முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 6. தோழி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து
தலைவியின் ஊடலைத் தோழி எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பரத்தையரிடமிருந்து வந்த கணவனை தலைவியின் வாயிலாக இருந்து தடுக்கும் பாடல்களும், தலைவனுக்கு வாயிலாக இயங்கித் தலைவியின் ஊடலைத் தணிக்கும் பாடல் ஒன்றும், களவுக்காலத்தில் தலைவனைத் தடுக்கும் பாடல் ஒன்றும் இதில் உள்ளன.
நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே. | 51 |
தலைவி கருவிற்றிருக்கிறாள். புளியங்காயை வாயில் போட்டுச் சப்ப விரும்புகிறாள். தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். தோழி சொல்கிறாள். ‘உன் மார்பு இவளுக்குப் புளியங்காய் அன்று’ என்கிறாள். அவன் மார்பை இவள் தழுவ விரும்பவில்லை என்பது பொருள். நீலநிற ஆண் நீர்கோழி பெண் நீர்க்கோழிக்கு ஆசை கொள்ளும் நீர்த்துறை ஊரன் அவன்.
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. | 52 |
மகிழ்ந! (உடல் மகிழ்ச்சிஉயில் திளைப்பவன்) இங்கே இவள் தழையாடைக்காக வயலைக் கொடியைப் பின்னி, இவளது விரல்களும் சிவந்துவிட்டன. அத்துடன் இவளது சிவந்த வரியோடும் கண்களும், சிவந்த வாயும் உன் ஏக்கத்தால் வருந்துகின்றன. இப்படி இவளை விட்டுவிட்டு உன் தேரை யார் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்தாய்? – தோழி வினவுகிளாள்.
துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர நீயுற்ற சூளே. | 53 |
தலைவனுடன் நீராடத் தலைவி ஆற்றுத் துறைக்குச் செல்கிறாள். இந்த நீர்த்துறை தலைவன் தன் விலைப்பெண்டிருடன் நீராடிய துறை என்று எண்ணி நீராடத் தயங்குகிறாள். தலைவன் அழைக்கிறான். பிற மாதரைத் தொடேன் என்று முன்பு உரைத்த சூள் (சத்தியம்) என்னவாயிற்று – என்று தோழி தலைவனை வினவுகிறாள்.
இயல்பாக மலரும் தாமரை வெள்ள-அலை மோதி மலரும் வயல் கொண்ட ஊர – என விளிப்பது அவன் தலைவியை வற்புறுத்தி மலரச் செய்வதை உணர்த்தும் இறைச்சிப் பொருள்.
திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ ஊரின் ஊரனை நீதர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. | 54 |
தலைவன் முறை வைத்துக்கொண்டு தலைவியுடனும், பரத்தையுடனும் வாழ்கிறான். பரத்தையிடம் செல்லும் முறை வருகிறது. தலைவியின் குறிப்பைத் தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.
திண்தேர்த் தென்னவன் ஆளும் பாண்டிநாட்டுத் தேனூர் அருவியில் கோடைக்காலத்திலும் நீர் வழியும். அதுபோல இவள் வளையல் நழுவி ஓடும்படி விட்டுவிட்டு பச்சைக் கோரைப்புல்லில் மகிழும் பரத்தையிடம் செல்லவிருக்கிறாய். இதனை எண்ணி இவள் பயந்துகிடக்கிறாள் – என்கிறாள் தோழி.
கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும் தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. | 55 |
கரும்புச்சாறு பிழியும் எந்திரம் யானை பிளிர்வது போல ஒலிக்கும் ஊர் தேனூர். தேர் வழங்கும் கொடையாளி ஆளும் ஊர் தேனூர். அந்தத் தேனூர் போல அழகு திகழ்பவள் இவள். இவள் அழகையெல்லாம் துய்த்த நீ இப்போது விட்டுவிட்டுப் பிரிகிறாய். இதனை எண்ணி இவள் நெற்றி பசந்து வாடுகிறது – இவ்வாறு தோழி கூறுகிறாள்.
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே. | 56 |
வெல்போர்ச் சோழர் ஆளும ஆமூரில் பகல் போல இரவிலும் விளக்கு எரிவால் அங்கு இரவா, பகலா என்று தெரிவதில்லை. அந்த ஊர் போன்ற நெற்றியை உடையவள் இவள். இவள் தேம்பும்படி விட்டுவிட்டு நீ பரத்தை இல்லம் சென்றுவந்துள்ளாய். இப்போது போகவே இல்லை என்று கூறி இவளைத் தேற்றுகிறாய். நீ தேற்றும் மொழியால் இவளுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை – என்கிறாள் தோழி.
பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே. | 57 |
ஆம்பல் பூக்கள் பகலில் தோன்றும் தீப் போல வயலெல்லாம் பூத்துக் கிடக்கும் ஊர் தேனூர். இவள் அந்தத் தேனூர் போல அழகுநலம் உடையவள். இவளைப் புலம்பும்படி விட்டுவிட்டு நீ உன் பெண்ணிடம் செல்கிறாயே, அவள் அந்த அளவுக்கு அழகுநலம் கொண்டவளா? – இது தோழியின் வினா.
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி பிறர்க்கு மனையையால் வாழி நீயே. | 58 |
நெல் மூங்கில் போல் ஓங்கி வளரும் ஊர் இரும்பை. வள்ளல் விரான் வாழும் ஊர் இரும்பை. அந்த இரும்பை ஊர் போல் அழகுநலம் மிக்கவள் இவள். இவளையே நொந்து வருந்தும்படி [அணங்கும்படி]ச் செய்பவன் போல் இருக்கின்றாய். பிறருக்கும் இப்படித்தான் இருப்பாய். வாழிய நீ. தலைவியைப் பிரிந்து மற்றொருத்தி வீட்டுக்குச் செல்லும் நீ அவளையும் பிரிந்து இன்னொருத்தி வீட்டுக்கும் சென்று அவளையும் வருந்தும்படிச் செய்வாயே. – தோழி தலைவிக்காக ஊடல்.
கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்குமருந் தாகிய யான்இனி இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே. | 59 |
மகிழ்ந! என் நெஞ்சம் நொந்து வருந்துவதைக் கேள். பரத்தையிடம் சென்று மீண்ட உன்னைத் தலைவி ஊடியபோது, உனக்கு மருந்தாகி அவள் ஊடலைத் தீர்த்துவைத்தேன். அப்போது என் தலைவியின் ஊடலுக்கு மருந்தாக அமையாமல் போய்விட்டேனே! என்ன செய்வேன்?
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும் கழனியுரநின் மொழிவல் என்றும் துங்சுமனை நெடுநகர் வருதி அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே. | 60 |
பழமையான வயல்களில் [பழனம்] காட்டுக்கோழி [கம்புள்] தன் பெண்கோழியைக் கூவி அழைக்கும் ஊரன் நீ. உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். இவள் உறங்கும் அகன்றுயர்ந்த மனைக்கு இவளைப் பெற வருகிறாய். இவள் தந்தையின் கையிலிருக்கும் வேலைக் கண்டு அஞ்ச மாட்டாயா? இது களவொழுக்கக் காலத்தில் தலைவன் வரவைத் தடுத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, இவள், தேனூர், மகிழ்நநின்