்னத்தம்பியும் திருடர்களும் - Chinnathambiyum Thirudargalum - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சின்னத்தம்பி, என்றான், தம்பி, அவன், கேட்டான், பெயர், தாயார், போகிறேன், பட்டணத்துக்குப், திருடன், வியாதி, இவன், போகிறாய், கொண்டு, நல்ல, பணம், எங்கே, வழிப்போக்கன்