முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 14. பாணற்கு உரைத்த பத்து
ஐங்குறுநூறு - 14. பாணற்கு உரைத்த பத்து
கள்ளக் காதலியிடமிருந்து இல்லம் மீளும் இல்லத் தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு இல்லத் தலைவியைப் பாணன் வேண்டுகிறான். இல்லத்தலைவி ஏற்க மறுத்து அவனுக்குச் சொல்லும் சொற்கள் இவை.
நண்றே பாண கொண்கனது நட்பே தில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாஅக் காலே. | 131 |
பாண! தில்லை மரங்கள் அடர்ந்த வேலி நிலத்தில் கொண்கன் வேறொருத்தியோடு உறவுகொண்டு இருந்ததை ஊர்மக்கள் ஆங்காங்கு பேசிக்கொள்ளாமல் இருந்தபோது அவனோடு எனக்கிருந்த உறவு நன்று.
அம்ம வாழி பாண புன்னை அரும்புமலி கானல் இவ்வூர் அலரா கின்றுஅவர் அருளு மாறே. | 132 |
பாண! புன்னைமரக் கானல்நிலத்தில் அவர் கொண்டிருந்த கள்ளக்காதலி உறவை ஊர் பேசிக்கொள்கிறது. அவர் அருள் இப்படித்தான் இருக்கிறது.
யானெவன் செய்கோ பாண ஆனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனஎன் புரிவளைத் தோளே. | 133 |
பாண! நான் என்ன செய்வேன். புலம்பன் பிரிந்துவிட்டான் என்று தோள் புல் போல் இளைத்துவிட்டதே.
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி நெடுந்தேர்க் கொண்க னோடு தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே. | 134 |
பாண! கொண்கன் குதிரை பூட்டிய தேரில் ஏறி அவளிடம் சென்றுவிட்டான் என்று என் மேனியில் இருள் அழகு (?) வந்துவிட்டதைப் பார்.
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள் ஐதுஅமைந்து அகன்ற அல்குல் நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. | 135 |
பாண! மென்மையான அல்குலும், நெய்தல் மலர் போன்ற கண்ணும் உடைய அவளை நான் பார்ந்து அவளை என் உறவுக்காரியாக ஆக்கிக்கொண்டிருந்தால் என் தோளில் பசலை தோன்றியிருக்காது.
நாணிலை மன்ற பாண நீயே கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே. | 136 |
பாண! உனக்கு வெட்கமே இல்லையா? என் வளையலைக் கழலும்படிச் செய்தவனுக்காகப் பரிந்து பேசுகிறாயே.
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த் திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர் பண்டைத் தந்நலம் பெறுபவோ. | 137 |
பாண! உன்னை ஒன்று கேட்பேன். தேரில் சென்ற என் கொண்கனை விரும்பி வாழ்கிறாளே அவள் அவனைப் பிரிந்தால், என்னைப் போல அழகிழந்து வாடுவாளா?
பண்பிலை மன்ற பாண இவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாரா தோயே. | 138 |
பாண! நீ பண்பே இல்லாதவன். இந்த ஊர் அவனைக் கடிந்து பேசுவது போல நீயும் அவனைக் கடிந்து பேசி என்னிடம் கொண்டுவராதவன் ஆயிற்றே.
அம்ம வாழி கொண்க எம்வயின் மாண்நலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே. | 139 |
கொண்கனே! உன் கள்ள உறவு என்னை அஞ்சும்படி மருட்டுகிறது. உனக்கு உதவிய பாணன் செயலோ என் அழகையெல்லாம் சிதைத்துவிட்டது.
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை துறைகெழு கொண்கன் பிரிந்தென விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. | 140 |
இதோ பார் பாண! நீ இங்கிருந்து போய்விடு. என் கொண்கன் என்னைப் பிரிந்துவிட்டான் என்று என் வளையல்களும் என்னை விட்டுப் பிரிகின்றன. நீயும் பிரிந்து சென்றுவிடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்க, மன்ற, காண்மதி, இவ்வூர், வாழி, அம்ம