முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அமரர் கல்கியின் நூல்கள் » பவானி, பி. ஏ, பி. எல் » 6. சிரிப்பும் நெருப்பும்
பவானி, பி. ஏ, பி. எல் - 6. சிரிப்பும் நெருப்பும்
பவானி அன்று வெகு குதூகலத்துடனே வெளியே
கிளம்பினாள். பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் வரவில்லை யாதலால், தான்
இன்று வழக்கத்தைவிட அதிக தூரம் நடந்துவிட்டு வரலாமென அவள் எண்ணினாள்.
மலைப் பிரதேசங்களுக்குச் சென்றிருப்பவர்களுக்கு மலைப் பாதைகளில் நடப்பதன்
சுகமும் கஷ்டமும் தெரிந்திருக்கும். அநேகமாய் இரு புறமும் புதர்கள் அடர்ந்த
ஒற்றையடிப் பாதைகளிலேயே நடக்க வேண்டும். அந்தப் பாதைகளும் ஓயாமல் ஏறிக்
கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கும். சம தரை என்பது அநேகமாய் கிடையாது.
உஷ்ணப் பிரதேசங்களில் என்றால் அம்மாதிரி ஏறி இறங்கும் பாதைகளில் ஐந்து
நிமிஷம் நடந்தாலும் களைத்துப் போய் விடுவோம். ஆனால் குளிர்ந்த மலைப்
பிரதேசங்களில் எவ்வளவு நேரம் நடந்தாலும் சிரமம் தோன்றுவதில்லை.
பவானி சுமார் பத்து நிமிஷம் நடந்திருப்பாள். பக்கத்திலேயே எங்கேயோ இருந்து, "ஓ தெய்வமே!" என்று ஒரு துயரம் நிறைந்த தீனமான குரல் கேட்டது போல் இருந்தது. பவானியின் இருதயம் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து விட்டது. உடம்பெல்லாம் வியர்த்தது. அங்கேயே நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றையும் காணவில்லை. உண்மையில், அங்கே ஒன்றையுங் காணவும் முடியாது. பாதையின் இருபுறமும் அடர்த்தியான புதர்கள் மண்டியிருந்தன. எங்கே என்னத்தைப் பார்க்கிறது? தான் அந்தக் குரலை உண்மையில் கேட்கவில்லை. ஏதோ சித்தப்பிரமை என்ற முடிவுக்கு வந்தாள். அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தலையை விரைவாக நாலு தடவை குலுக்கிவிட்டு மேலே நடக்கலானாள்.
ஆனாலும் அவளுடைய குதூகலம் போய்விட்டது. என்னவோ சொல்ல முடியாத பாரம் ஒன்று அவளுடைய இருதயத்தை அமுக்குவது போல் இருந்தது. ஏதேதோ பழைய ஞாபகங்கள், சோகத்துடன் கலந்து, தெளிவில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. இத்தனை நாளும் தோன்றாத எண்னங்களெல்லாம் தோன்றின. "இந்த வாழ்க்கையின் பொருள்தான் என்ன? எதற்காக பிறக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?" என்று இப்படியெல்லாம் சிந்தனை சென்றது.
ரொம்ப நேரம் சுற்ற வேண்டும் என்ற நினைப்புடன் கிளம்பிய பவானி, வழக்கத்தை விட முன்னதாக வீடு திரும்பலானாள். திரும்பி வருகையில், மேற் சொன்ன குரல் கேட்ட இடத்தில் சற்று நின்று கவனித்தாள். ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தைத் தாண்டி வந்தாள். கிட்டத்தட்டப் பங்களாவுக்குச் சமீபம் வந்ததும் அங்கே கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்தாள். அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால், அவர்களுடைய பங்களாவின் முகப்பும், அதன் முன் வாசல் பூந்தோட்டமும் தெரிந்தன.
பவானிக்குச் சங்கீத ஞானமும் சங்கீதத்தில் அபிமானமும் உண்டு. பாறையின் மேல் உட்கார்ந்தவள், ஊமைக் குரலில் பாடத் தொடங்கினாள். "சித்தமிரங்கவில்லையோ?" என்ற பாட்டு அவளையறியாமல் வந்தது. "தீவினையின் பயனோ, தெய்வக் குற்றமோ இது?" என்ற அடியைப் பாடியபோது, என்றுமில்லாதபடி அவளுடைய இருதயம் உருகிற்று. அதையே பலமுறை திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தாள்.
ஆ! அது என்ன சப்தம்! சிரிப்பா அது? ஐயா! சிரிப்பிலே அவ்வளவு துயரமும் இருக்க முடியுமா? - பவானி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கினாள். அவளுக்குப் பத்து அடி தூரத்தில் புதர்களுக்கு மத்தியில் கொஞ்சம் இடைவெளியிருந்தது. அங்கிருந்த பாறையில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். பவானி அந்தப் பக்கம் திரும்பியதும் அவளை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வை அவளுடைய நெஞ்சைப் பிளந்தது.
"ஆமாம் அம்மா! நீ கேட்டாயே, ஒரு கேள்வி. தீவினையின் பயனா தெய்வ குற்றமா என்று, அதைத் தான் நானும் மூன்று வருஷமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் சொல்பவரைத்தான் காணோம்" என்றான்.
அவன் வாலிபப் பிராயம் உடையவன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். நீலகிரித் தோடர்களைப் போல் ஒரு பெரிய துப்பட்டியைப் போர்த்திக் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து களைத்துப் போய்க் காணப்பட்டான். அவன் க்ஷவரம் செய்து கொண்டு பத்துப் பதினைந்து தினங்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனாலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம். அவன் கண்கள் பிரகாசம் பொருந்தி இருந்தன. அவன் முகத்தின் பளபளப்பைப் பார்த்த பவானி, "ஆகா! என்ன தேஜஸ்!" என்று எண்ணமிட்டாள். ஒரு வேளை பக்தர்களுடைய சரிதங்களில் வருவது போல், பகவான் தான் இந்த உருவத்தில் வந்துவிட்டாரோ என்று கூட ஒரு கணம் நினைத்தாள். அந்த முக தேஜஸ் சுரத்தின் வேகத்தினால் ஏற்பட்டது என்பதை அச்சமயம் அவள் அறியவில்லை.
"உன்னை எப்போதோ நான் பார்த்திருக்கிறேன். இல்லையா?" என்று அவன் கேட்டான்.
பவானிக்கும் அவனை எங்கேயோ எப்போதோ பார்த்தது போன்ற ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே எந்தச் சந்தர்ப்பத்தில் என்று நினைவுக்கு வரவில்லை.
"நீங்கள் ரொம்பக் களைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது" என்றாள் பவானி.
"ஆமாம்; காலையிலிருந்து சாப்பிடாமல் மலை ஏறினால் களைப்பாயிராதா? பசிகூட இல்லை; தாகந்தான் நாக்கை உலர்த்துகிறது."
"இதோ எங்கள் பங்களா ரொம்ப சமீபத்தில் தான் இருக்கிறது. வருகிறீர்களா?"
அந்த வாலிபன் எழுந்திருக்கத் தயங்கினான். அதற்குக் காரணம், அவனுடைய பலவீனம் என்பதை அறியாத பவானி "ஏன் தயக்கம்? என்னைப் பார்த்தால் தாகத்துக்குத் தண்ணீர் கொடாதவள் என்று தோன்றுகிறதா?" என்றாள்.
அதைக் கேட்டதும் அந்த வாலிபன் மெதுவாகத் தள்ளாடிக் கொண்டு எழுந்திருந்தான். ஓர் அடி எடுத்து வைக்க முயன்றான்; திடீரென்று கீழே விழுந்தான்.
அப்போது பவானி பதறிக் கூவியதைக் கேட்டுத்தான், பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் ஓடி வந்தார்கள்.
பவானி இருந்த இடத்துக்கு அவர்கள் வந்ததும் சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார்கள். பாறையின் மேல் ஒரு வாலிபன் ஸ்மரணையற்றுக் கிடந்தான். அவனுடைய தலையின் அடியில், பவானியின் கம்பளிச் சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது. பவானி தன்னுடைய புடவையின் தலைப்பினால் அவன் முகத்தின் மேல் விசிறிக் கொண்டிருந்தாள்.
பிரணதார்த்தி அவனுடைய மார்பையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார். "உயிர் இருக்கிறது; ஆனால் 105 டிகிரிக்கு குறையாத சுரம்" என்றார். பவானி சுருக்கமாக அவனைத் தான் சந்தித்த விதத்தைச் சொன்னாள்.
"சரிதான்! விஷயம் என்னவென்று அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது இவனைப் பங்களாவுக்குத் தூக்கிக் கொண்டு போவோம்" என்றார் பிரணதார்த்தி. இப்படிச் சொல்லி அவர் அவனுடைய தலைப்புறத்தைப் பிடித்துத் தூக்கினார். சேஷாத்ரி கால்புறத்தண்டை சென்று, கால்களின் கீழாகக் கையைக் கொடுத்தார். கொடுத்தவர், நெருப்பைத் தொட்டவர் போல், சட்டென்று கையை எடுத்தார். அதனால் அந்த மனிதனின் கால் சடக்கென்று பாறையில் விழவும், 'டங்' என்று இரும்பின் சப்தம் கேட்டது. வேஷ்டி சிறிது விலக, அவன் காலில் இருந்த இரும்புக் காப்பு தெரிய வந்தது. ஏககாலத்தில் மூன்று பேருடைய கண்களும் அந்த இரும்புக் காப்பின் மேல் சென்றன.
"அது என்ன?" என்று கலவரத்துடன் கேட்டார் பிரணதார்த்தி.
சேஷாத்ரி வியப்பும் வேதனையும் பொருந்திய குரலில் "இவன் கைதி. கைதிகளுக்குத் தான் காலில் இந்த மாதிரி இரும்புக் காப்பு இருக்கும். கோயமுத்தூர் சிறையிலிருந்து சமீபத்தில் தப்பியோடிய கைதிகளில் இவன் ஒருவனாயிருக்க வேண்டும்" என்றார்.
சில நிமிஷ நேரம் அவ்விடத்தில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு, பிரணதார்த்தி பவானியின் முகத்தை நோக்கினார். அவளுடைய முகத்தில் அவர் என்ன கண்டாரோ தெரியாது.
"எது எப்படியாவது இருக்கட்டும். பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இவனை இப்படி அனாதையாய்ச் சாகவிடுதல் மகாபாவம். பிடியுங்கள், சேஷாத்ரி!" என்றார்.
இரண்டு பேருமாக அவனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பவானியும் பின்னோடு சென்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. சிரிப்பும் நெருப்பும் - Bhavani B.A.B.L - பவானி, பி. ஏ, பி. எல் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பவானி, அவன், தான், அந்த, அவளுடைய, கொண்டு, போல், மேல், என்ன, அவனுடைய, பிரணதார்த்தி, என்றார், அந்தப், வேண்டும், நேரம், சேஷாத்ரி, இரும்புக், நிமிஷம், இருக்கும், பவானியின், மலைப், வாலிபன், பாறையின்