ஐம்பெருங் காப்பியங்கள் - மணிமேகலை
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
அரசன் ஆணையின் ஆய் இழை அருளால் நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம் தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான் யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப் பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம் | 20-010 |
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் பொதியில் நீங்கிய பொழுதில் சென்று பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய | 20-020 |
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் 'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான் மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள் காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன் ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து பூத சதுக்கமும் பூ மரச் சோலையும் மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் | 20-030 |
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு 'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் ஆனைத்தீ நோய் அரும் பசி களைய வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப் பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி உதயகுமரன் தன்பால் சென்று நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி | 20-040 |
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது விறல் வில் புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்று வேறாயின கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ நிரை முத்து அனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின | 20-050 |
இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண் உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும் பை போல வீழ்ந்து வேறாயின தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய் நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய் | 20-060 |
வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் ஆவக் கணைக்கால் காணாயோ நீ மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ தளிர் அடி வண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும் | 20-070 |
'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள் ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் | 20-0810 |
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும் களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் 'வளை சேர் செங் கை மணிமேகலையே காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ் வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள் இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து | 20-090 |
வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை உயாவுத் துணையாக வயாவொடும் போகி ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து வேழம் வேட்டு எழும் வெம் புலி போல கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து வேக வெந் தீ நாகம் கிடந்த போகு உயர் புற்று அளை புகுவான் போல ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த | 20-100 |
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் 'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி 'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல்' என்றே அவள்பால் புகுதலும் நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக் | 20-110 |
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் 'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன! மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி வானம் போவழி வந்தது கேளாய் அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால் வரை மீமிசைப் போகார் போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள் சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் விந்தம் காக்கும் விந்தா கடிகை | 20-120 |
அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள் ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய் வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன! அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்' என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் | 20-129 |
21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின் குடவயின் அமைத்த நெடு நிலை வாயில் முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில் கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும் கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' என தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித் | 21-010 |
'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் | 21-020 |
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காயசண்டிகை வடிவு ஆனேன் காதல! வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' என விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும் 'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்! அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்! நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் | 21-030 |
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்! என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும் பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் 'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன் விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும் | 21-040 |
நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின் பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என 'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத் தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும் 'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் பிரமதருமனைப் பேணினிராகி | 21-050 |
"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம்" என்றலும் மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்றத் தோளும் தலையும் துணிந்து வேறாக வாளின் தப்பிய வல் வினை அன்றே | 21-060 |
விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு இராகுலன் தன்னை இட்டு அகலாதது "தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய அவல வெவ் வினை" என்போர் அறியார் அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத் தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை | 21-070 |
ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்! மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக் காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும் இடு சிறை நீக்கி இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி மாதவி மாதவன் மலர் அடி வணங்கித் தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு | 21-080 |
காதலி நின்னையும் காவல் நீக்குவள் அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் தீவதிலகையின் தன் திறம் கேட்டு சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் | 21-090 |
பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் "இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும் முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும் "தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும் "துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும் "பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும் | 21-100 |
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம் அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள் "இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப் பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி" எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை "ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை" | 21-110 |
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்! "அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை "தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் வாயே" என்று மயக்கு ஒழி மடவாய் வழு அறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ? அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்! முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும் | 21-120 |
முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்! மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்! | 21-130 |
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் மாந்தர் அறிவது வானவர் அறியார் ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன் ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ? அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் | 21-140 |
மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என "தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள் ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும் துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன் வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்! மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த | 21-150 |
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின் செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப் பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம் அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பல உள | 21-160 |
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள் தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து "மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றும்காறும் செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும் தாயரும் நீயும் தவறு இன்றுஆக | 21-170 |
வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" என ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத் தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை! | 21-180 |
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்! ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே உவவன மருங்கில் நின்பால் தோன்றி மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி அவதி அறிந்த அணி இழை நல்லாள் வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் | 21-190 |
22. சிறை செய் காதை
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் உதயகுமரற்கு உற்றதை உரைப்ப சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து மாதவர் எல்லாம் மணிமேகலை தனை 'இளங்கொடி! அறிவதும் உண்டோ இது-' என துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து | 22-010 |
மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு 'உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய! வேலும் கோலும் அருட்கண் விழிக்க! தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி! நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே! இன்றே அல்ல இப் பதி மருங்கில் கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து | 22-020 |
பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும் நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும் தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர் பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால் "மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக் கன்னி ஏவலின் காந்த மன்னவன் "இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ "நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக் காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் | 22-030 |
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன் ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய் "அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின் பரசுராமன் நின்பால் வந்து அணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள் தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம் | 22-040 |
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் யாப்பறை என்றே எண்ணினன் ஆகி காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் "நீ வா" என்ன நேர் இழை கலங்கி "மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன் முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் | 22-050 |
"கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன் கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் வான் தரு கற்பின் மனையறம் பட்டேன் யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ" எனச் சேயிழை அரற்றலும் மா பெரும் பூதம் தோன்றி "மடக்கொடி! நீ கேள்" என்றே நேர் இழைக்கு உரைக்கும் "தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் பெரு மழை" என்ற அப் | 22-060 |
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்! பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி கடவுள் பேணல் கடவியை ஆகலின் மடவரல்! ஏவ மழையும் பெய்யாது நிறை உடைப் பெண்டிர் தம்மே போல பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை! ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் | 22-070 |
கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம் மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் பின்முறை அல்லது என் முறை இல்லை ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு" என இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப் பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் தாதை வாளால் தடியவும் பட்டனன் இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த | 22-080 |
மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே! தருமதத்தனும் தன் மாமன் மகள் பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித் தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் "மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ புனையா ஓவியம் புறம் போந்தென்ன மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை உலக அறவியினூடு சென்று ஏறி | 22-090 |
"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்! உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என "மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும் "தெய்வம் காட்டித் தௌித்திலேன் ஆயின் மையல் ஊரோ மன மாசு ஒழியாது மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் | 22-100 |
தருமதத்தனும் தந்தையும் தாயரும் பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி "தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத் தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் தருமதத்தனும் "தன் மாமன் மகள் விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக!" எனக் கொண்ட விரதம் தன்னுள் கூறி | 22-110 |
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் அந்தணாளன் ஒருவன் சென்று "ஈங்கு என் செய்தனையோ இரு நிதிச் செல்வ? 'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் புத்தேள் உலகம் புகாஅர்' என்பது கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின் நீட்டித்திராது நின் நகர் அடைக!" எனத் | 22-120 |
தக்கண மதுரை தான் வறிது ஆக இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே! மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பால் சென்று "நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன | 22-130 |
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ? உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய் இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத் துணை ஆவது தானம் செய்' என தருமதத்தனும் மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி | 22-140 |
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள் அமரன் அருளால் அகல் நகர் இடூஉம் படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல் மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச் சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த விரி பூ மாலை விரும்பினன் வாங்கி | 22-150 |
"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய செங் கை நீலக் குஞ்சி நீங்காது ஆகலின் "ஏறிய செங் கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு" எனக் ககந்தன் கேட்டுக் கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழி எம் கோ மன்னவ! என்று | 22-160 |
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் "இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர் இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப 'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் 'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் கடியப் பட்டன ஐந்து உள அவற்றில் | 22-170 |
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளாது ஆகும் காமம் "தம்பால் ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் நீங்கார் அன்றே நீள் நில வேந்தே! தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள் காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் | 22-180 |
முற்றா முலையினள் முதிராக் கிளவியள் "செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும் ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும் நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமம் காழ்கொள ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் காயசண்டிகை தன் கணவன் ஆகிய | 22-190 |
> வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி "ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன்" என ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின் மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன் உதயகுமரன் ஒழியானாக ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து காயசண்டிகை தன் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் "விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என | 22-200 |
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி 'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத் தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் ` "மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் | 22-210 |
துயர் வினையாளன் தோன்றினான்" என்பது வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம் ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன் அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் | 22-215 |
23. சிறை விடு காதை
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத் தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி | 23-010 |
'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து "செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க" என மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது? மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின் | 23-020 |
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து 'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள் 'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும் அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச் சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச் | 23-030 |
'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு' என்பது அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச் செறிந்த சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல 'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு 'அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே | 23-040 |
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக் கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் 'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன் இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து "பொருந்தினள்" என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் | 23-050 |
'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி 'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் 'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று 'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப | 23-060 |
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன் என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ 'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் | 23-070 |
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு? பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி! எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் மற்று உன் மகனை மாபெருந்தேவி | 23-080 |
செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே "யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின் பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து | 23-090 |
மற்றும் உரை செயும் மணிமேகலை தான் 'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன் கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன் ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது? அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும் சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து | 23-100 |
தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால் தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியொடு தான் வேறாகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான் | 23-110 |
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும் சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக் கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் | 23-120 |
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? 'களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர் இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் கற்ற கல்வி அன்றால் காரிகை! | 23-130 |
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என ஞான நல் நீர் நன்கனம் தௌித்து தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2 | 23-140 |
அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப தேறு படு சில் நீர் போலத் தௌிந்து மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை' காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என் | 23-147 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - பிறப்பு, சென்று, எல்லாம், விஞ்சையன், தெய்வம், எழுந்து, பொருள், கொண்டு, கேட்டு, மாதவர், நல்லாய், மாதவன், கேளாய், மன்னவன், காயசண்டிகை, காணாய், ஆயினும், மணிமேகலை, உரைக்கும், நீங்கி, காரிகை, உரைத்தலும், உரைத்த, வாளால், தோன்றி, அறிதியோ, உரைத்து, வேந்தன், ககந்தன், நெடுங், இருந்த, என்பது, கடவுள், நின்பால், தனக்கு, எழுதிய, எனக்கு, தருமதத்தனும், துன்பம், யாங்கு, உயிர்க்கு, வேந்தே, இளங்கொடி, இன்னும், என்போர்களும், உற்றதை, நிலைக், மயக்கு, கந்தின், வஞ்சம், மருங்கில், உணங்கல், கட்டுரை, காணாயோ, காட்டி, கோட்டம், ஆதலின், அருளால், வேந்து, துவதிகன், பலரால், உணர்ந்தோர், மந்திரம், வண்ணம், காஞ்சனன், தீவினை, தம்முள், ஓங்கிய, தொழுது, ஆகலின், பொதியில், பொருட்டால், அடைந்த, நல்லாள், என்னும், தாரோன், அறவணன், செய்து, கொள்ளேல், நின்னையும், யாமத்து, மலர்க், காக்கும், கோயில், பெரும், வந்தனன், அம்பலம், காஞ்சன, அயர்ந்து, நினக்கு, தெய்வக், ஒழியாது, அந்தரம், கூந்தல், முதிர், நெஞ்சு, காதலன், மகற்கு, செல்லல், பண்டும், காவலன்