ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து
பல்வேறு துறைச் செய்திகள் விரவிக் கூப்பபட்டுள்ள 10 பாடல்கள் கொண்ட பகுதி.
மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே. | 421 |
வெண்ணிற வயிர மாலையைக் காவலர் கழற்றி வீசும்போது பூத்துக் கிடக்கும் முல்லை நிலத்தில் மேயும் முயல் பயந்து ஓடும் நாட்டின் தலைவன் மகள் அவள். அவளது மூங்கில் போன்ற தோள் தந்த இன்பம் அவளது காதலனைப் பிரிந்து செல்லாவண்ணம் தடுத்தது.
கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர விரையுபு கடை இநாம் செல்லின் நிரைவளை முன்கை வருந்தலோ இலளே. | 422 |
விரைந்து பாயும் குதிரை பூட்டிய தேரில், வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில், நீண்ட கொடியில் பூத்திருக்கும் முல்லையும் தளவமும் உதிரும்படி விரைந்து செலுத்திக்கொண்டு நாம் சென்றால் முன்னங்கையில் நிறைந்த வளையல்களை உடைய அவள் வருந்தமாட்டாள்.
மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே யாமே நிந்துறந்து அமையலம் ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே. | 423 |
கரு மேகங்கள் இடியுடன் மழை பொழிகின்றன. என் தலைவி நெற்றியில் பசப்பு ஊரும்படி விட்டுவிட்டு நீ பிரிந்து செல்கிறாய். நானும் என் தலைவியும் உன்னை விட்டுவிட்டு இருக்க மாட்டோம். அவள் கண்ணில் நீர் நிறைந்திருப்பதைப் பார்.
புறவணி நாடன் காதல் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப் போதவிழ் தாமரை அன்னநின் காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே | 424 |
இவள் முல்லை நிலத் தலைவனின் அன்பு மகள். இவளது நெற்றி பசக்கும்படி விட்டுவிட்டு நீ இவளைப் பிரிந்து சென்றால் நீரில் பூத்திருக்கும் தாமரை போன்ற கண்ணினை உடைய உன் அன்பு மகன் முலைப்பால் வேண்டும் என்று அழுவான். உன் மனைவி இறந்துவிடுவாள்.
புன்புறப் பேடை சேவல் இன்புற மன்னர் இயவரின் இரங்கும் கானம் வல்லை நெடுந்தேர் கடவின் அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே. | 425 |
புறாவின் பெட்டையும் சேவலும் இன்பம் எய்துமாறு நீ தேர் ஓட்டிச் சென்றால் மன்னரும், போர் வீரர்களும் வருந்திக்கொண்டிருக்கும் காட்டில் நீ தேரோட்டிச் சென்றால் என்னவளை அடையும் ஆவலில் வருந்தும் என் துன்பம் எளிதில் நீங்கும்.
வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி நன்னுதல் யானே செலஒழிந் தனனே முரசுபாடு அதிர ஏவி அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே. | 426 |
வெற்றி வேல் கொண்ட மன்னவன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். நல்ல நெற்றி கொண்டவளே! நானும் இனிப் உன்னைப் பிரிந்து செல்லமாட்டேன். முரசு முழங்க ஏவிப் பகையரசர்களை வெல்லும் போர் இனி இல்லை.
பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே காரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயே போருடை வேந்தன் பாசறை வாரான் அவனெனச் செலவழுங் கினனே. | 427 |
நீயோ மிகப் பெரிய ஆவலுடன் மலரும் கண்ணை உடைய மடந்தை. இது கால்காலம் வரும் பொழுது என்று என்னை விட முடியாதவளாக இருக்கிறாய். போர்த்தொழில் புரியும் வேந்தன் பாசறையில் இருக்கிறான். பகைவன் தாக்க வரமாட்டான் என்று போருக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டடான்.
தேர்செல அழுங்கத் திருவில் கோலி ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே. | 428 |
தேர்ப்படை செல்வது நின்றுவிட்டது.. வானவில் தோன்றுகிறது. மேகம் பொழியத் தொடங்கியுள்ளது. வேந்தனின் போர்த்தொழில் நின்றுவிட்டது. நான் உன்னைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளேன்.
பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின் செல்வேம் தில்ல யாமே செற்றார் வெல்கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வெந்துபகை வெலற்கே. | 429 |
இருண்ட பல கூந்தலை உடையவள் நீ. உன் மேனி பசப்பு கொள்ளாமல் இருந்தால், நான் போருக்குச் செல்வேன். பகைவரின் வெற்றிக் கோட்டையை அழிப்பேன். போர்த்தொழிலைக் கல்லாத யானைகளை உடைய பகைவரின் பகையை வென்று திரும்புவேன்.
நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும் கான்கெழு நாடன் மகளோ அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே. | 430 |
உயர்ந்த மலையின் மேல் குறுகிய அடிமரம் கொண்ட கொன்றை அடர் பொன் நிறத்தில் மலர்களைக் கொண்டிருக்கும் காட்டுத் தலைவனின் மகளே! அழுவதை நிறுத்துக. போருக்குச் செல்லமாட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாடன், வேந்தன், யாமே, செலவே, மடமகள்