ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து
முல்லை நிலத்தின் அழகைக் கூறும் பாடல்கள் இதில் உள்ளன.
நன்றே காதலர் சென்ற ஆறே அணிநிற இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே. | 431 |
காதலர் சென்ற வழி நன்று. அழகிய நிறம் கொண்ட மலை. மணி போல் நிறம் கொண்ட மயில் அதில் ஆடும்.
நன்றே காதலர் சென்ற ஆறே சுடுபொன் அன்ன கொன்றை சூடிக் கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே | 432 |
அவர் சென்ற வழி நல்ல வழி. சுட்ட பொன் போல் கொன்றை மலரைச் சூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்பவர் போல மள்ளர்கள் வாழும் இடங்களைக் கொண்டது.
நன்றே காதலர் சென்ற ஆறே நீர்ப்பட எழிலி வீசும் கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. | 433 |
அவர் சென்ற வழி நல்ல வழி. நீரைப் பொழிவதற்காக மேகங்கள் காற்றை வீசும். கார் கால மழையை ஏற்பதற்காக காடுகள் காத்திருக்கும்.
நன்றே காதலர் சென்ற ஆறே மறியுடை மாண்பிணை உகளத் தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. | 434 |
அவர் சென்ற வழி நல்ல வழி. குட்டியுடன் பெண்மான் துள்ளி விளையாடும். ஈர மழை பொழியும் இன்பமும் அங்கு உண்டு.
நன்றே காதலர் சென்ற ஆறே நிலன் அணி நெய்தல் மலரப் பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. | 435 |
அவர் சென்ற வழி நல்ல வழி. நிலத்துக்கு அழகு செய்ய நீரில் நெய்தல் மலரும். பொன் அணிகலன் போலக் கொன்றையும் பிடவமும் மலரும்.
நன்றே காதலர் சென்ற ஆறே நன்பொன் அன்ன சுடரிணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே. | 436 |
அவர் சென்ற வழி நல்ல வழி. பொன்னைப் போல் மலர்ந்த கொன்றையோடு குருந்தம் பூக்களும் மலர்ந்திருக்கும்.
நன்றே காதலர் சென்ற ஆறே ஆலித் தண்மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. | 437 |
அவர் சென்ற வழி நல்ல வழி. மழை பனிக்கட்டியுடன் பொழியும். அதைப் போல வெண்ணிறத்தில் பூத்திருக்கும் முல்லையும் அங்கு உண்டு.
நன்றே காதலர் சென்ற ஆறே பைம்புதல் பம்பூ மலர இன்புறத் தருந பண்புமார் உடைத்தே. | 438 |
அவர் சென்ற வழி நல்ல வழி. புதர்களிலெல்லாம் பூக்கள் மலர இன்பமூட்டும் தகைமை உடையது.
நன்றே காதலர் சென்ற ஆறே குருந்தக் கண்ணிக் கோவலர் பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே. | 439 |
அவர் சென்ற வழி நல்ல வழி. கோவலர் குருந்தம் பூக்களைச் சூடிக்கொள்வர். அவர்கள் வாழும் குளுமையான ஊர்ப் பாக்கங்களும் அங்கு உண்டு.
நன்றே காதலர் சென்ற ஆறே தன்பெயல் அளித்த பொழுதின் ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. | 440 |
அவர் சென்ற வழி நல்ல வழி. ஈர மழை பொழிந்துகொண்டிருக்கும். தோன்றி, தளவம் ஆகிய பூக்கள் சுடர் விட்டுப் பூத்திருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நன்றே, சென்ற, காதலர், உடைத்தே, மலர்ந்த, அன்ன