முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 16. வெள்ளங் குருகுப் பத்து
ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங்குருகின் பிள்ளை போல் தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டு (செத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, எனக் கொள்ளலும் ஆம்) பார்ப்பதற்காக அருகில் சென்ற நாரை என்ன செய்தது என்று நிலத்தின் தன்மையைத் தமிழரின் பண்பாட்டோடும், நாகரிகத்தோடும் இணைத்துக் கூறும் பாடல்கள் 10 இந்தப் பத்தில் உள்ளன.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை மிதிப்ப நக்க கண்போல் நெய்தல் கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. | 151 |
நெய்தல் மலரைக் குருகுப்பிள்ளை என்று எண்ணி நாரை மிதிக்கும் துறைவன். இந்தத் துறைவனுக்கு என் நெஞ்சத்தைக் கொடுத்துவிட்டேன். நேர்<நேர்கு(நேர்+கு)<நேர்கல்(நேர்கு+அல்)<நேர்கல்லேன்(நேர்கல்+ஏன்) = நேரலானேன்.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கையறுபு இரற்றும் கானலம் புலம்பம் துரைவன் வரையும் என்ப அறவன் போலும் அருளுமார் அதுவே. | 152 |
தன் காலாகிய கைகளால் தன் நெஞ்சில் இறுக்கிக்கொண்டு புலம்பும் துறையின் தலைவன் அவன். அவன் அறநெறி பிறழாதவன். அவன் அருளும் அப்படிப்பட்டது.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை உளர ஒழிந்த தூவி குலவுமணல் போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. | 153 |
நாரை தன் சிறகுகளை உதறியது. உதிர்ந்த தூவிகள் குவிந்திருக்கும் மணலில் கிடந்தன. அவற்றைப் போர்வையில் திணித்துப் போர்த்திக்கொள்ளும் துறைவன் அவன். அந்த நாரைத்தூவிப் போர்வையை விட்டுவிட்டு, என் கூந்தல் போர்வையை விரும்புகிறானே!
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானற் சேக்கும் துறைவனோடு யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. | 154 |
காணச் சென்ற நாரை அந்தக் கடற்கரைக் கானல் நிலத்திலேயே தங்கிவிட்டது. அந்தக் கானல்நிலத் துறைவன் அவன். அந்த நாரை போல் அவன் ஊரிலேயே அவன் தங்கிவிட்டான். அதற்காக நான் என்ன செய்வேன்? இந்த ஊர் என்னைப் பொய் பேசுகிறதே.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடுபெயரும் துறைவதற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. | 155 |
காணச் சென்ற நாரை பதைபதைத்தது. குருகுப் பிள்ளை போல் இருந்த நெய்தல் மலரைக் கசக்கி மிதித்தது. அந்தப் பூ வந்து பெயரும் கடல் அலையில் சென்றுவிட்டது. அப்படிப்பட்ட துறையை உடையவன் அவன். அவனுடன் கூடியிருந்து நான் ஒரு பிள்ளை பெற்றிருக்கிறேன். அது கோரைக் கிழங்குப் பாவை. இதுதான் எனக்கு மிச்சம்.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி தெள்கழிப் பரக்கும் துரைவன் எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. | 156 |
பதைபதைத்த நாரை தன் சிறகை அடித்துக்கொண்டது. அப்போது உதிர்ந்த அதன் தூவி கழிநீர்ப் பரப்பெல்லாம் மிதக்கிறது. அப்படிப்பட்ட துறையின் தலைவன் அவன். அவன் எனக்கோ காதலன். அன்னைக்கோ வேறொருவனாகத் தென்படுகிறான்.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்கும் தெண்கடல் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனன்எம் காத லோனே. | 157 |
காணச்சென்ற நாரை காலையிலிருந்து மாலை வரையில் அங்கேயே தங்கிவிட்டது. அப்படிப்பட்ட சேர்ப்புநிலத் தலைவன் அவன். அவன் வராதவனாக இருந்தவன் வந்துவிட்டான். அவன் என் காதலன் ஆயிற்றே.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும் தண்ணந் துறைவன் கண்டிக்கும் அம்மா மேனிஎம் தோழியது துயரே. | 158 |
காணச் சென்ற நாரை துணை சேர்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட துறைக்கு அவன் தலைவன். அவனை நினைத்துக்கொண்டு என் தோழி (தலைவி) தன் அழகிய மாமைநிறம் கொண்ட மேனி வாடித் துயர் பட்டுக்கொண்டிருக்கிறாளே. – தோழி இப்படிச் சொல்லிக் கவலைப்படுகிறாள்.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப நின்ஒன்று இரக்குவன் அல்லேன் தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. | 159 |
காணச் சென்ற நாரையானது, குருகுப்பிள்ளை இறந்துவிட்டது என்று பசியோடு வருந்திக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சேர்ப்புநிலத் தலைவன் அவன். சேர்ப்பனே! இவள் இழந்த அழகைத் தந்துவிட்டுச் செல் என்று உன்னை ஒன்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ளமாட்டேன். உன் விருப்பம். – தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ பண்டையின் மிகப்பெரிது இனைஇ முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. | 160 |
காணச் சென்ற நாரை உடல் நொந்துபோனது மட்டுமன்றி உள்ளமும் பெரிதும் வருந்திகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட துறையின் தலைவன் நீ. இவள் இப்போது முன்பை விடப் பெரிதும் மயங்கி நொந்துகொண்டிருக்கிறாள். மயக்கம் தீர இவளைத் தழுவிக்கொள். – தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சென்ற, மடநடை, காணிய, நாரை, குருகின், பிள்ளை, செத்தெனக், வெள்ளாங்க், வெள்ளாங், துறைவன், தூவி, சேக்கும், கானலம், நெய்தல், துரைவன், ஒழிந்த