முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
ஐங்குறுநூறு - 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
கார் காலம் வரும்போது திரும்பிவிடுவேன் – என்று கூறிச் சென்ற கணவன் வராமை கண்டு மனைவி கூறும் செய்தி இங்குக் கூறப்படுகிறது.
கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர் தேர்தரு விருந்தில் தவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. | 451 |
மேகம் பொழியும் காலத்தில் திரும்புவேன் என்று சொல்லி என்னைத் துன்புறும்படி விட்டு பிரிந்து சென்றவர் தேரில் வந்து விருந்து அளிக்கத் தவிர்த்துக்கொண்டிருத்தல் ஏன்? மாற்றமுடியாத படையுடன் எதிராளியைப் பார்த்துக்கொண்டிருத்தல் வேந்தன் தொழிலாயிற்றே.
வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றே பகைவெங் காதலர் திறைதரு முயற்சி மெல்தோள் ஆய்கவின் மறையப் பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே. | 452 |
வறண்டு கிடக்கும் நிலம் செழிக்கும்படியாக வீசிச் சுழலும் மேகம் கார்மழை பொழிகிறது. பகையை விரும்பும் போராளியாக என் காதலர் திறை வாங்க முயல்கிறார். என் தோள் பலரும் ஆராயும் அழகு மறைய பொன்னிறத்தில் பீர்க்கம் பூ போலப் பசலை நிறம் பாய்ந்து பலர் அறியத் தூற்றுகிறதே.
அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும் வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப உதுக்காண் கார்தொடங் கின்றால் காலை அதனால் நீர்தொடங் கினவால் நெடுங்கணவர் தேர்தொடங் கின்றால் நம்வயி நானே. | 453 |
பள்ளத்து நீர்நிலைகள் இருக்குமிடங்களிலெல்லாம் தவளை ஒலி. மேட்டு நிலங்களிலெல்லாம் பறவை ஒலி. இப்படி அங்குமிங்கும் கண் கண்ட எல்லா இடங்களிலும் கார்காலம் தொடங்கியிருக்கும் காலம். அவர் தேர் மட்டும் என்னை நோக்கித் திரும்பத் தொடங்கவில்லையே.
தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேரும்பு பேணிக் கார்நய்ந்து எய்தும் முல்லை அவர் தேர்நயந்து உறையும் என் மாமைக் கவினே. | 454 |
பசுமை நிறத் தளவம் பூக்கொடி முழுவதும் நிலா நிறத்தில் அரும்புகள். இப்படிக் காட்டிக்கொண்டு முல்லை நிலத்தில் கார்காலம் வருகிறது. என் மேனியில் இருக்கும் என் மாமை நிற அழகு அவர் வரும் தேரை விரும்பிக்கொண்டு காத்திருக்கிறது.
அரசுபகை தணிய முரசுபடச் சினை இ ஆர்குரல் எழிலி கார்தொடங் கின்றே அளியவோ அளிய தாமேஎ ஒளிபசந்து மின்னிழை ஞெகிழச் சாஅய்த் தொன்னலம் இழந்த என் தடமெல் தோளே. | 455 |
அரசனே, நீ உன் பகையைத் தணித்துக்கொள் – என்று முரசு முழக்கிச் சொல்வது போல கார்மேகம் இடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தோ! என் அகன்று விரிந்த மார்பகத்தோள் இரங்கத் தக்கது. ஒளி பசந்து, மின்னும் அணிகலன்கள் கழன்று, பழமையான நலமெல்லாம் இழந்து வாடுகிறது.
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப் பகல்மதி உருவைல் பகன்றை மாமலர் வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும் அரும்பனி அளை இய கூதிர் ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே. | 456 |
தோழி, அவர் என்னை நினைக்கமாட்டாரோ.. பகலில் தோன்றும் நிலாவைப் போல பகன்றைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. வெண்ணிற ஈங்கை மலரின் கொடி புதரில் படர்ந்து கிடக்கிறது. பனி பொழியும் குளிர் காலம் இது. இத்தகைய காலத்தில் உன்னோடு சேர்ந்திருப்பேன் என்று என்னை தெளிய வைத்துவிட்டுச் சென்றவர் நினைக்கமாட்டாரோ?
பெய்பன் நலிய உய்தல்செல் லாது குருகினம் நரலும் பிரிவருங் காலைத் த்றந்தமை கல்லார் காதலர் மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே. | 457 |
பெய்யும் பனி வருத்துவதால் வாழ்வதற்கே குருகுப் பறவை கத்தும் கடுமையான காலம் இது. என் காதலர் என்னைத் துறந்து அமைதியாக இருக்கிறார். என் நெஞ்சு மட்டும் அவரை மறந்திருக்க மாட்டாமல் மடமைப் பட்டுக் கிடக்கிறது.
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன் அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர் பாணர் பெருமகன் பிரிந்தென மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே. | 458 |
கொத்துக் கொத்தாகக் கொன்றை நெற்றுகள் தொங்குகின்றன. பாணன் அதில் குழல் செய்து ஊதவேண்டும் என்பது அவற்றின் ஆசை. பாணன் குழல் செய்துகொள்ளாமல் பிரிந்துவிட்டான். கொன்றைப் பழ நெற்றுகள் என்ன செய்யும்? என் கண்ணும் அது போல நலம் இழந்து துன்புறுகிறது.
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப் புல்லவும் இயைவது கொல்லோ புல்லார் அரண்க டந்த சீர்கெழு தானை வெல்போர் வேந்தனொடு சென்றா நல்வய லூரன் நறுந்தண் மார்பே. | 459 |
என் மென்மையான தோள்.. இறைவானம் போல வளைந்திருக்கும் தோள்.. மூங்கில் போன்ற தோள்.. பசலை நிறம் மாறி அவரைத் தழுவவும் முடியுமா? பகைவரின் கோட்டைகள் பலவற்றைக் கடந்த சிறப்பு மிக்க படையில் வெற்றிப்போர் வேந்தனோடு சென்ற நல்வயல் ஊரன் என் கணவர். அவரது மார்பை நான் தழுவ முடியுமா?
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான் இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா ததை இலை வாழை முழுமுதல் அசைய இன்னா வாடையும் அலைக்கும் என்ஆகு வன்கொல் அளியென் யானே. | 460 |
பெருஞ்சினம் கொண்ட வேந்தனும் பாசறையில் இருப்பதற்குத் தயங்கவில்லை. என் கணவன் வெற்பன் – மலைநாடன். அது இருண்ட ஓசை கொண்ட மலை. வெற்பனிடமிருந்து எனக்குத் தூதும் வரவில்லை. வாழை மரம் அடியோடு அசையும்படி வாடைக் காற்று வீசுகிறது. வாழை – தலைவி – உள்ளுறை நான் என்ன செய்வேன்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கார்தொடங், கின்றால், கொல்லோ, காதலர், தன்றே, தானை, எழிலி, கார்செய்