ஐம்பெருங் காப்பியங்கள் - மணிமேகலை
6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் சான்றோர் தம் கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர் வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல் கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் | 06-010 |
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி 'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் 'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் | 06-020 |
பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறு புழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடு நவை எய்தாது அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப 'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும் அம் செஞ் சாயல் நீயும் அல்லது நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் | 06-030 |
சக்கரவாளக் கோட்டம் அஃது என மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன் ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன் 'மாதவி மகளொடு வல் இருள் வரினும் நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந் நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் | 06-040 |
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர் | 06-050 |
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும் அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால் வேறு வருணப் பால் வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் | 06-060 |
நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர் தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி | 06-070 |
> நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும் பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும் நீள் முக நரியின் தீ விளிக் கூவும் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும் ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும் நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின் இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி | 06-080 |
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும் சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில் | 06-090 |
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர் ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் | 06-100 |
அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல் அறம் விரும்பாது வாழும் மக்களின் சிறந்த மடவோர் உண்டோ? ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன் என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு | 06-110 |
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் கடகம் செறித்த கையைத் தீநாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும் சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி | 06-120 |
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக் கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்கு எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின் வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" என | 06-130 |
தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் "பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை யாரும் இல் தமியேன் என்பது நோக்காது ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ? துறையும் மன்றமும் தொல் வலி மரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய் தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில் | 06-140 |
கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற "கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற "ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என "அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா | 06-150 |
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும் "என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என் கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் "ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்? ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் | 06-160 |
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் 'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய் உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்! நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும் "தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும் மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின் | 06-170 |
யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என "ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது ஆழித் தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்! ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றே நால் வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையில் உரூபப் பிரமரும் இரு வகைச் சுடரும் இரு மூவகையின் பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் | 06-180 |
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி "அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச் சம்பாபதி தான் உரைத்த அம் முறையே எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின் சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற | 06-190 |
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில் சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையின் நின்ற எழு வகைக் குன்றமும் நால் வகை மரபின் மா பெருந் தீவும் ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும் பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும் பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து | 06-200 |
மிக்க மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண் இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்க மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத் தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ | 06-210 |
அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் | 06-214 |
7. துயிலெழுப்பிய காதை
மணிமேகலை தனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட உதயகுமரன் உறு துயர் எய்தி 'கங்குல் கழியின் என் கை அகத்தாள்' என பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி 'மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை | 07-010 |
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத் திறம் ஒழிக' என்று அவன்வயின் உரைத்த பின் உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி 'இந்திர கோடணை இந் நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் | 07-020 |
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர் ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள் ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் | 07-030 |
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் உரையாய் நீ அவள் என் திறம் உணரும் "திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என் நாமம் செய்த நல் நாள் நள் இருள் "காமன் கையறக் கடு நவை அறுக்கும் மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன் ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை' என்று அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின் | 07-040 |
வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது | 07-050 |
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக் காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும் | 07-060 |
கா உறை பறவையும் நா உள் அழுந்தி விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள் கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின் யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழி யானை நெடுங் கூ விளியும் தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர் | 07-070 |
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும் அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து 'கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க' என இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் | 07-080 |
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் 'மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க' என நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும் பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில் திருந்து எயில் குடபால் சிறு புழை போகி மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த | 07-090 |
சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண் பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் உலக அறவியின் ஒரு புடை இருத்தலும் கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் 'இரவிவன்மன் ஒரு பெரு மகளே! துரகத் தானைத் துச்சயன் தேவி! தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற | 07-100 |
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்! காராளர் சண்பையில் கௌசிகன் மகளே! மாருதவேகனோடு இந் நகர் புகுந்து தாரை தவ்வை தன்னொடு கூடிய வீரை ஆகிய சுதமதி கேளாய்! இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் அஞ்சல்' என்று உரைத்தது அவ் உரை கேட்டு நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள் | 07-110 |
காவலாளர் கண் துயில்கொள்ளத் தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப் புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப் பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப் பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப் பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக் | 07-120 |
கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக் கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக் குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக் கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த மா நகர் வீதி மருங்கில் போகி போய கங்குலில் புகுந்ததை எல்லாம் மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் | 07-130 |
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதி தான் என் | 07-134 |
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் முத்து விளை கழனி முரி செம் பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் | 08-010 |
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித் துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி காதல் சுற்றம் மறந்து கடைகொள வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் கண்டு அறியாதன கண்ணில் காணா நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப 'உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது! சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை! | 08-020 |
நனவோ கனவோ என்பதை அறியேன்! மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்! வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ? விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்! ஒரு தனி அஞ்சுவென் திருவே வா!' எனத் திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் அன்னச் சேவல் அரசன் ஆக | 08-030 |
பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி பாசறை மன்னர் பாடி போல வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி 'எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப | 08-040 |
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து ஐயாவோ!' என்று அழுவோள் முன்னர் விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று விதி மாண் நாடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி 'அறவோற்கு அமைந்த ஆசனம்' என்றே நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது | 08-050 |
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி 'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார் தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத் தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள் 'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றே | 08-060 |
பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் | 08-063 |
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள் காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன தலைமேல் குவிந்த கையள் செங் கண் முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின் இடமுறை மும் முறை வலமுறை வாரா கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து 'தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்! காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் | 09-010 |
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப் பூருவ தேயம் பொறை கெட வாழும் அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதருமன்! ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் "தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே! பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர் | 09-020 |
நாக நல் நாட்டு நானூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் இதன்பால் ஒழிக" என இரு நில வேந்தனும் மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் "ஆவும் மாவும் கொண்டு கழிக" என்றே பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு இடவயம் என்னும் இரும் பதி நீங்கி வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன் காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப | 09-030 |
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத் தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும் மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச் சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள் அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவிவன்மன் ஒரு பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று | 09-040 |
இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் நீலபதி எனும் நேர் இழை வயிற்றில் காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் "எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை | 09-050 |
ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் வேக வெந் திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து | 09-060 |
பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தௌிவாய்" என, சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன் "காதலன் பிறப்புக் காட்டாயோ?" என "ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம் பாங்கில் தோன்றி 'பைந்தொடி! கணவனை ஈங்கு இவன்' என்னும்" என்று எடுத்து ஓதினை ஆங்கு அத் தெய்வதம் வாராதோ?" என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் | 09-071 |
10. மந்திரம் கொடுத்த காதை
'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' என விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப 'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச் சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர் | 10-010 |
இள வள ஞாயிறு தோன்றியதென்ன நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம் நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றே வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப் பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி 'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும் 'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு | 10-020 |
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின் இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன் மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன் தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன் வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச | 10-030 |
இராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும் விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா "வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது நா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடு பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு "அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும் அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாம் உன் குறிப்பினம்" என்றலும் "எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க" என அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1 | 10-040 |
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின் கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன் இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின் | 10-050 |
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின் கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி மற வணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை "ஈங்கு வந்தீர் யார்?" என்று எழுந்து அவன் பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் | 10-060 |
"ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் மா துயர் எவ்வம் மக்களை நீக்கி விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக தொன்று காலத்து நின்று அறம் உரைத்த குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப் பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும்" என | 10-070 |
அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின் மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர் அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம் அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள் இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் | 10-080 |
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல் மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி 'மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி நின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி 'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து 'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய் மக்கள் யாக்கை உணவின் பிண்டம் | 10-090 |
இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்று ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் | 10-093 |
11. பாத்திரம் பெற்ற காதை
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் மணிபல்லவத்திடை மணிமேகலை தான் வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் காவதம் திரிய கடவுள் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றிக் 'கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய இலங்கு தொடி நல்லாய்! யார் நீ?' என்றலும் 'எப் பிறப்பு அகத்துள் "யார் நீ" என்றது பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்! | 11-010 |
போய பிறவியில் பூமி அம் கிழவன் இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம் மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும் ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த தீவதிலகை செவ்வனம் உரைக்கும் | 11-020 |
'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் தீவதிலகை என் பெயர் இது கேள் தரும தலைவன் தலைமையின் உரைத்த | 11-030 |
பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர் கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி உரியது உலகத்து ஒருதலையாக ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள் ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து | 11-040 |
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய் அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது நின்னாங்கு வருவது போலும் நேர் இழை! ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும் | 11-050 |
நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண் அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்' என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி தீவதிலகை தன்னொடும் கூடி கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும் எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில் தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும் பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள் மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி | 11-060 |
'மாரனை வெல்லும் வீர! நின் அடி தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி | 11-070 |
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!" என்ற ஆய் இழை முன்னர் போதி நீழல் பொருந்தித் தோன்றும் நாதன் பாதம் நவை கெட ஏத்தித் தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும் 'குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் | 11-080 |
இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் அரும் பசி களைய ஆற்றுவது காணான் திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி | 11-090 |
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ? ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி | 11-100 |
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி | 11-110 |
வெயில் என முனியாது புயல் என மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் | 11-120 |
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை ஈங்கு நின்று எழுவாய்' என்று அவள் உரைப்பத் தீவதிலகை தன் அடி வணங்கி மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக் கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு வானூடு எழுந்து மணிமேகலை தான் 'வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழு நாள் வந்தது என் மகள் வாராள்! வழுவாய் உண்டு!' என மயங்குவோள் முன்னர் | 11-130 |
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் 'இரவிவன்மன் ஒரு பெரு மகளே! துரகத் தானைத் துச்சயன் தேவி! அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் வாய்வதாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு அறவண அடிகள் தம்பால் பெறுமின் | 11-140 |
செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்!' என தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் 'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என் | 11-146 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - பிறப்பு, தெய்வம், பெரும், எழுந்து, பீடிகை, உரைத்த, எல்லாம், என்றலும், ஓதையும், பெருந், சுதமதி, என்னும், தோன்றிய, பாத்திரம், எய்திய, நின்று, கொண்டு, மணிமேகலை, கோட்டம், கேளாய், மன்றமும், மாக்கள், இராகுலன், உரைக்கும், துயில், சென்று, தீவதிலகை, மருங்கில், அல்லது, தோன்றி, இலக்குமி, விளங்கு, மணிபல்லவத்திடை, மரபின், மணிமேகலா, பரந்து, ஆயினும், வாயிலும், சக்கரவாளக், மருங்கின், தன்னொடு, பொருள், காட்டி, எடுத்து, திருந்து, ஆதலின், உணர்ந்து, நாளில், வேந்தன், மலர்க், இளங்கொடி, பறவையும், குன்றமும், பூம்பொழில், அகத்து, நடுக்குறூஉம், ஓங்கிய, வழங்கு, யாங்கணும், முன்னர், மாதவன், வெயில், தொழுது, பாங்கு, அறுக்கும், போன்று, கடிப்பகை, செவ்வனம், காதலன், உணர்ந்தேன், மகளிர், துச்சயன், இரவிவன்மன், மந்திரம், உலகத்து, சேயிழை, நாட்டு, நெடுங், அகவயின், அடைகரை, பெயர்த்து, காரணம், அறியேன், தூங்கு, பெருங், ஒருங்கு, கோட்டமும், உரையார், ஒழித்து, பொழில், பின்னர், முதல்வன், பைந்தொடி, உரைத்தலும், நல்லாள், கடவுள், சாற்றி, நீங்கி, புறங்காட்டு, பொருந்தித், அந்தரம், வந்தேன், நீக்கி, சம்பாபதி, வீழ்ந்து, குரலும், நெஞ்சு, நீர்ப், பெருஞ், சிறந்த, பெண்டிர், தோன்றும்