முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 47. தோழி வற்புறுத்த பத்து
ஐங்குறுநூறு - 47. தோழி வற்புறுத்த பத்து
பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தில் திரும்பி வாராமையால் வருந்தும் தலைவியை, “வந்துவிடுவார்” என்று சொல்லிப் பொறுத்திருக்கும்படித் தோழி வேண்டியது.
வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக் கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே இனையல் வாழி தோழி எனையதூஉம் நின்துறந்து அமைகுவர் அல்லர் வெற்றி வேந்தன் பாசறை யோரே. | 461 |
வானம் பிசுபிசுப்பது போலக் கொத்துக் கொத்தாக பிடவம் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. காடே பிசுபிசுப்பது போல கார்மழை பொழிகிறது. தோழி, வருந்தாதே. நான் சொல்வதைக் கேள். வெற்றி வேந்தன் பாசறையில் இருக்கும் அவர் எந்த வகையிலும் உன்னை விட்டுவிட்டு அமைதியுடன் இருக்கமாட்டார். விரைவில் வந்துவிடுவார்.
எதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் தகையெழில் வாட்டுநர் அல்லர் முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே. | 462 |
ஏதுமில்லாமல் மேகம் மழை பொழிகிறது. அதனைக் கார் காலம் என்று நம்பி ஒன்றுமறியாத கொன்றை மாலை போல் கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்குகிறது. அதைப் பார்த்துக் கார் காலம் என நினைத்துக்கொண்டு அழுகிறாய். உன் தகைமை மிக்க அழகினை வாடும்படிச் செய்பவர் அவர் அல்லர். முல்லை நிலம் பூத்துக் கிடக்கும் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். விரைவில் வந்துவிடுவார்.
புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய வாராது அமையலோ இலரே நேரார் நாடுபடு நன்கலம் தரீஇயர் நீடினர் தோழிநம் காத லோரே. | 463 |
புதரின் மேல் மறுமணம் கமழும்படி அழகுடன் பூத்திருக்கும் மலர்களை உன் கூந்தலில் அழகு திகழும்படி புனைந்துகொள்வதற்காக அவர் வந்துவிடுவார். வராமல் இருக்க மாட்டார். பகைவர் நாடுகளில் மண்டிக் கிடக்கும் அரிய செல்வங்களைக் கொண்டுவருவதற்காக அவர் அங்கே காலம் தாழ்த்துகிறார். கவலை வேண்டாம்.
கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும் அற்சிரம் மறக்குநர் அல்லர்நின் நல்தோள் மருவரற்கு உலமரு வோரே. | 464 |
உன் கண்ணைப் போலக் கருவிளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். அவர் பிரிவால் உன் மேனியில் தோன்றும் பொன் நிறம் போல பீர்க்கம் பூ கூத்திருக்கும். அந்தக் கோடைகாலக் காட்டுப் பாதையில் அவர் உன்னை மறக்க முடியாது. உன் தோளை அணைப்பதற்குத் துடிப்பவர் ஆயிற்றே.
நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர் கார்செய் கானம் பிற்படக் கடைஇ மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க வருவர் வாழி தோழி செருவெம் குருசில் தணிந்தனன் பகையே. | 465 |
தண்ணீர் கொட்டுவது போலப் பாயும் குதிரை பூட்டிய தேரில் வருவார். கார்மேகம் பொழிந்து அழகைக் காட்டும் காட்டில் தேரை ஓட்டுக்கொண்டு வருவார். மலர் மாலை சூடிய அவர் மார்பகத்தை நீ தழுவுவதற்காக வருவார். தோழி இதனைக் கேள். போரில் ஆசை கொண்ட மன்னன் பகைமையைத் தணித்துக்கொண்டான்.
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல் காமர் சுடர்நுதல் விளங்கும் தேமொழி அரிவை தெளிந்திசின் யானே. | 466 |
அவரை வேந்தன் தூதுவராக அனுப்பி வைத்திருக்கிறான். அது விழுமிய தொழில். அதனை ஏற்று அவர் சென்றிருக்கிற்றார். அரசன் தன் பட்டத்து யானைமேல் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறான். இனி, எண்ணிய நாள் வருவதற்கு முன்பதாகவே வந்துவிடுவார். நீ பெண்ணியல்பால் கலங்குகிறாய். அழகிய சுடரும் நெற்றியை உடையவளே தேன் போன்ற மொழி பேசுபவளே எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நீயும் தெளிவு பெறுவாயாக.
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து இனையல் வாழியோ இகுளை வினைவயின் சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது நம்மினும் விரையும் என்ப வெம்முரண் யானை விறல்போர் வேந்தே. | 467 |
பூண்டிருக்கும் அணிகலன் நழுவி விழுகிறது. நொந்து நொந்து வருந்துகிறாய். தோழி வருந்தாதே நான் சொல்வதைக் கேள். அரசன் தன் செயலைத் தலைமேற் கொண்டு பெரிதும் காலம் தாழ்த்துகிறாரே என்று வருந்தாதே. அவரால் உன் பிரிவைத் தாங்க முடியாது. நாம் எண்ணுவதைக் காட்டிலும் விரைந்து வந்துவிடுவார் என்று கூறுகின்றனர். கடுமையான போர் யானை மீதல்லவா சென்றிருக்கிறார் உன் வெற்றி வேந்து.
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார்தொடங் கின்றே காலை இனிநின் நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக வருவர் இன்றுநம் காத லோரே. | 468 |
கார் காலம் தொடங்கும் பருவம் வந்துவிட்டது. மழைநீர் ஓட்டத்தில் நுண்ணிய மணல் படிகிறது. தவளைகள் கத்துகின்றன. இனி உன் தோளுக்கு விருந்துத்தான். மூங்கில் போல் வளைந்த தோள். மணி கட்டிய தோரில் அவர் வருவார். இன்றே வருவார் உன் காதலர்.
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு பெயல்தொடங் கின்றே வானம் காண்குவம் வம்மோ பூங்க ணோயே. | 469 |
அவன் வன்புல நாடன். காயவைத்துக்கொண்டிருக்கும் தினையை செம்பூழ் என்னும் செம்போத்துப் பறவை கவரும் வன்புல நாடன். சென்ற அவனைத் திரும்ப அழைத்து வருவதற்காக வானம் இடி முழக்கத்துடன் மழை பொழிவதைப் பார். அவரை அழைத்துவரும் மழையை நாம் சென்று காணலாம் வா. தோழி தலைவியை அழைக்கிறாள்.
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் அரும்பனி அளை இய அற்சிரக் காலை உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோநின் மாமைக் கவினே. | 470 |
அகன்ற நிலம் குளிரும்படி நாள்தோறும் பெரும் பனி காற்றோடு வீசிப் பொழிகிறது. இது பெரும்பனிக் காலம். உன் காதலர் உன்னை நினைக்காவிட்டால், நினைக்காமல் இருக்க இந்தப் பனிக்காலம் விட்டுவைக்குமா? உன் மாமை அழகு அவர் நினைவுக்கு வராதா?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, கின்றே, காலை, வருவர், யானை, லோரே, அல்லர், கார்தொடங், இனையல், வாழி, நீடினர்