வடமலை நிகண்டு
வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும் உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. | 1251 |
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும் தந்தியின் கன்றுந் தனுவி ராசியும் வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. | 1252 |
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும் மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். | 1253 |
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும் பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். | 1254 |
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும் அங்குரத் தின்பெயர் தானு மாமே. | 1255 |
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். | 1256 |
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். | 1257 |
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும் கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். | 1258 |
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். | 1259 |
முருகெனும் பெயரே முருகக் கடவுளும் இளமையும் விழாவு மெழிலும் வாசமும் மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. | 1260 |
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும் இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். | 1261 |
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும் பெருமையு மென்னப் பேசுவர் புலவர். | 1262 |
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. | 1263 |
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும் மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. | 1264 |
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும் முத்து மருத நிலமு மொழிகுவர். | 1265 |
முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும் கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும் நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. | 1266 |
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும் மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். | 1267 |
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும் மகுடமு மெனவே வழங்குவர் புலவர். | 1268 |
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். | 1269 |
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். | 1270 |
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும் முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். | 1271 |
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும் கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். | 1272 |
மகர உகர வருக்கம் முற்றும்.
மகர ஊகார வருக்கம்
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும் ஆதிரை நாளு மாமென நவில்வர். | 1273 |
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும் முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். | 1274 |
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும் சோறு மெனவே சொல்லுவர் புலவர். | 1275 |
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும் எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். | 1276 |
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். | 1277 |
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும் அகப்பையின் பெயரு மாகு மென்ப. | 1278 |
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். | 1279. |
மகர ஊகார வருக்கம் முற்றும்.
மகர எகர வருக்கம்
மெய்யெனும் பெயரே மெய்மையும் ஞானமும் சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர். | 1280 |
மெத்தை யெனும்பெயர் சட்டையு மணையுமாம். | 1281 |
மகர எகர வருக்கம் முற்றும்.
மகர ஏகார வருக்கம்
மேதை யெனும்பெயர் அறிவும் புதனும் இறைச்சியு மெனவே யியம்புவர் புலவர். | 1282 |
மேலெனும் பெயரே மேல்பால் திசையும் இடமும் விசும்பு மியல்புளோர் பெயருமாம். | 1283 |
மேக்கெனும் பெயரே மேலு மேற்றிசையுமாம். | 1284 |
மேனி யெனும்பெயர் நிறைவும் வடிவுமாம். | 1285 |
மகர ஏகார வருக்கம் முற்றும்.
மகர ஐகார வருக்கம்
மையெனும் பெயரே மேட விராசியும் ஆடுங் குற்றமும் அஞ்சனமும் கறுப்பும் மேகமு மெனவே விளம்புவர் புலவர். | 1286 |
மைந்த னெனும்பெயர் திறலோன் பெயரும் புதல்வன் பெயரும் புகலப் பெறுமே. | 1287 |
மகர ஐகார வருக்கம் முற்றும்.
மகர ஒகர வருக்கம்
மொக்கு ளெனும்பெயர் பூவின் முகுளமும் குமிழியு மெனவே கூறுவர் புலவர். | 1288 |
மொய்யெனும் பெயர்போர்க் களமும் யானையும் வண்டுங் கூட்டமும் வகுக்கப் பெறுமெ. | 1289 |
மொய்ம்பெனும் பெயரே பெலமும் புயமுமாம். | 1290 |
மகர ஒகர வருக்கம் முற்றும்.
மகர ஓகார வருக்கம்
மோடெனும் பெயரே உயரமும் பெருமையும் வயிறு மெனவே வகுத்தனர் புலவர். | 1291 |
மகர ஓகார வருக்கம் முற்றும்.
மகர ஒளகார வருக்கம்
மெளலி யெனும்பெயர் சடையும் கிரீடமும். | 1292 |
மகர ஒளகார வருக்கம் முற்றும்.
8 வது மகர வருக்கத் தொகுதி முற்றும்.
9 வது யகர வருக்கத் தொகுதி
யகர அகர வருக்கம்
யவன ரெனும்பெயர் சோனகர் பெயரும் சித்திர காரர்தம் பெயரும் செப்புவர். | 1293 |
யகர அகர வருக்கம் முற்றும்.
யகர ஆகார வருக்கம்
யாம மெனும்பெயர் இரவும் தெற்கும் சாமமு மெனவே சாற்றப் பெறுமே. | 1294 |
யாழெனும் பெயரே வீணைக் கருவியும் ஆதிரை நாளும் அசுபதிப் பெயரும் மிதுன ராசியும் விளம்புவர் புலவர். | 1295 |
யாண ரெனும்பெய ரழகும் புதுமையும் நன்மையும் யாழ்பயி னல்லோர் பெயரும் தச்சரு மெனவே சாற்றப் பெறுமே. | 1296 |
யாப்பெனும் பெயரே கவிதையும் கட்டுமாம். | 1297 |
யான மெனும்பெயர் ஊர்தியின் விகற்பமும் மரக்கால் பெயரும் வழங்கப் பெறுமே. | 1298 |
யானு வெனும்பெயர் நன்மையு மழகுமாம். | 1299 |
யகர ஆகார வருக்கம் முற்றும்
யகர ஊகார வருக்கம்
யூப மெனும்பெயர் படையின் துறுப்பும் கபந்தமும் வேள்வித் தறியுங் கருதுவர். | 1300 |
யூக மெனும்பெய ருட்பொரு ளுணர்த்தலும் கோட்டா னுங்கருங் குரங்குந் தருக்கமும் உடற்குறை யுமென வுரைக்கப் பெறுமே. | 1301 |
யகர ஊகார வருக்கம் முற்றும்.
யகர ஓகார வருக்கம்
யோக மெனும்பெயர் உபாயமு முயற்சியும் தியானமுங் கூட்டமுஞ் செல்வமும் சிறப்புமாம். | 1302 |
யகர ஓகார வருக்கம் முற்றும்.
யகர வருக்கத் தொகுதி முற்றும்.
10 வது வகர வருக்கத் தொகுதி
வகர அகர வருக்கம்
வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். | 1303 |
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். | 1304 |
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும் நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். | 1305 |
வயலெனும் பெயரே செய்யும் வெளியும் மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. | 1306 |
வசியெ னும்பெயர் வாளும் வடுவும் வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. | 1307 |
வடவை யெனும்பெயர் வடவா வனலும் குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும் பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். | 1308 |
வயமெனும் பெயரே வலிமையும் புனலும் புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். | 1309 |
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும் தருமமு மிடமுந் தனையனும் நடவையும். | 1310 |
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும் வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. | 1311 |
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும் அளவுங் கைவரையு மாகு மென்ப. | 1312 |
வசதி யெனும்பெயர் மனையு மூரும் சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். | 1313 |
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும் விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். | 1314 |
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும் நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். | 1315 |
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும் கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். | 1316 |
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும் பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும் மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். | 1317 |
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும் பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும் வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந் துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். | 1318 |
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும் பாவின் விகற்பமும் போர்மேற் செலவும் மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. | 1319 |
வடுகெனும் பெயரே யிந்தள விசையும் மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. | 1320 |
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். | 1321 |
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும் மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும் சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். | 1322 |
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும் சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். | 1323 |
வம்பெனும் பெயரே மணமு மிடாவும் நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். | 1324 |
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். | 1325 |
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும் கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். | 1326 |
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். | 1327 |
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும் நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. | 1328 |
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும் தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். | 1329 |
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். | 1330 |
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும் வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. | 1331 |
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். | 1332 |
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும் எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும் குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும் நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். | 1333 |
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும் நீருந் துழாயும் காடு மிகுதியும் ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. | 1334 |
வடக மெனும்பெயர் வடக வுடையும் தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. | 1335 |
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும் வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். | 1336 |
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும் புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். | 1337 |
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும் நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. | 1338 |
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும் சூது மெனவே சொல்லுவர் புலவர். | 1339 |
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும் தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப் பிஞ்சுமாம். | 1340 |
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும் நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. | 1341 |
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். | 1342 |
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும் வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். | 1343 |
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும் எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். | 1344 |
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும் இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். | 1345 |
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும் விரைவு மெனவே விளம்புவர் புலவர். | 1346 |
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. | 1347 |
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். | 1348 |
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். | 1349 |
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். | 1350 |
வடமெனும் பெயரால மரமும் கயிறும் மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். | 1351 |
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும் சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. | 1352 |
வகர அகர வருக்கம் முற்றும்.
வகர ஆகார வருக்கம்
வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும் கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும் புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். | 1353 |
வானெனும் பெயரே வானமும் பெருமையும் மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. | 1354 |
வாருண மெனும்பெயர் நீருங் கடலும் மேற்கு மெனவே விளம்புவர் புலவர். | 1355 |
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும் சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. | 1356 |
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும் நீரும் விளைவுங் கதவின் விகற்பமும் மதிலின் சுற்றும் வருபுனல் மடையும் வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும் ஆனை படுக்கு மிடமு மாமே. | 1357 |
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும் திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். | 1358 |
வான மெனும்பெயர் மழையு மாகாயமும் உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். | 1359 |
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும் பாரதி பெயரும் பகழியு நடமுமாம். | 1360 |
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும் பூவின் மணமும் புடைவையின் பெயரும் இருப்பிட முமென வியம்புவர் புலவர். | 1361 |
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும் கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். | 1362 |
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும் மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. | 1363 |
வாளெனும் பெயரே வாளா யுதமும் ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். | 1364 |
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும் விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். | 1365 |
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும் சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும் கடலு மெனவே கருதப் பெறுமே. | 1366 |
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங் 1367 | |
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும் குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. | 1368 |
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும் கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். | 1369 |
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். | 1370 |
வாம மென்பெய ரிடப்பாலு மழகும் குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். | 1371 |
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். | 1372 |
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும் வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். | 1373 |
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும் தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும் ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும் கைவல முதலாங் கல்வி ஆண்மையும் ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும் பண்பு மிகையும் பகரப் பெறுமே. | 1374 |
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும் இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். | 1375 |
வகர ஆகார வருக்கம் முற்றும்.
வகர இகர வருக்கம்
விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும் மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். | 1376 |
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும் மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. | 1377 |
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க் கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். | 1378 |
விழவெனும் பெயரே மிதுன ராசியும் உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. | 1379 |
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும் ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். | 1380 |
விடரெனும் பெயரே வெற்பின் முழையும் கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். | 1381 |
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். | 1382 |
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும் ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின் முகடு மெனவே மொழிந்தனர் புலவர். | 1383 |
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும் தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். | 1384 |
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும் கொண்கனு மெனவே கூறப் பெறுமே. | 1385 |
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும் மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். | 1386 |
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். | 1387 |
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். | 1388 |
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும் செறிவு மெனவே செப்புவர் புலவர். | 1389 |
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும் அதிசயப் பெயரு மாகு மென்ப. | 1390 |
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும் புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். | 1391 |
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். | 1392 |
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். | 1393 |
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். | 1394 |
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். | 1395 |
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். | 1396 |
வில்லெனும் பெயரே மூல நாளும் ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. | 1397 |
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும் இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. | 1398 |
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும் வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. | 1339 |
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும் பழித்தலு மெனவே பகரப் பெறுமே. | 1400 |
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். | 1401 |
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும் தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். | 1402 |
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும் கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். | 1403 |
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும் இடப ராசியும் இயம்புவர் புலவர். | 1404 |
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும் இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். | 1405 |
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும் இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. | 1406 |
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங் கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். | 1407 |
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். | 1408 |
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும் மணமு மெனவே வழங்கப் பெறுமே. | 1409 |
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். | 1410 |
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். | 1411 |
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும் அருகனும் புத்தனு மாகு மென்ப. | 1412 |
வகர இகர வருக்கம் முற்றும்.
வகர ஈகார வருக்கம்
வீரை யெனும்பெயர் விரிகடற் பெயரொடு துயரையு மொருமரப் பெயரையுஞ் சொல்லுவர். | 1413 |
வீதி யெனும்பெயர் நேரோ டுதலுந் தெருவு மெனவே செப்பப் பெறுமே. | 1414 |
வீயெனும் பெயரே வீதலு நீக்கமும் பூவும் புள்ளின் பொதுவு மாமே. | 1415 |
வீச லெனும்பெயர் எறிதலும் கொடையுமாம். | 1416 |
வீதல் எனும்பெயர் கெடுதலும் சாதலும். | 1417 |
வகர ஈகார வருக்கம் முற்றும்.
வகர எகர வருக்கம்
வெள்ளை யெனும்பெயர் வெளிறும் வெண்பாவும் வெள்ளாட் டேறும் வெண்மையு மதுவும் பெலதே வனும்வெண் சங்கும் பேசுவர். | 1418 |
வெறியெனும் பெயரே யணங்காட்டு வட்டமும் அச்சமும் பேயு மணம்பெறு நாற்றமும் ஆடுங் கலகமு நோயு மாமே. | 1419 |
வெள்ள மென்பெயர் நீர்மிகுதியுங் கடலும் கடற்றிரைப் பெயரு மோரெண்ணுங் கருதுவர். | 1420 |
வெதிரெனும் பெயரே செவிடனு மூங்கிலும். | 1421 |
வெறுக்கை யெனும்பெயர் விபவமும் கனகமும் வெறுத்தலும் புலவோர் விளம்பப் பெறுமே. | 1422 |
வெளிலெனும் பெயரே வேழத் தம்பமும் அணிலும் பாடையும் தயிர்கடை தறியுமாம். | 1423 |
வெடியெனும் பெயரே யச்சமும் வெளியும் பரிமளப் புகையும் பகரப் பெறுமே. | 1424 |
வெம்மை யெனும்பெயர் விருப்பு முட்டிணமும் விரைவு மெனவே விளம்பப் பெறுமே. | 1425 |
வெள்ளி லெனும்பெயர் விளவும் பாடையும். | 1426 |
வெய்யோ னெனும்பெயர் விருப்பினன் பெயரும் இரவியுங் கொடியோன் பெயரு மியம்புவர். | 1427 |
வெள்ளி யெனும்பெயர் அசுரர் மந்திரியும் இரசதப் பெயரு மியம்புவர் புலவர். | 1428 |
வகர எகர வருக்கம் முற்றும்.
வகர ஏகார வருக்கம்
வேளெனும் பெயரே வேற்கும ரேசனும் வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. | 1429 |
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும் குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். | 1430 |
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை பொழுது மெனவே புகன்றனர் புலவர். | 1431 |
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். | 1432 |
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும் கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும் மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். | 1433 |
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும் விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். | 1434 |
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். | 1435 |
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். | 1436 |
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும் தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். | 1437 |
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும் பொன்னு மெனவே புகன்றனர் புலவர். | 1438 |
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும் படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். | 1439 |
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். | 1440 |
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும் உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர். |
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும் மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். | 1441 |
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங் கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். | 1442 |
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும் மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. | 1444 |
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும் சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும் இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். | 1445 |
வேலா வலய மெனும்பெயர் கடலும் பூமியு மெனவே புகன்றனர் புலவர். | 1446 |
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். | 1447 |
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும் பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. | 1448 |
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும் வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். | 1449 |
வகர ஏகார வருக்கம் முற்றும்.
வகர ஐகார வருக்கம்
வைக லெனும்பெயர் தங்கலுந் தினமும் புலரிக் காலமும் புகன்றனர் புலவர். | 1450 |
வையெனும் பெயரே நெல்லின் றாளும் கூர்மையும் புல்லும் கூறப் பெறுமே. | 1451 |
வைய மெனும்பெயர் உரோகிணி நாளும் ஆனே றுஞ்சகட வூர்தியும் சிவிகையும் பாருந் தேரும் பகரப் பெறுமே. | 1452 |
வகர ஐகார வருக்கம் முற்றும்.
10 வது வகர வருக்கத் தொகுதி முற்றும்.
1452 சூத்திரங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்